டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமானது (Tamil Nadu Public Service Commission-TNPSC) விரைவில் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வை நடத்தவுள்ளது. இந்தத் தேர்வுக்கான வினாத்தாள் எந்த வகை அடிப்படையில் அமையும் என்பது குறித்து நிபுணர்கள் இங்கு விளக்கம் அளித்துள்ளனர்.
தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (TNPSC) என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) பல்வேறு அரசுப் பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்து அனுப்புகிறது. ஆள்தேர்வுக்காக போட்டித் தேர்வுகளை (குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4, குரூப் 8 மற்றும் VAO) நடத்துவதற்கு பொறுப்பான மாநில தலைமை ஒழுங்குமுறை அமைப்பாக டிஎன்பிஎஸ்சி உள்ளது.
இந்நிலையில்தான் டிஎன்பிஎஸ்சி தற்போது குரூப் 4 தேர்வுக்கான தேதி விவரங்களை அறிவித்துள்ளது.
அதன்படி கிராம நிர்வாக அலுவலர் (விஏஒ), இளநிலை உதவியாளர், வனக் காப்பாளர், வன காவலர், தட்டச்சர் உள்ளிட்ட 6,244 காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன.
தேர்வர்கள் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகிய டிஎன்பிஎஸ்சி இணையதளம் வாயிலாக பிப்ரவரி 28 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக மட்டுமே பெறப்படுகின்றன. ஆன்லைன் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் 28.02.2024, இரவு 11.59 மணி வரை http://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பம் சரிபார்த்தல் நாள் 04.03.2024 ஆகும்.
அதிகாலை 12.01 மணியில் இருந்து 06.03.2024, இரவு 11.59 மணி வரை உள்ளது. தேர்வை பொறுத்த அளவில், வரும் ஜூன் 9ம் தேதி நடைபெறும். காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வு, மதியம் 12.30 வரை நடைபெறும்.
தற்போது தேர்வுக்காக மாணவர்கள் விண்ணப்பித்து வரும் நிலையில், ஏராளமானோர் தேர்வுக்காக வேகமாக தயாராகி வருகின்றனர்.

வயது வரம்பு எவ்வளவு?
இந்தத் தேர்வில் விண்ணப்பிக்கும்போது தேர்வர்களுக்கான வயது வரம்பை தற்போது பார்க்கலாம்.
கிராம நிர்வாக அதிகாரி, வனக் காவலர், வனப் பார்வையாளர் பதவி தவிர்த்த மற்ற பணியிடங்களுக்கு 18 வயது நிரம்பியோர் முதல் 32 வயதுக்கு உட்பட்டோர் வரை விண்ணப்பிக்கலாம்.
கிராம நிர்வாக அதிகாரி, வனக்காவலர், வனப் பார்வையாளர் பணியிடங்களுக்கு மட்டும் 21 வயது முதல் 32 வயதுக்குட்பட்டோர் விண்ணப்பிக்கலாம்.
பட்டியலினத்தோர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். குறிப்பாக பட்டியல் இனத்தோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர் 42 வயது வரை கிராம நிர்வாக அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
சில பணியிடங்களுக்கு வயது வரம்பில் இருந்து முழுமையான விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, 60 வயது வரை கூட விண்ணப்பிக்க முடியும்.
மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், என்சிசி மாணவர்கள், கொத்தடிமையாக இருந்து விடுவிக்கப்பட்டவர்கள், தற்காலிகமாக அரசுப் பணியில் இருப்போர் ஆகியோருக்கும் வயது வரம்பில் விலக்கு உண்டு.
விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள் இணையதளத்திலிருந்தே தரவிறக்கம் செய்யப்பட வேண்டும். தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது.
இந்தத் தேர்வுகளின் முடிவுகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்படும்.
ஒருவர் விண்ணப்பிக்கும்போது இரண்டு மாவட்டங்களைத் தேர்வு செய்யலாம். அதில் ஒரு மாவட்டத்தில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்படும். மாற்றுத் திறனாளிகள் மட்டும் ஒரே ஒரு மாவட்டத்தைத் தேர்வு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
விண்ணப்பிப்போர் தேர்வுக் கட்டணமாக 100 ரூபாய் செலுத்த வேண்டும். இதனை கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, இணைய வழி வங்கிச் சேவை ஆகியவற்றின் மூலம் செலுத்தலாம். சில பிரிவினருக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விதி விலக்கு உண்டு.
தேர்வு நடக்கும் தினத்தில், தேர்வு நேரத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக, தேர்வு நடைபெறும் இடத்தின் பிரதான கதவு மூடப்படும். ஆகவே, அரை மணிநேரத்திற்கு முன்பாகவே, தேர்வு நடக்கும் இடத்திற்கு உள்ளே நுழைந்துவிட வேண்டும்.

பதவிகள்...
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றால் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் (பிணையமற்றது), இளநிலை உதவியாளர் (பிணையம்), வரித் தண்டலர் நிலை I, தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை III ), பண்டகக் காப்பாளர் (தமிழகம் விருந்தினர் இல்லம், உதகமண்டலம்),
இளநிலை உதவியாளர் (தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்), இளநிலை உதவியாளர் (தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம்), வரித் தண்டலர் (தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்),
சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை III ) (தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) ஆகிய பணிகளில் சேர முடியும்.
மேலும் நல்ல ஊதியமும் கிடைக்கும். டிஎன்பிஎஸ்சி (TNPSC) குரூப் 4 தேர்வானது, தற்போது 7 விதமான பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. இந்த பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மூலம் நேரடியாக நிரப்பப்படுகிறது. மேலும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே தகுதி என்பதால் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.
வினாத்தாள்...!
சரி...தற்போது தேர்வுக்கான வினாத்தாள் எப்படி அமைந்திருக்கும் என்று பார்க்கலாம்.
குரூப்-4 தேர்வில் எழுத்துத் தேர்வைப் பொருத்தவரை பகுதி - அ, பகுதி - ஆ (Part - A, Part - B) என இரு பிரிவுகளாக இருக்கும்.
இதில் பகுதி - அ (Part - A) என்பது தமிழ் தகுதித் தேர்வு. இதில் 100 கேள்விகள் இடம்பெற்றிருக்கும்.
பகுதி - ஆ (Part - B) என்பது பொது அறிவு மற்றும் பொதுத் திறன் தேர்வாக இருக்கும்.
பார்ட் ஏ (Part - A) கேள்வித் தாள் தமிழில் மட்டுமே இருக்கும். Part - B கேள்வித்தாள் தமிழிலும் ஆங்கிலத்திலும் இருக்கும்.
தமிழ் தகுதித் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்களைப் பெறுவது கட்டாயம். ஆனால், Part A-ல் உள்ள தகுதித் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்களைப் பெற்ற விண்ணப்பதாரரின் Part - B விடைத்தாள் மட்டுமே மதிப்பிடப்படும்.
மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வானது நடைபெற இருக்கிறது.
தமிழில் 100 கேள்விகளுக்கு 150 மதிப்பெண்கள் வழங்கப்படும். இதில் கட்டாயம் 40 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இவை தவிர்த்து பொதுவான கேள்விகளாக 75 கேள்விகள் இருக்கும், இவை தவிர்த்து ஆப்டிடியூட் எனப்படும் கேள்விகள் 25 இடம்பெறும் , மொத்தமாக 200 கேள்விகள் இடம்பெறும். அதற்கு மொத்தமாக 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். மொத்தம் 3 மணி நேரம் நடைபெற உள்ள இந்த தேர்வில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணாக 90 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
எஸ்எஸ்எல்சி எனப்படும் பத்தாவது அடிப்படையிலான கேள்விகள் இடம்பெற உள்ளன. ஓஎம்ஆர் எனப்படும் சரியான பதிலை தேர்வு செய்யும் வகையில் இந்த தேர்வானது நடைபெற இருக்கிறது. தேர்வறைகளுக்குள் செல்போன்கள் பயன்படுத்த அனுமதி இல்லை. இதேபோல் கருப்பு நிற பால்பாயிண்ட் பேனாக்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டணமாக வெறும் 100 ரூபாய் செலுத்தினால் போதும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில சமூகத்தினருக்கு கட்டணத்தில் சலுகைகளும் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த முறை நடத்தப்பட உள்ள குரூப் 4 தேர்வின் மூலம் மொத்தமாக 6,244 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதில் குறிப்பிட வேண்டிய பணியிடங்கள் என்றால், 108 விஏஓ பணியிடங்கள், 2,442 இளநிலை உதவியாளர் பணியிடங்கள், சுமார் 1,700 தட்டச்சர் பணியிடங்கள் முக்கியமானவை ஆகும். இது தவிர வனக்காவலர் பணி இடங்களும் இடம் பெற்றுள்ளன.
குரூப் - 4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 30-ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் பிப்ரவரி 28-ம் தேதி நள்ளிரவுக்கு முன்பாக இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் கடைசி நேரத்தில் மொத்தமாக வந்து விண்ணப்பித்தால் சர்வர் பிரச்சனையால் விண்ணப்பிக்க முடியாமல் போகலாம் என்பதையும் டிஎன்பிஎஸ்சி தனது அறிக்கையில் வெளிப்படையாகவே கூறியுள்ளது.
குரூப் 4 தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ, www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
கடந்த முறை டிஎன்பிஎஸ்சி த தேர்வின் வழியே, வி.ஏ.ஓ., பதவியில், 494 காலியிடங்கள் உட்பட, பல்வேறு பதவிகளுக்கான, 9,351 இடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் அதன்பிறகு கூடுதலாக, 1,929 இடங்கள் நியமன பட்டியலில் சேர்க்கப்பட்டது.வி.ஏ.ஓ., - 1,107; பிணையமற்ற இளநிலை உதவியாளர் பதவி, 4,722; பிணையம் உள்ள இளநிலை உதவியாளர் பதவி, 226; வரிவசூலிப்பாளர், 52; தட்டச்சர், 3,974; சுருக்கெழுத்தர், 931; கள ஆய்வாளர், 102 மற்றும் வரைவாளர், 156 என, 11 ஆயிரத்து, 270க்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் கடந்த 2022-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் நடத்திய குரூப் 2, 2ஏ காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 5,240 ஆக இருந்தது. இந்நிலையில், இந்த எண்ணிக்கையில் புதிதாக 620 காலிப் பணியிடங்கள் சேர்க்கப்பட்டன. இதனால், குரூப் 2, 2ஏ காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை 5,860 ஆக அதிகரித்தது நினைவிருக்கலாம்.
எனவே பணியிடங்கள் குறைவாக உள்ளதாக நினைத்து தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் விட்டுவிடக்கூடாது. தேர்வு முடிவு வெளியாவதற்குள் கடந்த தேர்வுகளை போல் கூடுதல் பணியிடங்களை நிரப்ப அறிவிப்புகள் வெளியாகவும் வாய்ப்புகள் உள்ளன என்று நிபுணர்கள் ஆலோசனையைத் தெரிவித்துள்ளனர்.
எனவே தமிழக அரசு பணியில் சேர விரும்புவோர் இந்த அற்புதமான வாய்ப்பை தவறவிடவேண்டாம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்..
இதேபோல் குரூப் 4 தேர்வு எழுதுவோருக்கு எந்த பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என்பதையும் தேர்வாணையம் தனது அறிவிக்கையிலேயே பாடத்திட்டத்தை வெளியிட்டுள்ளது. அந்த பாடத்திட்டங்கள் என்னென்ன என்பதை தெளிவாக அறிந்து கொண்டு தேர்வர்கள் அந்த பாடங்களை எல்லாம் படிக்க வேண்டும்.
மேலும், டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட பாடத்திட்டங்களின் பாட முழு பாடங்களும் உள்ள புத்தகங்களை படிக்க வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள பாடப்புத்தகங்களை தெளிவாக படித்தவர்களால் அல்லது படித்து முடிப்பவர்களால் கண்டிப்பாக இந்தத் தேர்வில் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்பதை மறந்துவிடக்கூடாது.
தேர்வுக்கு 3 மாத காலம் உள்ளதால் தேர்வர்கள் இன்று முதலே தங்களது படிப்பை அட்டவணை போட்டு தொடங்குங்கள். உங்களுக்கு வெற்றி நிச்சயம் என்று கல்வியாளர்களும் நிபுணர்களும் தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications












