டென்னிஸ் உலகில் இந்தியாவின் பெயரை பொன் எழுத்துக்களில் பொறித்தவர்களில் சானியா மிர்சாவிற்கு தனி இடம் எப்போதும் உண்டு. டைம்ஸ் நாளிதழ் "செல்வாக்கு மிக்க 100 நபர்கள்" பட்டியலில் அவரது பெயரையும் அச்சிட்டது.
டென்னிஸ் ஆட சானியா ஆரம்பித்தது அவரது 6ஆம் வயதில். பொழுது போக்க டென்னிஸ் ஆட ஆரம்பித்தவரின் வாழ்க்கையே பின்னாளில் டென்னிஸ் ஆகிப்போனது. ஆரம்பத்தில் பல அடி சறுக்கல்கள் இருந்தாலும், ஒவ்வொரு சாதனையாளர் போன்றும், அவரது விடாமுயற்சி மற்றும் உழைப்பின் காரணமாக, அவரது வாழக்கையில் வெற்றிகள் மிக எளிதாகிப்போனது.
6ஆம் வயதில் ஆட்டம் ஆரம்பம்:
விளையாட்டு சானியாவின் ரத்தத்தில் ஓடியது. அவரது குடும்பத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு கேப்டனாக ஆடிய வீரர்கள் உள்ளனர். மேலும் அவரது தந்தை 4 வயதில் இருந்து விளையாட்டில் ஆர்வம் உடையவர். எனவே சானியா விளையாடுவதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. மேலும் அவரது வயதும் அவருக்கு துணை நின்றது. 6 வயதாகும் போது நீச்சல் வகுப்பிற்கு சானியா டென்னிஸ் களத்தை தாண்டித்தான் சென்றாக வேண்டும். அப்போது அவரது அம்மா, அவரை டென்னிஸ் ஆடும்படி கூறியுள்ளார். விடுமுறை என்பதால் பொழுதை கழிக்க சானியாவும் ஆட ஆரம்பித்துள்ளார்.
முதலில் நிராகரிப்பு : பின்பு பயிற்சி!
சானியாவிற்கு டென்னிஸ் கற்றுத்தர இருந்த பயிற்சியாளர் முதலில் அவரை பயிற்றுவிக்க தயங்கினார். காரணம் சானியாவின் உயரம். 6 வயது சானியா மிகவும் உயரம் குறைவாக இருந்தார் . ஆனால் ஒரு மாத பயிற்சியிலேயே எத்துணை சிறந்த வீராங்கனையை அவர் என்பதை பயிற்சியாளர் உணர்ந்துகொண்டார்.
என்ஏஎஸ்ஆர் பள்ளியிலும், பின்பு புனித மேரி கல்லூரியிலும் பயின்று பட்டம் பெற்றார் சானியா. அவர் படித்த கல்லூரியில் அவருக்கு முன்பு வீ வீ எஸ் லக்ஷ்மன் படித்தது குறிப்பிடத்தக்கது. விளையாட்டில் மட்டும் அல்லாமல் படிப்பிலும் சானியா வெற்றியாளர்தான். அவரது தலைமை ஆசிரியை அவரது திறமையை கண்டு அவரை விளையாட மேலும் ஊக்குவித்தார். 12-13 வயதிலேயே டென்னிஸ்சை தனது முழுநேர பணியாக எடுக்க சானியா முடிவு செய்தார்.
ரோஜர் ஆண்டர்சன், சீகே பூபதி, (மகேஷ் பூபதியின் தந்தை) அவரது தந்தை இம்ரான் மிர்சா ஆகியோர் அவரை பயிற்றுவித்தனர். சானியா மிர்சாவின் ஒவ்வொரு வெற்றியின் போதும் அவரது பெற்றோர் அளவில்லா ஆனந்தம் கொண்டனர். அவருக்காக அவர்கள் வாழ்வில் பல தியாகங்களையும் செய்தனர்.
16ல் பாய்ச்சல் : விம்பிள்டன் பெண்கள் இரட்டையர் பிரிவில் பட்டம்!
இளவயதில் 10 ஒற்றையர் மற்றும் 13 இரட்டையர் பட்டங்களை சானியா வென்றார். 2002ஆம் ஆண்டு ஆசிய போட்டிகளில் லியாண்டர் பயஸ்யோடு இணைந்து இந்தியாவிற்காக வெண்கல பதக்கம் வென்றார் சானியா. மேலும் யூஎஸ் ஓபன் போட்டியில் மகளீர் இரட்டையர் பிரிவில் அரையிறுதி வரை சென்றார். 2003 ஆம் ஆண்டு விம்பிள்டனில் மகளீர் இரட்டையர் பிரிவில் பட்டமும் , யூஎஸ் ஓபன் மகளீர் இரட்டையர் பிரிவில் அரையிறுதி வரைக்கும் சென்றார்.
வைல்ட் கார்டு!
தனது முதல் டபிள்யூ. டீ. ஏ போட்டியில் ஆட சானியாவிற்கு வைல்ட் கார்டு வழங்கப்பட்டது. ஆனால் அந்த போட்டியின் முதல் ஆட்டத்திலேயே அவர் வெளியேறினார். அதனை தொடர்ந்து கத்தார் பெண்கள் ஓபனிலும், தேர்வுச்சுற்றிலேயே தோல்வியை சந்தித்தார். இருந்தாலும் மனம் தளராமல், 2003லில் ஹைதராபாத்தில் நடந்த ஆப்ரோ-ஆசிய போட்டியில் நான்கு தங்கம் ஜெயித்தார்.
விருதுகளின் வருடம் 2004, 2005:
சானியா 2004ஆம் ஆண்டு ஹைதராபாத் ஓப்பனில் முதல் சுற்றிலேயே தோற்றாலும் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றார். சானியாவிற்கும், இந்தியாவிற்கும் கிடைத்த முதல் டபிள்யூ.டீ.ஏ பதக்கமாகும் அது. அந்த வருடத்தில் 6 ஐடீஎப் விருதுகள் வென்றார். அதே வருடம் அவரது சாதனைகளை பாராட்டி அவருக்கு அர்ஜுனா விருதை அரசு வழங்கியது.
2005ஆம் ஆண்டு ஆஸ்திரேலியன் ஓப்பனில் மூன்றாவது சுற்று வரை சென்று செரினா வில்லியம்ஸ்சை தோற்கடித்தார் சானியா. மேலும் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 4வது சுற்றுவரை சென்ற முதல் இந்திய பெண்மணி என்ற பெருமையும் அவ்வருடம் அவருக்கு யூ. எஸ் ஓப்பனில் கிடைத்தது. ஆனால் அடுத்த சுற்றில் மரியா ஷரபோவாவிடம் தோல்வியுற்றார். ஜப்பான் ஓப்பன் போட்டியில் அரையிறுதி சுற்று வரை முன்னேறினர் சானியா. இந்த வெற்றிகள் மூலம் டபிள்யூ.டீ.ஏ வின் "நியூகம்மர் ஆப் தி இயர்" பட்டம் சனியாவிற்கு கிடைத்தது.
2006ஆம் ஆண்டு ஆஸ்திரேலியன் ஓப்பனில் கலந்து கொண்டார். ஒரு கிராண்ட் ஸ்லாம் போட்டியின் அட்டவணையில் முதன் முதலாக இடம் பெற்ற இந்திய பெண் என்ற பெருமையும் அவருக்கு அவ்வருடம் கிடைத்தது. அந்த போட்டியின் இரண்டாம் சுற்றில் அவர் வெளியேறினார். அடுத்தாக துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் சுவிஸ் வீராங்கனை மார்டினா ஹிங்ஸ் யிடம் தோல்வியுற்றார்.
பிரெஞ்சு ஓபன் மற்றும் விம்பிள்டன் இரண்டிலும் முதல் சுற்றை தாண்ட இயலவில்லை என்றாலும், யூஎஸ் ஓப்பனில் இரண்டாவது சுற்று வரை சென்றார். 2006 செப்டெம்பரில் சன்பீஸ்ட் ஓப்பனில் அரை இறுதி வரை சென்று மீண்டும் மார்ட்டினாவிடம் தோல்வியுற்றார். ஆனால் பெண்கள் இரட்டையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை லிசல் ஹுபரோடு இணைந்து பட்டம் வென்றார்.
வருடம் 2007 : பட்டியலில் 27!
