சென்னை: பள்ளி மாணவர்கள் முன்கூட்டியே புத்தகம் வாங்குவதால், பள்ளிகள் திறந்த பிறகே புத்தகங்களை விற்பனை செய்ய தமிழ்நாடு பாடநூல் கழகம் முடிவு செய்துள்ளது.
புத்தகம் கிடைக்காவிட்டால் அந்தந்த பள்ளிகளே பொறுப்பு என்றும் பாடநூல் கழக இயக்குநர் தெரிவித்துள்ளார். இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை கல்லூரி சாலையில் டிபிஐ வளாத்தில் தமிழ்நாடு பாடநூல் கழகம் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அனைத்து வகை பாடப்புத்தகங்களையும் இந்த பாடநூல் கழகம் தான் அச்சிட்டு வழங்கி வருகிறது.
அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் இலவச பாடநூல்கள் அனைத்தும் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் 22 குடோன்களில் இருந்து அந்தந்த மாவட்டத்துக்கு சென்றுவிடும். தவிரவும், சில்லறை விற்பனையில் புத்தகங்கள் விற்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பாடப்புத்தகம் விற்பனை நிலையங்களுக்கும் பாடப்புத்தகம் சப்ளை செய்யப்படும்.
தனியார் கடைகளில் புத்தகங்கள் கிடைக்காவிட்டால் தமிழ்நாடு பாடநூல் கழக கட்டிடத்தில் இயங்கும் புத்தக விற்பனை பிரிவில் பாடப் புத்தகங்கள் விலைக்கு வாங்கிக் கொள்ளும் வசதிகள் கடந்த ஆண்டு வரை இருந்தது.
இப்போது தேர்வுகள் நடக்கின்றன. 23ம் தேதிக்கு பிறகு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் இப்போதே அடுத்த ஆண்டுக்கான வகுப்புகளை நடத்த தொடங்கிவிட்டனர். அதனால் முன்கூட்டியே புத்தகங்கள் வாங்கி வர வேண்டும் என்று பள்ளி ஆசிரியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதனால் தமிழ்நாடு பாடநூல் கழகத்துக்கு பெற்றோர் படையெடுக்கின்றனர். நிலைமை இப்படி இருக்க தமிழ்நாடு பாடநூல் கழகமோ புத்தகங்களை விற்க தடை விதித்துள்ளது.
தமிழ்நாடு பாடநூல் கழக கட்டிடத்தின் கீழ் இயங்கும் விற்பனைப் பிரிவில் இப்போதைக்கு விற்பனை இல்லை என்றும், பள்ளி திறந்த பிறகே புத்தகங்கள் விற்பனை செய்யப்படும் என்றும் அதன் இயக்குநர் மைதிலி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
அதனால் மாணவ மாணவியருக்கு புத்தகங்கள் கிடைக்காவிட்டால் அதற்கு பள்ளியும், ஆசிரியர்களுமே பொறுப்பு என்றும் கூறுகிறார். இதனால் பெற்றோரும், மாணவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.