கொரோனா தொற்றின் காரணமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு தொடர்ந்து அமலிலிருந்து வருகிறது. இந்த ஊரடங்கில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது கல்வியே. பள்ளி, கல்லூரிகள் பல மாதங்களாக மூடப்பட்ட நிலையிலேயே உள்ளன.

இந்த நிலையில், இந்த ஊரடங்கு விரைவில் முடிவுக்கு வரும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தொடக்க கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் காரணமாக கடந்த ஆண்டு தொடக்கம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அது ஒரு வருடத்தைக் கடந்து தற்போதும் அமலிலிருந்து வருகிறது. இதனிடையே, தற்போது கொரோனா இரண்டாம் அலையாக பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் இரண்டாம் அலை
குறிப்பாக, தமிழகத்தில் இந்நோய் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் வரையில் தமிழகத்தில் பாதிக்கப்படுகின்றனர்.
பள்ளிகள் திறப்பு எப்போது?
இந்நோய்த் தொற்றினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது பள்ளி, கல்லூரி போன்ற கல்வி சார்ந்த துறைகளே. மாணவர்கள் ஒரு ஆண்டிற்கும் மேலாக பள்ளி செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். ஆன்லைன் வழியிலேயே கல்விகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தேர்வின்றி தேர்ச்சி
இதனிடையே, ஜூன் ஒன்றுடன் புதிய கல்வி ஆண்டு தொடங்கியுள்ள நிலையில் கடந்த கல்வியாண்டு தேர்வு குறித்தும், மாணவர்கள் தேர்ச்சி குறித்தும் பள்ளிக் கல்வித் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளது.
தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை
இதுகுறித்து தொடக்க கல்வி இயக்குநர் விடுத்துள்ள அறிக்கையில், மேற்படி, பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், தங்கள் பள்ளி தேர்ச்சி பற்றிய பதிவுகளை மேற்கொண்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கத் தேவையான அறிவுரைகளை மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு
மேலும், இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்களை deesectionsgmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் உத்தரவிடப்பட்டுள்ளது.
12ம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது?
ஒன்று முதல் 8ம் வகுப்பு வரையில் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடத்துவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இதனால், உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு வகுப்புகள் கால தாமதமாகும் சூழல் உருவாகியுள்ளது.
விரைவில் பொதுத் தேர்வு
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், கொரோனா தொற்றின் தாக்கம் எந்த அளவுக்கு விரைவாகக் குறைகிறதோ அதற்கேற்ப விரைவாக பொதுத் தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களின் எதிர்காலம் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு அவர்களது உடல்நலனும் உயிரும் முக்கியம் என்று கூறினார்.
தமிழக முதலமைச்சர் ஆலோசனை
இந்நிலையில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் ஆகியோர் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
விரைவில் திறக்கப்படும் பள்ளிகள்
இந்த நிலையில், கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தொற்றின் பாதிப்பு குறைந்த பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், மாணவர்களுக்கான விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் இதர நலத்திட்டங்கள் பள்ளிகள் திறந்த உடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












