நீட் தேர்வில் 650-க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்று அரசு மருத்துவக் கல்லூரியில் இலவச இடங்களில் சேர்வதற்கான வழிமுறைகளை கல்வியாளர்களும், நிபுணர்களும் தெரிவித்து வருகின்றனர். இந்த வழிமுறைகளைப் பின்பற்றும் மாணவச் செல்வங்கள் நல்ல மதிப்பெண் பெற்று எதிர்காலத்தில் சிறந்த மருத்துவராக முடியும்.
நீட் தேர்வு (National Eligibility cum Entrance Test) என்பது பொது மருத்துவம், பல் மருத்துவம் துறையில் சேர்வதற்கு இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு ஆகும்.
இந்திய மருத்துவக் குழுமம் சட்டம் - 1956-ன் 2018 திருத்தம் மற்றும் பல் மருத்துவர் சட்டம் 1948-ன் 2018 திருத்தம் ஆகியவற்றின்படி அகில இந்திய அளவிலான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வானது, இந்திய அரசின் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழான, அகில இந்திய மருத்துவக் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான (அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் கட்டுப்பாட்டில் வரும் மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் ஜவாஹர்லால் பட்டமேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நீங்கலாக) சேர்க்கைக்கான தகுதியை நிர்ணயிப்பதற்காக நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தால் (சிபிஎஸ்இ) நடத்தப்படுகிறது. இதன்படி 5 மே, 2013 முதல் இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறதுது. 2019-ஆம் ஆண்டு முதல் இந்த நுழைவுத்தேர்வை தேசியத் தேர்வு முகமை (என்டிஏ) நடத்துகிறது.

நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தும் இத்தேர்வு அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்விற்கு (All India Pre Medical Test (AIPMT)) மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நுழைவுத் தேர்வானது அனைத்து அரசுக் கல்லூரிகளுக்கும் தனியார் கல்லூரிகளுக்கும் பொருந்தும். தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, ஒடியா, உருது, பெங்காலி, தெலுங்கு, கன்னடா, அஸ்ஸாமி, பஞ்சாபி, மலையாளம், குஜராத்தி ஆகிய 13 மொழிகளில் நீட் தேர்வை எழுத முடியும்.
இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆட்சிப்பகுதிகளில் இருக்கும் அனைத்து மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் இடம்பெற்றிருக்கும் எம்.பி.பி.எஸ் (MBBS), பி.டி.எஸ் (BDS) மற்றும் இந்திய மருத்துவப் படிப்புகளான ஆயுர்வேதா, சித்தா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட (BAMS/BSMS/BUMS/BHMS) இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்க்கை பெற விரும்புபவர்கள், இத்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிட வேண்டும். இதேபோன்று, வெளிநாடுகளில் சென்று எம்.பி.பி.எஸ் (MBBS) படிக்க விரும்புபவர்களும் இத் தகுதித் தேர்வை எழுதித் தகுதி பெற்றிட வேண்டும்.
மேலும், இதில் AIIMS (All India Institute of Medical Sciences) மற்றும் JIPMER (Jawaharlal Institute of Postgraduate Medical Education & Research) ஆகிய பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களும் அடங்கும். இந்தியாவில் மட்டுமின்றி இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகள் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றாலும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கல்வி மற்றும் வயதுத் தகுதி: நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மருத்துவக்கல்விச் சேர்க்கையின் போது 17 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது 25 வயதுக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாணவர்கள் +2 அல்லது அதற்கு இணையான படிப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல்/உயிரியல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுடன் ஆங்கிலப் பாடத்தையும் எடுத்துப் படித்திருக்க வேண்டும் (மேலும் தகுதியுடைய சில படிப்புகள் குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ளத் தகவல் குறிப்பேட்டைப் படிக்கலாம்).
