சென்னை : கடும் வெயில் காரணமாக பள்ளிக்கூடங்கள் திறக்கும் தேதியை தள்ளிப்போடலாமா? என அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் அனைத்தும் ஜூன் 1-ந் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. பள்ளிகள் திறக்க இன்னும் ஒரு வாரம் தான் உள்ளது.
ஆனால் தமிழகத்தில் பல இடங்களில் வெயில் கடுமையாக உள்ளது. வெயிலின் தாக்கத்தினால் பள்ளிக்கூடங்கள் திறப்பு தள்ளிப் போகும் என பெற்றோர்கள், மாணவர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.
தண்ணீர் தட்டுப்பாடு
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்தது. இதன் காரணமாக ஏரிகள், குளங்களில் தண்ணீர் வற்றின. நிலத்தடி நீரும் குறைந்து விட்டது. பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. சென்னையிலும் பல இடங்களில் கடும் தண்ணீர் தட்டுப்பாடுக் காணப்படுகிறது. தமிழ்நாட்டில் பல கிராமங்களில் தண்ணீருக்காக பல மைல் தூரம் செல்ல வேண்டியிருக்கிறது.
கிராமப்புற மாணவர்கள்
இதன் காரணமாக தமிழகத்திலுள்ள பல பள்ளிகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை இருக்கிறது. மாணவ-மாணவிகள் குடி நீருக்கே அவதிப்பட நேரிடும். கிராமப்புறத்தில் உள்ள பள்ளிகளில் பெரும் தண்ணீர் தட்டுப்பாடு இருப்பதால் அவர்கள் அதிகமாக அவதிக்குள்ளாவார்கள்.
பெற்றோர்களின் கோரிக்கை
கடுமையான வெயில் காரணமாக பள்ளிக்கூடங்களுக்கு வரும் மாணவ-மாணவிகள் சோர்வு அடையும் நிலை ஏற்படும். மயக்கம் மற்றும் தலைவலி போன்றவற்றாலும் பாதிக்கப்படுவார்கள். வெயில் காரணமாக பள்ளிக்கூடங்களுக்கு முன்கூட்டியே விடுமுறை விடப்பட்டன. அதேபோல் பள்ளிக்கூடங்கள் திறக்கும் தேதியையும் தள்ளிப்போட வேண்டும் என்று மாணவ-மாணவிகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.
அதிகாரிகள் ஆலோசனை
எனவே கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிக்கூடங்களை திறக்கும் தேதியை தள்ளிப்போடலாமா? என்று அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகிறார்கள். ஏற்கனவே 2013-ம் ஆண்டு ஒரு வாரம் பள்ளிக்கூடங்கள் திறப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் இரண்டு நாட்களில் அதிகாரிகள் ஆலோசனை செய்து பள்ளித்திறப்புப் பற்றி தகவல் வெளியிடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications












