சென்னை : பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தஞ்சைச் சார்ந்த பி.ஸ்ரீராம் முதலிடம். பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி மற்றும் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் 584 உள்ளன. இந்த கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்த உள்ளது.
என்ஜினீயரிங் படிப்புக்கு 1லட்சத்து 41 ஆயிரத்து 77 பேர் விண்ணப்பித்தனர். இதில் 1 லட்சத்து 36 ஆயிரத்து 988 பேர் மட்டுமே தகுதி பெற்றனர். அவர்களில் ஆண்கள் 85 ஆயிரத்து 950பேர், பெண்கள் 51 ஆயிரத்து 950 பேர்.
தரவரிசை பட்டியல்
என்ஜினீயரிங் கலந்தாய்விற்கு விண்ணப்பித்தவர்களில் முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் 1146 பேர், மாற்றுத்திறனாளிகள் 227 பேர், விளையாட்டு மாணவர்கள் 2082 பேர் மற்றும் 70 ஆயிரத்து 769 முதல் தலைமுறை பட்டதாரிகள் ஆவர். என்ஜினீயரிங் படிப்பிற்கான ரேண்டம் எண் ஜூன் 20ந் தேதி வெளியிடப்பட்டது. தரவரிசைப் பட்டியலை நேற்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் அண்ணா பல்கலையில் வெளியிட்டார்.
கலந்தாய்வு தள்ளி வைப்பு
பொறியியல் கலந்தாய்வு ஜூன் 27ந் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. மருத்துவ கலந்தாய்வு ஜூலை 3வது வாரம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு மருத்துவ கலந்தாய்வு முடிந்த பிறகு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் பொறியியல் தரவரிசைப் பட்டியலில் 59 பேர் 200க்கு 200 கட்ஆப் எடுத்துள்ளனர். அதில் 36 பேர் இன்று வெளியான நீட் தேர்வு முடிவை எதிர்ப்பார்த்து காத்திருந்தவர்கள்.
மருத்துவ கலந்தாய்விற்கு பின் பொறியியல் கலந்தாய்வு
199 கட் ஆப் மதிப்பெண்ணை 811 பேர் எடுத்துள்ளனர். அவர்களில் 645 பேர் மருத்துவ படிப்புக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. 198 கட் ஆப் மதிப்பெண்ணை 2097 பேர் எடுத்துள்ளனர். அதில் 1681 பேர் மருத்துவம் செல்ல வாய்ப்பு உள்ளது. 197 கட் ஆப் மதிப்பெண்ணை 3766 பேர் எடுத்துள்ளனர். அவர்களில் 3016 பேர் மருத்துவ படிப்புக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே மருத்துவ கலந்தாய்விற்கு பின் பொறியியல் கலந்தாய்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரவரிசை பட்டியலில் முதல் 10 இடம் பிடித்தவர்கள்
என்ஜினீயரிங் ரேங்க் பட்டியலில் (பொது கல்வி) இடம் பெற்ற முதல் 10 மாணவ மாணவிகள் விபரம் - தஞசாவூரைச் சார்ந்த பி.ஸ்ரீராம் முதல் இடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார். திருப்பூரைச் சார்ந்த எம்.ஹரிவிஷ்ணு இரண்டாவது இடம் பிடித்துள்ளார். சென்னையைச் சார்ந்த வி.சாய்ராம் மூன்றாவது இடத்தைப் பிடித்து உள்ளார். சேலத்தைச் சார்ந்த ஆர்.எஸ். கிருத்திகா 4வது இடம், திருவள்ளூரைச் சார்ந்த டி.யுவனேஷ் 5வது இடம், கோவையைச் சார்ந்த எஸ்.வி.பிரீத்தி 6வது இடம், கீர்த்தனா ரவி 7வது இடம். சேலத்தைச் சார்ந்த டி.சத்தீஷ்வர் 8வது இடம், பி.ஷோபிலா 9வது இடம், தர்மபுரியைச் சார்ந்த பி.சவும்யா 10வது இடத்தையும் பெற்றுள்ளனர். 200க்கு 200 கட்ஆப் மதிப்பெண் பெற்றவர்கள்.
தொழிற்கல்வி ரேங்க் பட்டியலில் முதல் 5 இடம் பிடித்தவர்கள்
தொழிற்கல்வி ரேங்க் பட்டியலில் முதல் 5 இடம் பெற்றவர்கள் விபரம் - நாமக்கல்லைச் சார்ந்த பி.அஜீத் (199.83) முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார். அதே பகுதியைச் சார்ந்த எஸ்.ஷைலஸ்ரீ (198.83) 2வது இடமும், சென்னையைச் சார்ந்த டி.பாலாஜி (198.83 3வது இடமும், கோவையைச் சார்ந்த கே.ஆகாஷ் (198.67) 4வது இடமும், கிருஷ்ணகிரியைச் சார்ந்த ஜே.குருமூர்த்தி (198.67) 5வது இடமும் பெற்றுள்ளனர்.