இயற்பியல், வேதியியல், உயிரியல் / உயிரியல் தொழில்நுட்பப் பாடங்களில் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி மற்றும் இ.டபிள்யூ.எஸ் பிரிவினர் இயற்பியல், வேதியியல், உயிரியல் / உயிரியல் தொழில்நுட்பப் பாடங்களில் 40% மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது. இந்த ஆண்டில் மேற்காணும் +2 அல்லது அதற்கு இணையான தேர்வின் முடிவுகளுக்காகக் காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
2020-ம் ஆண்டில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழக அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் +2 முடிய படித்த மாணவர்களுக்கு, அதிமுக தலைமையினான தமிழ்நாடு அரசு 7.5% இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றியது.இதனால் 400-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் தேர்வு செய்யப்பட்டு எம்பிபிஎஸ் படித்து வருகின்றனர்.அகில இந்திய இட ஒதுக்கீடு
மேலும், 2021-ம் ஆண்டு முதல் அகில இந்திய இடஒதுக்கீட்டில் தேர்வாகும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடும்; பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடும் வழங்கி இந்திய அரசு ஆனையிட்டுள்ளது.
2018-ம் ஆண்டு நடைமுறைப்படி, இத்தேர்வில், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய பாடங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் 45 வினாக்கள் கேட்கப்பட்டு மொத்தம் 180 வினாக்கள் இடம் பெறும். ஒரு வினாவிற்கான சரியான விடைக்கு 4 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில், மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. ஒரு கேள்விக்கு சரியான பதிலளித்தால் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான பதில் அளிக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும். ஒரு மாணவர் 3 முறை நீட் தேர்வை எழுத முடியும். இட ஒதுக்கீடு பெறும் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 30 வயதிற்குள் மூன்று முறையும், மற்றவர்கள் 25 வயதிற்குள் மூன்று முறையும் இத்தேர்வை எழுத முடியும்.
நடப்பு ஆண்டில் நீட் தேர்வு (2024)
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு மார்ச் 9-ம் தேதி வரைக்கும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. www.nta.ac.in, exams.nta.ac.in/NEET என்ற தளங்களில் மார்ச் 9 வரை மாணவர்கள் விண்ணப்பித்தனர். பின்னர் இது மார்ச் 16-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. மே 5ஆம் தேதி நீட் நுழைவுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிக மதிப்பெண் பெற என்ன வழி....!
மாணவச் செல்வங்கள் நன்கு முயன்று படித்தால் மொத்தம் உள்ள 720 மதிப்பெண்களுக்கு 650-மதிப்பெண்களை எடுத்து அகில இந்திய அளவில் நல்ல ரேங்க் பெற முடியும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நீட் தேர்வில் 650-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற என்ன வழி என்பதை கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதை கீழே உள்ள பகுதியில் பார்ப்போம்.

1. அர்ப்பணிப்புடன் இருந்து படித்தல் அவசியம்:
நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறவேண்டும் என்ற இலக்கை அமைத்துக் கொள்ளவேண்டும். இதன்மூலம் நீட் தேர்வுக்குப் படிப்பதை அர்ப்பணிப்பு உணர்வு செயல்படுத்துதல் அவசியம். உங்கள் இலக்கை நோக்கி நீங்கள் உண்மையிலேயே அர்ப்பணிப்புடன் இருந்து செயலாற்ற வேண்டும். மேலும் அதற்கேற்ப உங்கள் முன்னுரிமைகளை அதாவது படிப்பதற்கான அட்டவணையை அமைத்துக் கொள்ளுதல் வேண்டும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது, டிவி பார்ப்பது, சமூக வலைதளங்கள் போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடக்கூடாது. இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஈடுப்டு உங்கள் படிப்பு நேரத்தை நீங்கள் வீணாக்கக் கூடாது. அன்றைய தினம் நீங்கள் திட்டமிட்ட தலைப்பிலான பாடங்களை (டாப்பிக்) நீங்கள் முடிக்க வேண்டும்.
