சென்னை, மார்ச் 19: எஸ்எஸ்எல்சி தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கியது. மாணவர்கள் உற்சாகத்துடன் தேர்வு எழுதினர்.
எஸ்எஸ்எல்சி வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. தமிழகம் புதுச்சேரியை சேர்ந்த 11 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் இந்த தேர்வில் பங்கேற்கின்றனர். எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு எஸ்எஸ்எல்சி தேர்வு 10 மணிக்கு பதிலாக காலை 9.30 மணிக்கே தொடங்குகிறது. இது மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்வை முன்னிட்டு மாணவ மாணவியர் காலை 9 மணிக்கே தேர்வு மையங்களுக்கு வந்து சேர்ந்தனர். சரியாக 9.15 மணிக்கு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக அனைத்து மாணவ மாணவியரும் கடுமையான சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர். காலில் ஷ¨, கழுத்தில் டை, இடுப்பில் பெல்ட் அணிந்து வரத் தடை விதிக்கப்பட்டது. மேலும், கால்குலேட்டர் உள்ளிட்ட மின் சாதனப் பொருட்களை தேர்வு அறைக்குள் எடுத்துவரக்கூடாது என்று அறிவிக்கப்பட்டது.
காலை 9.15 மணிக்கு விடைத்தாள் வழங்கப்பட்டது. அதில் விவரங்கள் எழுதவும், கேள்வித்தாள் படித்துப் பார்க்கவும் 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. ஒவ்வொரு தேர்வு அறையிலும் அமர்ந்து தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கேள்வித்தாள் கட்டுகள் தேர்வு அறைக்கு வந்தன. அவை மாணவ மாணவியர் முன்னிலையில் பிரிக்கப்பட்டு சாட்சிக்காக மாணவர்களிடமே கையெழுத்தும் பெறப்பட்டது. 9.30 மணிக்கு மாணவர்கள் விடை எழுத அனுமதிக்கப்பட்டனர்.
இன்று மொழிப்பாடம் என்பதால் தமிழ் முதல் தாள் தேர்வு எழுதினர். இதற்காக கோடிட்ட விடைத்தாள்களை தேர்வுத்துறை வழங்கியது. தமிழ் கேள்வித்தாளில் வரும் மொழி பெயர்ப்பு பகுதி, கடிதம், விண்ணப்ப படிவங்கள் அனைத்தும் விடைத்தாளுடன் இணைத்து வழங்கப்பட்டது. மதியம் 12 மணிக்கு தேர்வு முடிகிறது.