கொரோனா தொற்றின் காரணமாக சிபிஎஸ்இ உள்ளிட்ட பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நடத்தமுடியாமல் போன நிலையில், சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இனி வரும் கல்வி ஆண்டு இரண்டு பருவங்களாக பிரிக்கப்பட்டு, மாணவர்களுக்கு இரண்டு பருவங்களாக இறுதித் தேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ரத்து செய்யப்பட்ட தேர்வுகள்
கடந்த 2020 ஆண்டு தொடக்கத்தில் இருந்து பரவி வரும் கொரோனா தொற்றின் காரணமாக பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து மாணவர்களின் கல்வியும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
சிபிஎஸ்இ புதிய முடிவு
பொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையின் காரணமாக சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் தேர்வுகள் நடத்தப்படாமல் போவதை தவிர்க்க சிபிஎஸ்இ அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
ஆண்டுக்கு இரண்டு தேர்வு
சிபிஎஸ்இ தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் இனி சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி ஆண்டு இரண்டு பருவங்களாக பிரிக்கப்பட்டு முதல் பாதியில் 50 சதவிகித பாடங்களுக்கான தேர்வும், பின் மீதி பாதி பாடங்கள் நடத்தப்பட்டு அதற்கான தேர்வுகள் நடக்கும்.
கல்லூரி செமஸ்டர் போல
கல்லூரிகளில் நடத்தப்படும் செமஸ்டர் தேர்வுகளைப் போலவே சிபிஎஸ்இ பள்ளியில் இனி இரண்டு பருவங்களாக இறுதி தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் 2021-22 கல்வி ஆண்டிற்கான 10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ முதல் டெர்ம் தேர்வு நவம்பர் - டிசம்பர் மாதத்திலும், இரண்டாம் டெர்ம் தேர்வு அடுத்த வருடம் மார்ச்- ஏப்ரலிலும் நடக்கும்.
பிரிக்கப்படும் பாடங்கள்
மேற்குறிப்பிட்ட நடைமுறையின்படி தேர்வுகளை நடத்த பாடங்கள் 50 சதவிகிதமாக பிரிக்கப்படவுள்ளது. இதற்கென வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, அவர்களின் அறிவுறுத்தலின்படி பாடங்கள் பிரிக்கப்பட்டு கற்பிக்கப்படும். இதில் முதல் டெர்ம் தேர்வு நாடு முழுக்க 4-8 வார இடைவெளியில் நடத்தவும், 2022ல் நடக்க உள்ள இரண்டாவது டெர்ம் தேர்வு நாடு முழுக்க ஒரே நாளில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தேதிகள் பின்னர் சிபிஎஸ்இ மூலம் அறிவிக்கப்படும்.
இன்டர்னல் மார்க்
மேலும், இன்டர்னல் மார்க்குகளை முடிவு செய்யும் முறையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மொத்த கல்வி ஆண்டிற்கு சேர்த்து மொத்தமாக சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இன்டர்னல் மார்க் முடிவு செய்யப்படும். 3 பீரியட் டெஸ்ட், மாணவர்கள் நடத்தை, செய்முறைத் தேர்வு, புராஜக்ட் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் மதிப்பெண் முடிவு செய்யப்படும்.
பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு
இன்டர்னல் மதிப்பெண் சிபிஎஸ்இ பள்ளியின் இணைய பக்கத்தில் அதிகாரபூர்வமாக பதிவேற்றப்படும். இன்டர்னல் மார்க்குகளின் மதிப்பீட்டை தரமாக்க இந்த முறை கொண்டு வரப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பு குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும். கொரோனா பாதிப்பு முற்றிலும் சீரடையும் வரையில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.