2. கடினமாக பணிகளை முன்னிறுத்துதல் அவசியம்:
நீட் தேர்வுதான் நமது இலக்கு, அதில் 650-க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெறுவது அவசியம் என்ற மனப்பான்மையை நமக்குள் உருவாக்கிக் கொள்ளவேண்டும். கடினமான பாடங்களை விட்டு விடாமல் அவசியம் படிக்கவேண்டும். நீட் தேர்வில் 650+ மதிப்பெண்களைப் பெற கடினமாக உழைக்க வேண்டும் என்பது வெளிப்படையானது. ஆனால், அதனுடன் புத்திசாலித்தனமான வேலையையும் நாம் பார்க்க வேண்டியது அவசியம்.
3. பாடங்களை (டாப்பிக்) புரிந்துகொண்டு மனப்பாடம் செய்தல் அவசியம்:
நீட் தேர்வுக்கான பாடங்களை நன்றாக புரிந்துகொள்ளவேண்டும். பாடங்கள் சம்பந்தமான குறிப்புகளை நீங்கள் எழுதிப் பார்த்தல் அவசியம். அதுதொடர்பான வரைபடங்கள், விளக்கப்படங்கள் ஆகியவற்றை உருவாக்கி நன்கு பயிற்சி பெறுதல் நல்லது. அந்தப் பாடங்களை மனதில் படம்பிடித்து வைத்துக் கொள்ளவேண்டும். தேர்வின்போது இது உங்கள் நினைவகத்தில் நின்று நல்ல முறையில் தேர்வெழுத வழிவகுக்கும். நீங்கள் தயாரித்த பாடக் குறிப்புகளைப் படிப்பது அல்லது கூடுதல் கேள்விகளைப் பயிற்சி செய்வது முக்கியம். மேலும் நீட் தேர்வுக்கான பாடத்தின் தலைப்புகளை நீங்கள் நன்கு புரிந்துகொண்டு மனப்பாடம் செய்யவேண்டும்.
4. NEET பாடத்திட்டத்தில் உள்ள அனைத்து அத்தியாயங்களையும் படித்தல் அவசியம்
நீட் (NEET) பாடத்திட்டத்தில் (மிக முக்கியமானது- NCERT குறிப்பாக உயிரியல் மற்றும் வேதியியல் , சில சமயங்களில் வெளியில் இருந்தும் பாடங்கள்) கேள்விகள் கேட்கப்படுவதால், ஒவ்வொரு பாடத்தின் ஒவ்வொரு தலைப்பையும் படிக்கவும். அனைத்து அத்தியாயங்களை நன்கு புரிந்து வைத்துக் கொண்டு படித்தல் அவசியம்.
5. பலவீனமான பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம்:
நீட் தேர்வுக்கான பாடங்களில் நீங்கள் பலவீனமாக உணரும் பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும். அந்தப் பாடங்கள் உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். அதில் உள்ள கேள்விகள் புரியாமல் போகலாம். அந்தப் பாடங்களை கற்றுக்கொள்வதில் உங்களுக்கு சிரமம் உள்ளது என்பதற்காக எந்த அத்தியாயத்தையும் புறக்கணிக்காதீர்கள். இறுதித் தேர்வுகளில் சிக்கல்களை உருவாக்கும் பகுதியாக அது இருக்கலாம். எனவே, அந்த பலவீனமான பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் தந்து படிக்கவேண்டும்.
நீங்கள் அதைத் தொடர்ந்து அலட்சியம் செய்தால் அது உங்களுக்கு சுமையாக மாறி மதிப்பெண் குறைய வழிவகுக்கும். எனவே அதிலிருந்து அதிகமான கேள்விகளைப் பயிற்சி செய்வதன் மூலம் அந்த தலைப்புகளில் மனப்பாடமாகவும், விளக்கத்தை அளிக்கும் வகையிலும் நாம் பயிற்சிக்குத் தயாராதல் அவசியம்.
