சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
மாநிலம் முழுவதும் இந்தத்தேர்வை 10,72,691 பேர் எழுதுகின்றனர். இதில் 5,40,505 பேர் மாணவர்கள். 5,32,186 பேர் மாணவிகள்.
தேர்வை கண்காணிக்க 5,200 பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தத் தேர்வுகள் ஏப்ரல் 10ம் தேதி வரை நடக்கவுள்ளன. 11,827 பள்ளிகளில் இத் தேர்வுகள் நடக்கின்றன.
மேலும் 50,429 தனித்தேர்வர்களும் இத் தேர்வு எழுதுகின்றனர். கடந்த ஆண்டைவிட எஸ்.எஸ்.எல்.சி தேர்வை கூடுதலாக 33,816 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.
சிறைகளில்...
சிறைகளில் உள்ள கைதிகளும் இத் தேர்வு எழுத கடந்த சில வருடங்களாக சிறைகளிலேயே தேர்வு மையம் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 33 சிறைவாசிகள் பாளையங்கோட்டை மத்தியச் சிறையிலும், 97 சிறைவாசிகள் கோவை மத்தியச் சிறையிலும், 111 சிறைவாசிகள் புழல் மத்தியச் சிறையிலும் எழுதுகின்றனர்.
மாற்றுத் திறனாளிகள்
டிஸ்லெக்சியா, கண்பார்வையற்றோர், காதுகேளாதோர், வாய் பேசாதோர் மற்றும் இதர உடல் ஊனமுற்றோர்கள் தேர்வு எழுத சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இவர்கள் சொல்வதை எழுத ஒருவரும், இவர்களுக்கா கூடுதலாக ஒரு மணிநேரம் போன்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு தேர்வு மையங்களின் தரைத்தளத்திலேயே தேர்வெழுதும் வகையில் தனி அறைகள் ஒதுக்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் வைக்கப்படும் மையங்களில், 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.