கொரோனா தொற்றின் பாதிப்பால் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் தான் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்தில் பெய்த கன மழையினால் பல மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மீண்டும் கொரோனா அதிகரிப்பு மற்றும் ஒமைக்ரான் என்னும் புதிய நோய்த் தொற்றின் காரணமாக மீண்டும் பள்ளி, கல்லூரிகளை மூடும் சூழல் ஏற்பட்டுள்ளது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
திறக்கப்பட்ட பள்ளிகள்
கொரோனா பெருந்தொற்றினைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து சேவைகளும் முடக்கப்பட்ட நிலையில் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் நேரடி வகுப்பிற்குச் சென்று வருகின்றனர்.
மீண்டும் ஊரடங்கு அமல்
இந்த நிலையில், மும்பையில் கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டு கடந்த வாரம் பள்ளிகளைத் திறக்க திட்டமிடப்பட்ட நிலையில், ஒமைக்ரான் என்னும் புதிய தொற்றின் காரணமாக டிசம்பர் 15 ஆம் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிர் கொள்ளும் ஒமைக்ரான்
உலக சுகாதார அமைப்பால் கடந்த 24ம் தேதியன்று கண்டறியப்பட்ட இந்த ஒமைக்ரான் நோய்த் தொற்று இதுவரை கண்டறியப்பட்ட உயிர் கொள்ளும் வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாக கணிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கு தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை உள்ளதாகவும், தீவிரமாகப் பரவும் தன்மை கொண்டதாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் ஒமைக்ரான்
இந்தியாவைப் பொறுத்தவரையில் கர்நாடக மாநிலம், பெங்களூரில் முதன் முறையாக ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. வெளிநாட்டிலிருந்து வந்த இருவருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டது.
பள்ளி மாணவர்களிடையே கொரோனா
இதனிடையே, கர்நாடகா மாநிலத்தில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில் 11 ஆசிரியர்கள் உட்பட 107 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் சக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
உலகை அச்சுறுத்தும் ஒமைக்ரான்
தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று புதிய ரக உருமாறிய கொரோனா வைரஸ் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்தியா உள்ளிட்ட இதர நாடுகளில் இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக முன் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தியாவில் அதிகரிக்கும் தொற்று
இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. அதனையடுத்து ஒமைக்ரான் தொற்று இந்தியாவில் பரவுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக அனைத்து மாநிலங்களிலும் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகிறது.
பள்ளி மாணவர்கள் பாதிப்பு
இதனிடையே, கர்நாடக மாநிலம், சிக்மகளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 69 மாணவர்களுக்கு கொரோனா தொற்று முதலில் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் மேலும் 38 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அதிர்ச்சி
பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கர்நாடகாவில் ஒமைக்ரான் முதன்முதலில் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் மற்றும் ஒரே பள்ளியில் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளை மூட முடிவு
இதனைத் தொடர்ந்து, இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பி.சி.நாகேஸ் கூறுகையில், கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தால் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்படும் என்று அறிவித்துள்ளார்.