சென்னை : குரூப் 2ஏ தேர்விற்கு விண்ணப்பிக்க மே 26ந் தேதி நேற்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக டிஎன்பிஎஸ்சி இணையதளம் சரியாக வேலை செய்யவில்லை அதனால் விண்ணப்பிக்க முடியவில்லை என பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். மறு வாய்ப்பு வழங்க வேண்டும் என விண்ணப்பதாரர்கள் தெரிவித்துளளனர்.
நேர்முக தேர்வு இல்லாத டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வுக்கான காலிப்பணியிடங்களுக்கு வழக்கமாக அதிகமானோர் விண்ணப்பிப்பார்கள். அதன்படி 41 துறைகளில் 1953 காலிப்பணியிடங்கள் குரூப் 2 ஏ தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளது.
குரூப் 2ஏ தேர்விற்கு நேற்று கடைசி நாள் என்று தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக சர்வர் சரியாக வேலை செய்யவில்லை என்று விண்ணப்பிக்க விரும்பிய பலரும் குறை கூறியிருக்கிறார்கள்.
விண்ணப்பதாரர்கள் ஏமாற்றம்
குரூப் 2ஏ தேர்விற்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்றுதான் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க முயற்சித்தவர்களில் பெரும்பாலானோருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இணையதளம் சர்வர் பிரச்சனையால் சரியாக வேலை செய்யவில்லை என்று விண்ணப்பிக்க முயற்சித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இணையதளத்தில் சிக்கல்
வேலை சுமை, நேரமின்மை மற்றும் பல காரணங்களினால் நிறைய விண்ணப்பதாரர்கள் கடைசி நாட்களில் அதிகமாக விண்ணப்பிப்பார்கள். ஆனால் கடைசி இரண்டு நாட்களில் சரியாக டிஎன்பிஎஸ்சி இணையதளம் வேலை செய்யாததால் பலபேர் விண்ணப்பிக்க முடியாமல் இருக்கிறார்கள். நேற்று 12 மணி வரை வேலை செய்திருக்க வேண்டிய இணையதளம் சரியாக வேலை செய்யவில்லை.
கடைசி நாளில் விண்ணப்பித்தவர்கள் தவிப்பு
குரூப் 2ஏ தேர்விற்கு இணையதள வழியாகதான் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் இணையதளத்தில் ஏற்பட்ட சிக்கல்களால் பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் குரூப் 2ஏ தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். நேர்முகத் தேர்வு இல்லாத குரூப் 2ஏ தேர்வில் வெற்றி பெற்றால் மட்டும் போதும் வேலைக் கிடைத்துவிடும் என்ற நிலை உள்ளதால் பெரும்பாலானோர் கடைசி ஓரிரு தினங்களில் முயற்சித்திருக்கின்றனர்.
மறு வாய்ப்பு
ஆனால் கடைசி இரண்டு நாட்கள் முயற்சித்தவர்களுக்கு வெறும் ஏமாற்றம்தான் கிடைத்துள்ளது. தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இணையதளத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளைக் குறித்து விசாரித்து இதற்கு நல்ல முடிவை உண்டு பண்ண வேண்டும் என்று விண்ணப்பதாரர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். ஆகஸ்ட் மாதம்தான் தேர்வு என்பதால் இன்னும் ஒரு முறை குரூப் 2ஏ தேர்விற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். இதனால் பல விண்ணப்பதாரர்கள் பயன்அடைவார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மறு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆகஸ்ட் 6 தேர்வு
தேர்வுக்கட்டணத்தை மே 29ம் தேதி வரை தபால் அல்லது வங்கி அலுவலகங்கள் மூலம் செலுத்தலாம். குரூப் 2 ஏ தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு உட்படுத்தப்படாமல் நேரடியாக பணியில் நியமிக்கப்படுவர். எனவே மற்ற டிஎன்பிஎஸ்இ தேர்வுகளை விட இதற்கு அதிகமான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிப்பார்கள்.தனி எழுத்தர், பல்வேறு துறைகளில் உதவியாளர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 6ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மனை வரை தேர்வு நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.