தேர்விற்கு முந்தைய செய்முறை தேர்வுகளில், எந்த விதிமீறலுக்கும் இடம் தரக்கூடாது என ஆசிரியர்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, கடந்த பிப்ரவரி 1ம் தேதியன்று துவங்கிய செய்முறைத் தேர்வு வரும் 12ம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து, வரும் பிப்ரவரி 13ம் தேதியன்று 11ம் வகுப்பிற்கும், 21ம் தேதியன்று 10ம் வகுப்பிற்கும் செய்முறை தேர்வுகளை துவக்கி இரண்டு வாரங்களில் முடிக்க, தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, பல பள்ளிகளில் விதிமுறைகளை கடைப்பிடிக்காமலும், எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி செய்முறை தேர்வை நடத்துவதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, அனைத்து மாணவர்களுக்கும் செய்முறைத் தேர்விற்கான முழு மதிப்பெண்யையும் வழங்கி விடுவதாக புகார் பெறப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, தேர்வுத்துறை சார்பில் பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில், செய்முறை தேர்வை மாணவர்களின் திறன் அறியும் வகையில் நடத்த வேண்டும். அதற்கு முன், ஆய்வக உபகரணங்கள், இரசாயன பொருட்களை பிரித்தறியும் திறன் இருக்கும் வகையில், பயிற்சிகளை முறையாக வழங்க வேண்டும். இத்தேர்வுகளில் விதிமீறலுக்கு இடம் தரக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.