இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாள் அக்டோபர் 15ஆம் தேதி உலக மாணவர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
தன் வாழ்நாள் முழுவதும் மாணவர்களுக்கு முன்னுதாரணமாகவே விளங்கிய இவரது பிறந்த நாளை ஐநா சபை 2010ல் உலக மாணவர்கள் தினமாக அறிவித்தது. இன்றைய நாளில் அவரைப் பற்றிய சில தகவல்கள் இங்கே.!
தாய் மொழி
அப்துல் கலாம் தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்தவர் என்பது நாம் அறிந்தது தான். ஆனால், தனது தாய் மொழியிலேயே கல்வி பயின்று அறிவியல் துறையில் புரட்சி செய்தவர் இவர் தான்.
பெருந்தலைவரான அப்துல் கலாம்
பெருந்தலைவர் காமராஜர் தான் திருமணம் செய்தால் நாட்டுக்குச் சேவை செய்ய முடியாது என திருமணம் செய்ய மறுத்தார். அதுபோலவே அப்துல் கலாமும் திருமணம் செய்தால் அறிவியல் வளர்ச்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாது என திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.
காந்தியக் கொள்கை
அப்துல் கலாம் ஐயா தனது வாழ்நாளின் ஒவ்வொரு வினாடியிலும் காந்தியக் கொள்கைகளைப் பிரதிபலித்தார். மிகப் பெரிய உறவுகளையும், நட்பு வட்டாரத்தையும் கொண்டவர். ஆனால், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி யார் ஒருவருக்கும் சிபாரிசு செய்தது இல்லையாம்.
நாடு வல்லரசாகும்
அனைத்து வளங்களும் நிறைந்துள்ள இந்தியா 2020-ஆம் ஆண்டு உலகின் வளர்ந்த நாடுகளின் பட்டியலில் முன்னிலை வகிக்கும், நாடு வல்லரசாக மாணவர்கள் இருப்பார்கள் என்று மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் உற்சாகத்தை, நம்பிக்கையை விதைத்தார்.
இந்தியா அணுகுண்டு சோதனை
1998-ஆம் ஆண்டு மே மாதம் 11ம் தேதியன்று பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனை மேற்கொண்டு உலக அரங்கில் வல்லரசான நாடாக தன்னை முன்னிலைப்படுத்தியது. இதற்கு வித்திட்டவர் அப்துல் கலாம் தான்.
மாத சம்பளம் ரூ.250
1958-ஆம் ஆண்டு மத்திய அரசின் பாதுகாப்புத் துறையில் அப்துல் கலாம் வேலைக்கு நேர்ந்த போது அவரது மாத ஊதியம் 250 ரூபாய் தான். இந்திய இராணுவத்தில் உள்ள அக்னி, திரிசூல், பிருத்வி, நாள், ஆகாஷ் உள்ளிட்ட ஏவுகணைகள் அப்துல் கலாம் திட்ட இயக்குநராக பணியாற்றியபோது வடிவமைக்கப்பட்டவையாகும்.
விருதுகள்
- 1981 - பத்ம பூஷன்
- 1990 - பத்ம விபூஷன்
- 1997 - பாரத ரத்னா
- 1997 - தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது
- 1998 - வீர் சவர்கார் விருது
- 2000 - ராமானுஜன் விருது
- 2007 - அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்
- 2007 - கிங் சார்லஸ்-II பட்டம்
- 2008 - பொறியியல் டாக்டர் பட்டம்
- 2009 - சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது
- 2009 - ஹூவர் மெடல்
- 2010 - பொறியியல் டாக்டர் பட்டம்
- 2012 - சட்டங்களின் டாக்டர்
- 2012 - சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது
கலாமாகக் கனவு காண்போம்
நகரமோ, கிராமமோ பள்ளி சிறார்கள் முதல் இளைஞர்கள் வரையில் கனவு காணுங்கள் என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தியவர், பட்டி, தொட்டி மாணவ, மாணவிகளிடம் கூட நாட்டின் மீது தேசப்பற்றை ஊட்டியவர் நம் அப்துல் கலாம். அவரையும், அவரது சிந்தனைகளையும் இந்நாள் மட்டுமின்றி எந்நாளும் போற்றுவோம்.