சென்னை: எஸ்எஸ்எல்சி ஆங்கிலம் முதல் தாள் தேர்வில் இடம் பெற்ற கேள்வித்தாளில் இரண்டு கேள்விகளுக்கு குழப்பமான பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளதால் கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
எஸ்எஸ்எல்சி ஆங்கிலம் முதல் தாள் தேர்வுல் வழங்கிய கேள்வித்தாளில் 5 மதிப்பெண் கேள்விகள் பிரிவில்இடம் பெற்ற முதல் கேள்விக்கு இரண்டு விடைகள் கொடுக்கப்பட்டு இருந்தது. அவை இரண்டும் குழப்பமாக இருக்கிறது என்று மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த கேள்வியில் தாஜ்மகால் குறித்து ஒரு பத்தி கொடுத்துள்ளனர். அதில் இடம் பெற்றுள்ள 5 வார்த்தைகளுக்கு இணையான வார்த்தைகளை தேர்வு செய்து எழுத வேண்டும். ஒவ்வொரு வார்த்தைக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டு அதில் சரியான விடையை தேர்வு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி Glory என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான நான்கு வார்த்தைகளில் இரண்டு பொருத்தமான வார்த்தைகள் தரப்பட்டுள்ளன. அவை beauty, splendour. இந்த இரண்டு சொற்களுமே ஏறக்குறைய சரியான விடைதான் என்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். எனவே அவற்றில் எந்த வார்த்தையை எழுதினாலும் மதிப்பெண் வழங்க வேண்டும்.
மேலும், jostled என்ற வார்த்தைக்கு இணையான சொல் பட்டியலில், pushed, roughly, quarrelled ஆகிய இரண்டு சரியான சொற்கள் இடம் பெற்றுள்ளன. இதில் சரியான விடையாக இவற்றில் எதை எழுதினாலும் மதிப்பெண் வழங்க வேண்டும் என்று மாணவர்கள் கேட்டுள்ளனர். ஆனால் இது குறித்து தேர்வுத்துறை இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.