படித்த இளைஞர்கள் தன் வாழ்வில் ஒரு முறையாவது சந்தித்தே ஆக வேண்டிய தவிர்க்க முடியாத காரணி இன்டெர்வியூ. சிலர் இதை தன் வாழ்நாளில் வருடத்திற்கு ஒரு முறை பயன்படுத்துவர், சிலர் பல மாதங்களுக்கு ஒரு முறை பயன்படுத்துவர்.
இது ஒரு மிகச் சாதரணமான விஷயமாக இருந்தாலும் கூட கணித பாடம் போல சிலருக்கு கசப்பது இயல்பு. நேர்முகத்தேர்வின் போது சின்ன, சின்ன விஷயங்கள் கூட கண்காணிக்கப்படும் என்பதை மறக்காதீர்கள்.
எனவே, இன்டெர்வியூ சென்ற இடத்தில் உங்களுடைய சோம்பேறித்தானம், சுட்டித்தனத்தையெல்லாம் முட்டை கட்டிவைப்பது சிறந்தது. சிலர் தெரிந்தே, தெரியாமலே சில தவறுகள் செய்வது உண்டு அது என்ன? எவ்வாறு தடுக்கலாம் என்பதை இங்கு பார்ப்போம்.
1. விருப்பமின்மை:
ஏதோ வந்த மலை போனால்... என்று நேர்முகத்தேர்வுக்கு செல்வது வீண். உங்களுடைய ஒவ்வெரு அசைவுகளும் உங்களுக்கே தெரியாமல் உங்களை விற்பனை செய்யும். நேராக அமர்ந்திருத்தல், கேட்கும் கேள்விகளுக்கு சுறுசுறுப்பாக பதில் அளித்தல். எதிர் கேள்விகளை தொடுத்தல் போன்றவை உங்களுக்கு பணியின் மீது உள்ள ஆர்வத்தை காட்டும்.
2. மெபைல் பயன்பாடு:
இன்டெர்வியூ வரிசையில் அமர்ந்து கொண்டு நண்பர்களுடன் டெக்ஸ்ட் செய்வது. அல்லது தேவையில்லாத விஷயங்களை நண்பர்களிடம் பகிர்வது போன்றவைகளை தவிர்ப்பது நலம். முடிந்தால் உங்களது போனை ஸ்விட்ச் ஆப், அல்லது டூநாட் டிஸ்டப், வைப்பிரேட் மோட் போன்ற முறையில் மாற்றலாம்.
3. டிரஸ்கோட்:
இன்டெர்வியூ செய்பவர்கள் உங்களை மில்லியனர் போல் வேடமிட்டு வரவேண்டும் என கட்டாயப்படுத்தப்போவதில்லை. மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும், சுத்தமான, நேர்த்தியான உடையணிந்து வந்துள்ளீர்களா? என்பதை மட்டுமே பார்ப்பார்கள்.
எனவே "ஆள் பாதி ஆடை பாதி" என்ற பழமொழிக்கு ஏற்ப கடன் வாங்கியாவது நல்ல உடை அணிந்து செல்வது நம்மை எடுத்துகாட்டும்.
4. கேள்விகளை கையாளுதல்:
நேர்முகத்தேர்வுக்கு வந்த நபர்களை கணக்கில் கொண்டு தேர்வானது எளிமைப்படுத்தப்படலாம். அல்லது கடினப்படுத்தப்படலாம் , எனவே எதற்கும் தயாராக இருக்க வேண்டும். சில கேள்விகள் முற்றுப்பெறாமல் உங்களை நோக்கி பாயலாம்.
அதனால் தேர்வுக்கு முதல் நாள் நேரமாக தூங்க சென்று துரிதமாக எழுந்து தெளிவான மனநிலையில் தேர்வுக்கு செல்வது நலம் பயக்கும்.
5. எதிர்மறையான பேச்சு:
நீங்கள் முன் பணிபுரிந்த அலுவலகத்தை நேர்முகத்தேர்வில் கழுவி ஊத்துவது சரியான ஒன்று இல்லை, இது சரியில்லை, அது சரியில்லை என பட்டியல் போடுவதை விட்டு, விட்டு அங்கு என்ன வசதிகள் கொடுக்கப்பட்டன. அதைப் பயன்படுத்தி நீங்கள் சாதித்தது என்ன? என்பது போன்ற நேர்மறையான கருத்துகளை பதிவு செய்யுங்கள். இது உங்களை நேர்மறையான சிந்தனையாளர் என்பதை காட்டும்.
6. அளவான பேச்சு:
அளவான பேச்சு வளமான எதிர்காலத்திற்கு உத்தரவாதம். சில கேள்விகள் உங்களை அளவிடக் கேட்கப்படும் கேள்வியாக அமையாலாம். எனவே கேட்கப்படும் கேள்விகளுக்கான அர்த்தம் என்ன என்பதை புரிந்து கொண்டு கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் அளிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
7. பாடி லாங்குவேஜ்:
"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" உங்கள் சொந்த ஊரில் நீங்கள் பகவதியாகவே, அல்லது குட்டி பகவதியாகவே இருக்கலாம். அதெல்லாம் இன்டெர்வியூ செய்பவர்களுக்கு தெரியாமல் பார்த்து கொள்ளுங்கள். நேர்த்தியான நடை, கண்ணுக்கு கண் பார்த்து பேசுதல், சட்டையில் உள்ள மொத்த பட்டன்களையும் மாட்டி மொத்தமாக சமத்தாக நேர்முகத்தேர்வில் கலந்து கொள்வது நீங்கள் தான் இந்த வேலைக்கு பொருத்தமான ஆள் என்பதை நிர்ணயிக்கும்.
8. எடுத்துக்காட்டு:
உங்களது திறமைகளை பொத்தம் பொதுவாக அடுக்குவதை விட ஒரு சிறு எடுத்துக்காட்டுகளுடன் கூறுவது எளிதாக புரிந்து கொள்ளவும், தொடர் கேள்விகளை தடுக்கவும் உறுதுணை புரியும்.
9. தவறான தகவல்களை தவிர்த்தல்:
இவர்களுக்கு என்ன தெரியவா போகிறது என்று நீங்கள் மனதுக்கு தோன்றியதை கூறுவதை தவிர்ப்பது நல்லது. உங்களின் நல்ல நேரத்திற்கு அப்போது வேலை கிடைத்தாலும், சில காலம் கழித்து அது தவறு என நிரூபிக்கப்பட்டால் அது உங்கள் வேலையோடு நன்மதிப்பையும் கெடுக்க வழி வகுக்கும்.
10. தொடர்பில் இருத்தல்:
பொதுத்தேர்வு எழுதி முடித்துவிட்டு புத்தகங்களை தூக்கி வீசுவது போல் அழைப்பு வந்தால் பார்த்து கொள்ளலாம் என்று நினைப்பது மிகத் தவறு. எனவே, இன்டெர்வியூ முடிந்து வீடு திரும்பியதும் இமெயில் மூலமாகவே, போன் மூலமாகவே நன்றி கூறுவது. உங்களுக்கு அந்தப்பணியின் மீது பிரியம் இருப்பதை காட்டும்.