ஆப்ஸ் யுகத்தில் செல்போனும், இன்டர்நெட்டும் இல்லாமல் எதுவுமே இல்லை. பணமில்லா பரிவர்த்தனையில் இருந்து பேப்பர் இல்லாத தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம். டிஜிட்டல் யுகத்திற்கேற்றார்போல் அரசும் எல்லாவற்றையும் எளிமையாகவும், கம்யூட்டர் மையமாக மாற்றி வருகிறது.
பேப்பரில் தேர்வு எழுதி கொண்டிருந்தவர்களை, ஆண்ட்ராய்டு, விண்டோஸ் என கம்யூட்டரில் தேர்வு என்றதும் பலபேருக்கு எதோ ஒரு இனம் புரியாத கலக்கம் மனதில் தோன்றுவது இயல்பு. பயத்தை போக்கி டெக்னாலஜியின் வெளிப்பாட்டை எப்படி எதிர்கொள்வதுன்னு லைட்டா...
1.ஆன்லைனில் வாசிக்க பழகுங்கள்:
ஆன்லைன் தேர்வை பொறுத்தமட்டில் குறைந்தது 2-3 மணிநேரம் நீங்கள் கணினியை மட்டுமே கவனமாக பார்க்க நேரிடும். அப்போது தலைவலி என்பது தவிற்க முடியாத பிரச்னையாக உருவெடுக்க வாய்ப்புள்ளது. எனவே தேர்வு எழுதுவதற்கு முன்பாகவே, பிளாக், ஆன்லைன் நியூஸ் என வாசித்து பழகுங்கள்.
2. அனுபவமே சிறந்த ஆசான்:
ஒருவன் எடுத்த முயற்சியில் உடனே ஜெயித்தால் அவன் புத்திசாலி. அதுவே எடுத்து கொண்ட வேளையில் பல தோல்விகளைக்கண்டு அதன்பின் ஜெயித்தால் அவன் அனுபவசாலி.
கணக்கு கேள்விகளுக்கு அடுத்து கஷ்டத்தை கொடுப்பவை புதிர் சார்ந்த வகையில் கேட்கப்படும் ரீசனிங் கேள்விகள்.
இந்த கேள்விகளுக்கான பதிலை கண்டுபிடிக்க நிறைய 'ஷார்ட்கட்' இருக்கிறது.
ரீசனிங் கேள்விகளுக்கு திரும்ப திரும்ப பதிலளிக்கும் போது ஷார்ட்கட் முறையினை நாமே கற்றுக்கொள்ள முடியும்.
தேர்வுக்காக விழுந்து விழுந்து படித்தாலும் ஆன்லைனில் எழுதும் போது சில தடுமாற்றங்களை சந்திக்க நேரிடும். எனவே தேர்வுக்கு முன் பலமுறை மாதிரி தேர்வுகளை ஆன்லைனில் எழுதிப்பாருங்கள்.
3. விதிமுறைகளை வாசிக்கவும்:
நேரத்தை மிச்சப்படுத்தும் நோக்கில் விதிமுறைகளை படிக்காமலே பல பேர் தேர்வையே முடித்து வருவார்கள். இது சாமர்த்தியமான வழி இல்லை. அதிக நேரம் எடுக்காமல் 10-15 நிமிடத்திற்குள் விதிமுறைகள் முழுவதையும் முழுமையாக படிக்க கற்றுக்கொள்ளுங்கள். இது வெற்றிகரமாக தேர்வை முடிக்க கண்டிப்பாக உதவி புரியும்.
4.நேர மேலாண்மை:
மனதில் முன்கூட்டியே தெளிவாக திட்டமிடுங்கள் இந்தப்பகுதிக்கு இவ்வளவு நேரம் என்று. திட்டமிட்ட நேரத்தை தேர்வில் மிகாமல் பார்த்து கொள்ளவும். முக்கியமாக கஷ்டமான பகுதியை கடைசியில் பார்த்து கொள்ளாலாம் என்று மட்டும் முடிவு செய்யாதீர்கள். கடைசி நிமிட பரபரபரப்பின்றி ஸ்மார்டாக தேர்வை எழுத உதவும்.
5. குழப்பம் வேண்டாம்:
தேர்வை குழந்தைகள் போல கையாளக் கற்றுக்கொள்ளுங்கள். நன்றாக தெரிந்தால் உடனடியாக பதில் அளித்து விட்டு அடுத்து கேள்விக்கு செல்லுங்கள். இல்லை என்றால் பொறுமையாக பதில் அளிக்கும் வகையில் அதை தேர்வு செய்து விட்டு அடுத்த கேள்விக்கு செல்லுங்கள். ஒரே கேள்வியில் போட்டு நேரத்தை வீணக்காதீர்கள்.
6. பதற்றம் அடையாதீர்கள்:
ஒரு பக்கம் டைமர் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு பக்கம் வினாத்தாளை கூர்மையாக படித்து விடையளிக்க வேண்டும். என பல்வேறு வகையில் நம்மை அறியாமல் பதற்றம் தொற்றிக்கொள்ளலாம். அதற்கு இடம்கொடுக்காதீர்கள். நேரம் ஓட ஓட நம் கேள்விகளை வேட்டையாடி வருகிறோம் என்பது மட்டுமே மனதில் இருக்க வேண்டும்.
முறையான, பயிற்சியும், சரியான தயாரிப்பும் இருந்தால் மட்டுமே போதும் முதல்முறை தேர்வு எழுதுபவர் கூட எளிதாக வெற்றியை தனதாக்கலாம்.