மழைக் காலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து பள்ளிக் கல்வித் துறை செயலாளர் பிரதீப் யாதவ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மழை பெய்தால் உடனே பள்ளிகளுக்கு விடுமுறை விடக்கூடாது. மழையால் வெள்ளம் அல்லது போக்குவரத்து பாதிக்கப்படும் என்னும் அபாயம் வந்தால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.
மழையால் பாதித்தால் மட்டுமே
மழைக் காலங்களில் அல்லது திடீர் மழை அறிவிப்பின் போது, எந்தப் பகுதியில் மழை பெய்கின்றதோ அல்லது மழையால் பாதிக்கப்பட்டுள்ளதோ அந்தக் கல்வி மாவட்டம் அல்லது ஊராட்சிப் பகுதி அளவிலான பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டுமே விடுமுறை அளிக்க வேண்டும்.
மாவட்டம் முழுவதும் விடுமுறை
மழையால் பாதிப்பு என்ற உடனேயே மாவட்டம் முழுவதும் விடுமுறை அளிக்க வேண்டியதில்லை என அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை
ஏதேனும் ஒரு பகுதியில் திருவிழா உள்ளிட்ட காரணங்களுக்காக விடுமுறை அளிக்கும் நடைமுறை உள்ளது. அதேப்போன்று மழை பெய்தால் அந்த குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படும்.
சனிக்கிழமைகளில் பள்ளி
மழை போன்ற காரணங்களுக்காகப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் போது, அந்த நாளினை ஈடுகட்டும் வகையில் சனிக் கிழமைகளில் பள்ளி செயல்பட்டு பாடங்களைச் சரியான நேரத்தில் முடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ் குறிப்பிட்டுள்ளார்.