6. ஒரு தலைப்பில் இருந்து அனைத்து வகையான கேள்விகளையும் பயிற்சி செய்தல் அவசியம்:
எந்தவொரு நுழைவுத் தேர்வுக்கும் ஒருவர் பாடங்களைப் படித்து குறிப்புகளைத் தயாரிப்பதால் அதிக மதிப்பெண் பெற முடியும். ஒரு டாப்பிக்கில் உள்ள அனைத்து வகையான கேள்விகளையும் பயிற்சி செய்தல் அவசியமாகும். இதன்மூலம் அந்தப் பாடத்திட்டத்தை நாம் மேம்படுத்த உதவுவதோடு, படிப்படியாக உங்கள் மீது நம்பிக்கையை தேர்வின் மீதும், வெற்றியின் மீது வளர்க்கும். இந்த தலைப்பில் உள்ள எந்த கேள்விக்கும் நான் இப்போது பதிலளிக்க முடியும் என்ற நம்பிக்கையை நமக்குள் தோற்றுவிக்கும்.
7. பயிற்சி இன்ஸ்டிடியூட்டுகளில் சேரலாம்:
நீட் தேர்வுக்காக ஒரு நல்ல பயிற்சி அளிக்கும் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து பயிற்சி பெறலாம். இது நமது மதிப்பெண்ணை அதிகரிக்க வழிவகுக்கும். இன்ஸ்டிடியூட் மூலம் தரப்படும் பயிற்சி, வினாத்தாள், மாதிரித் தேர்வுகள் மாணவர்களின் அறிவுத்திறனை அதிகரித்து அவர்கள் வெற்றிகரமான மாணவர்களாக உலா வர வழிவகுக்கும். NEET முறையின் அடிப்படையில் நடத்தப்படும் மாதிரித் தேர்வுகள் உண்மையான தேர்வின்போது வழங்கப்படும் வினாத்தாள் சுமையைக் குறைக்கும்.
8. கருத்துகளை தெளிவாக புரிந்து கொண்டு செயல்படுதல் நல்லது:
உங்கள் கருத்துக்கள் வலுவாகவும் தெளிவாகவும் இருக்க வேண்டும். இதந்மூலம் அந்த நம்பிக்கையை நீங்கள் பெற முடியும். இறுதித் தேர்வில் உங்களுக்குத் தெரியாத எந்த கேள்வியும் இருக்க முடியாது. அதுபோன்ற கேள்விகள் வந்தால் நீங்கள் அதை எளிதில் சமாளிக்க முடியும்.
9. என்சிஇஆர்டி உயிரியல் பாடம்:
உயிரியல் பிரிவில் NCERT இல் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொன்றையும், அதாவது ஒவ்வொரு வரியையும் தெரிந்து கொள்ளுங்கள் அவசியமாகும்.. அந்தப் புத்தகத்தை முழுவதுமாகப் படித்து புரிந்துகொண்டு பதில் அளிக்க முயற்சி செய்யுங்கள்.
10. தொடர்ந்து படித்தல், பயிற்சி செய்தல், ரிவைஸ் செய்தல் அவசியம்:
நீட் தேர்வுக்காக நீங்கள் தொடர்ந்து படிக்கவேண்டும். நீங்கள் தினசரி அடிப்படையில் கேள்விகளைப் பயிற்சி செய்து, உங்கள் படிப்பு ஆதாரங்களிலிருந்து (புத்தகங்கள் அல்லது குறிப்புகள்) தலைப்புகளை ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கும். மாதிரித் தேர்வு எழுதி பயிற்சி செய்யுங்கள். அடிக்கடி ரிவைஸ் செய்தால் நல்ல மதிப்பெண் பெற வழி ஏற்படும்.
11. நம்பிக்கையுடனும் ஊக்கத்துடனும் இருங்கள்
நீட் தேர்வுக்குச் செல்வதற்கு முன்பு, உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள் , எந்த சூழ்நிலையிலும் தளர்ச்சி அடையாமலும், நம்பிக்கையை இழக்காமலும் செயல்படுங்கள். எப்போதும் நம்பிக்கையுடன் இருந்து வெற்றி காணுங்கள்.
மேற்கண்ட வழிமுறைகளைக் கடைப்பிடிக்கும் மாணவச் செல்வங்கள், நீட் தேர்வில் 650-க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற முடியும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications












