சென்னை: ஆராய்ச்சி மாணவர்களின் படிப்புக்கு உதவும் வகையில் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பூச்சியியல் துறை சார்பில் ரூ.1 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் மியூசியம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
உலகில் உள்ள விலங்குகளில் அதிக எண்ணிக்கையில் இனங்களைக் கொண்டுள்ளவை பூச்சிகள். இவற்றில் பெரும்பாலானவை விஷத்தன்மை வாய்ந்தவை என்ற கருத்து மக்களிடையே உள்ளது. ஆனால் உண்மை அதுவல்ல. பூச்சிகள் குறித்து உண்மையான விவரங்களை மக்களுக்குத் தெரிவிப்பதுதான் இந்த அருங்காட்சியகத்தின் நோக்கம் என்று கூறுகிறார் பயிர் பாதுகாப்பு படிப்புத் துறை இயக்குநர் ராமராஜன்.
இதற்காக இந்த மியூசயம் இங்கு அமைக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.

பூச்சிகள் நம் வாழ்க்கையோடு கலந்தவை. நாம் வாழும் அனைத்து சூழல்களிலும் பூச்சிகள் நம்முடன் உள்ளன. பூச்சிகளள்தான் சிக்கலான இயற்கை உணவுச் சங்கிலியை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.
நன்செய், புன்செய் நிலங்கள், காடுகள், வீடுகள் என அனைத்து இடங்களிலும் வாழும் பூச்சிகளை 29 குடும்பங்களாக இதுவரை பிரித்துள்ளனர். உலகில் பல லட்சம் பூச்சியினங்கள் இருந்தாலும் அவற்றில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இனங்களின் விவரங்கள் மட்டுமே விஞ்ஞானிகளால் இதுவரை அறியப்பட்டுள்ளன.
இந்தியாவில் சுமார் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட பூச்சியினங்கள் உள்ளன. இந்த நிலையில் பூச்சிகளை இனம் காண்பது, அதன் வாழ்வியல் சுழற்சியை அறிந்து கொண்டு, அவற்றால் பயிர்களுக்கும், மனிதர்களுக்கும் விளையும் நன்மை, தீமைகளை கண்டறிவது போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு வேளாண் பல்கலைக்கழகத்தில் கடந்த 60 ஆண்டுகளாக பூச்சிகளை சேகரித்து, வகைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

பூச்சியியல் துறைத் தலைவர் குற்றாலம், ஓய்வு பெற்ற பேராசிரியர் குணதிலகராஜ், உதவிப் பேராசிரியர் சித்ரா ஆகியோரின் தீவிர தேடுதல் பணியின் விளைவாக டெல்லி இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்துக்கு அடுத்தபடியாக சுமார் 70 ஆயிரம் பூச்சிகள் கோவையில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. இதற்காக இங்கு பெரிய ஆராய்ச்சிக் கூடமே அமைந்துள்ளது.
இவற்றை மக்களுக்கு காட்சிப்படுத்தவும், பள்ளி மாணவ-மாணவிகள் பூச்சிகளின் விவரங்களை அறிந்து கொள்ளவும், ஆராய்ச்சி மாணவர்களுக்கு பயன்படும் வகையிலும் இவற்றை அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்க வேளாண் பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.
இதையடுத்து மாநில அரசின் ரூ.1 கோடி நிதி உதவியுடன் சுமார் 5 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அருங்காட்சியக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இப்போது மின்சாதனப் பொருள்களை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த ஓரிரு மாதங்களில் பணிகள் முடிவடைந்து, இந்த அருங்காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கப்படவுள்ளது.

இங்கு வைக்கப்படும் பூச்சிகளின் விவரங்களும் மக்களுக்குத் தரப்படும். இங்கு வைக்கப்படும் பதப்படுத்தப்பட்ட பூச்சிகளின் கீழே அதன் பெயர்,மேலும் இங்கு அமையும் சிறிய திரையரங்கில் மாணவர்களுக்காக பூச்சிகள் பற்றிய படவிளக்கம் காண்பிக்கப்படும். இதன்மூலம் பள்ளி மாணவர்களும் இதனால் பயன் அடையலாம். இத்தகவலை பயிர் பாதுகாப்பு படிப்புத் துறை இயக்குநர் ராமராஜன் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications












