சென்னை: அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை பெற்றோர்கள் சேர்க்க வேண்டாம் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சில பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளிகள் என்ற பெயரில் விளம்பரம் செய்து வருவதாகவும், இதுதொடர்பாக சிபிஎஸ்இ நிர்வாகத்துக்கு புகார்கள் வந்ததாகவும் மத்திய மனித வளத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
சில பள்ளிகள் அங்கீகாரம் பெறுவதற்கு முன்னதாகவே விளம்பரங்களில் சிபிஎஸ்இ பள்ளிகள் என்று விளம்பரம் செய்துகொள்வதாக சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகத்துக்கு புகார்கள் வந்துள்ளன.
இதுகுறித்து சிபிஎஸ்இ நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகத்தை நடத்த விண்ணப்பிப்பதற்கு முன்னதாக பள்ளி நிர்வாகத்தினர் சிபிஎஸ்இ பள்ளிகள் என்று விளம்பரம் செய்து வருகின்றன. இதுபோன்ற பள்ளிகள் மீது சட்டப்படியான நடவடிக்கையை சிபிஎஸ்இ நிர்வாகம் எடுக்கும்.
இதுபோன்று செய்யும் பள்ளிகளை நாங்கள் அனுமதிக்க முடியாது. அந்த பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.
சிபிஎஸ்இ பள்ளியா என அறிந்துகொள்ள பெற்றோர்கள் www.cbseaff.nic.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம் என்றார் அவர்.