சென்னை : தமிழகத்தில் உள்ள (ஐ.டி.ஐ) தொழில் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு இன்று ஜூன் 24ந் தேதி ஆரம்பமானது. சிறப்புப் பிரிவினருக்கு நேற்று கலந்தாய்வு நடைபெற்றது.
தமிழகத்தில் 85 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும் (ஐ.டி.ஐ) 483 தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களும் இயங்கி வருகின்றன. இவற்றில் மாணவ மாணவியர் சேர்க்கை ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் தொடங்கும்.
இந்த வருடம் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் உள்ள 27,494 இடங்களுக்கும், தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 50 சதவீத அரசு ஒதுக்கீட்டின் கீழ் பூர்த்தி செய்யப்பட வேண்டிய 8,990 இடங்களுக்கும் இணையதளம் மூலம் கலந்தாய்வு அனைத்து மாவட்டங்களிலும் நேற்று தொடங்கியது.
நேற்று சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடந்தது. சென்னை கிண்டியில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு தங்களுக்கு விருப்பமான தொழிற்பயிற்சி நிலையத்தையும், தொழிற்பிரிவையும் தேர்ந்தெடுத்த மாணவ மாணவியர்களுக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபில் சேர்க்கை ஆணையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை செயலாளர் அமுதா, இயக்குனர் சுப்பையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இன்று ஜூன் 24ந் தேதி பொது கலந்தாய்வு தொடங்கியது. இந்த கலந்தாய்வு ஜூலை 7ந் தேதி வரை நடக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.