சென்னை, மார்ச் 18: தமிழகத்தில் நாளை எஸ்எஸ்எல்சி தேர்வுகள் தொடங்குகிறது. 10.72 லட்சம் மாணவ மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டால் 2 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை தேர்வு எழுத முடியாது என்று தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ்2 வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த 5ம் தேதி தொடங்கியது. அந்த தேர்வு 31ம் தேதி முடியும். இதற்கிடையே எஸ்எஸ்எல்சி தேர்வு நாளை தொடங்குகிறது. தமிழகம், புதுச்சேரியில் இயங்கும் 11827 பள்ளிகளில் படிக்கும் 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 மாணவ மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். இவர்கள் ஏற்கெனவே எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதி தோல்வி அடைந்த 50500 பேர் தனித்தேர்வர்களாகவும் தேர்வு எழுதுகின்றனர்.
மேற்கண்ட மாணவ மாணவியர் தேர்வு எழுதுவதற்காக தமிழகம், புதுச்சேரியில் 3298 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் இயங்கும் 578 பள்ளிகளில் இருந்து 28124 மாணவர்களும், 29230 மாணவியரும் தேர்வு எழுதுகின்றனர். அவர்களுக்காக சென்னையில் மட்டும் 209 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல புதுச்சேரியில் இயங்கும் 291 பள்ளிகள் மூலம் 9703 மாணவர்களும், 9856 மாணவியரும் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்காக புதுச்சேரியில் 48 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள 33 கைதிகள், கோவை மத்திய சிறையில் உள்ள 97 சிறைக்கைதிகள், சென்னை புழல் சிறையில் உள்ள 111 கைதிகளும் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதுகின்றனர்.
எஸ்எஸ்எல்சி தேர்வில் மட்டும் 7 லட்சத்து 30 ஆயிரத்து 590 பேர் தமிழை முதன்மைப் பாடமாக கொண்டு தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து அரசு விலக்கு அளித்துள்ளது. தேர்வை கண்காணிக்க 5200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அடங்கிய பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வில் ஆள்மாறாட்டம், துண்டுச் சீட்டு வைத்து எழுதுதல், விடைத்தாள் மாற்றிக் கொள்ளுதல் உள்ளிட்ட முறைகேடுகளில் மாணவர்கள் ஈடுபட்டால் அவர்கள் 2 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை தேர்வு எழுத முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத் துறை எச்சரித்துள்ளது.
மேலும், விடைத்தாள் புத்தகத்தின் முகப்பில் தேர்வு எழுதும் மாணவ மாணவியரின் போட்டோ இடம் பெறுகிறது. பாடம், பதிவு எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தேர்வுத்துறையே அச்சிட்டு வழங்குவதால் மாணவர்கள் விடைத்தாள் முகப்பில் எதுவும் எழுத வேண்டிய அவசியம் இல்லை. கையெழுத்து மட்டும் போட்டால் போதும். மொழிப்பாடங்களுக்கான விடைத்தாள்கள் கோடிட்டதாக இருக்கும்.
கணக்கு உள்ளிட்ட பாடங்களுக்கு கிராப் ஷீட்கள் இடம் பெறும். மொழிப்பாடங்களில் இடம் பெறும் படங்கள், சமூக அறிவியலில் இடம் பெறும் வரை படங்கள் அனைத்தும் விடைத்தாளில் இணைககப்பட்டு வழங்கப்படுகிறது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டில் எஸ்எஸ்எல்சி தேர்வுகள் காலை 9.30 மணிக்கே தொடங்கி மதியம் 12 மணிக்கு முடிகிறது என்பது குறிப்பிடத் தக்கது.