2007 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியன் ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் மூன்று போட்டிகளிலும் இரண்டாவது சுற்றுவரை சென்று திரும்பினார் மிர்சா. அவரது விளையாட்டு வாழ்வில் முக்கிய கட்டமாக அவ்வருட கோடைக்காலம் மாறியது. அதன் மூலம் ஒற்றையர் பட்டியலில் உலக அளவில் 27 இடம் அவருக்கு கிடைத்தது. மேலும் யூஎஸ் ஓப்பனில் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
இரட்டையர் பிரிவில் அவருக்கு வெற்றிகள் அதிகம் கிடைத்தது. பெண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் (மகேஷ் பூபதியோடு இணைந்து) காலிறுதிக்கு சென்றார். 2007ஆம் ஆண்டு 4 இரட்டையர் பட்டம் வென்றார். சானியாவின் டென்னிஸ் வாழ்வில் சிறந்த வருடமாக அமைந்தது அது.
காயங்கள் நிறைந்த 2008:
பல ஆட்டங்களில் இருந்து சானியா 2008ஆம் ஆண்டு காயம் காரணமாக விலகநேரிட்டது. வருடத்தின் துவக்கம் நன்றாக இருந்தாலும், போக போக காயங்கள் கோலோச்சின. ஆஸ்திரேலியன் ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் மகேஷ் பூபதியோடு இணைந்து இறுதி வரையும், ஒற்றையர் பிரிவில் முன்றாம் சுற்று வரையும் சென்றார். ஒற்றையர் பிரிவில் வீனஸ் வில்லியம்ஸ் இவரை வீழ்த்தினார். அடுத்து பிரெஞ்சு ஓபன் மற்றும் பட்டாயா ஓப்பனில் இருந்து விலகநேர்ந்தது. பீஎன்பீ பரிபாஸ் ஓப்பனில் 4வது சுற்றிலும், விம்பிள்டன் 2வது சுற்றிலும் வெளியேறினார்.
2008 பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் இருந்தும் அவர் காயம் காரணமாக விலக நேர்ந்தது. அவருடம் அவரால் யூஎஸ் ஓபன் போட்டிகளிலும் கலந்து கொள்ள இயலவில்லை.
மாற்றம் தந்த 2009:
2008ல் பட்ட காயங்கள் மறந்து தவற விட்ட பட்டங்களை மீண்டும் பெற சானியா 2009ல் தயாராக இருந்தார். ஆஸ்திரேலியன் ஓப்பனில் கலப்பு இரட்டையர் பிரிவில் அவருக்கு முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம் கிடைத்தது. அடுத்து பட்டாயா ஓப்பனில் ஒற்றையர் பிரிவில் இறுதி வரையும், இரட்டையர் பிரிவில் அரையிறுதி வரையும் சென்றார்.
ஆனால் 2010ல் மீண்டும் காயங்கள் உண்டாகின. எந்த போட்டியிலும் அவரால் வெல்ல முடியவில்லை. ஆனால் ஆசிய போட்டிகளில் வெள்ளியும், காமன்வெல்த் போட்டிகளில் வெண்கலமும் வென்றார். 2011 ஆண்டின் துவக்கத்தில் 141ஆம் இடத்தில இருந்தார்.
ஒற்றையர் வேண்டாம் இரட்டையர் வேண்டும்:
2011ல் முதல் இரண்டு மாதங்கள் தோல்வியில் முடிந்தாலும் பீஎன்பீ பரிபாஸ் போட்டியில் அவ்வருடத்தின் முதல் வெற்றி கிடைத்தது (இரட்டையர் பிரிவில்) அடுத்ததாக பேமிலி சர்க்கிள் இரட்டையர் கோப்பையை அதே கூட்டாளியோடு (எலெனா வெஸ்நீனா - ரஷ்யா). அதன் பிறகும் பல தோல்விகள் காத்திருந்தன சானியாவிற்கு. ஒற்றையர் பிரிவில் வருடம் முழுக்க விளையாடியதில் காரணமாக மீண்டும் ஒற்றையர் பட்டியலில் முதல் 60 இடங்களுக்குள் அவரால் வர முடிந்தது.
2012ல் ஆஸ்திரேலியன் ஓபன் போட்டியின் மகளீர் இரட்டையர் பிரிவில் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறினார்.
பிரெஞ்சு ஓபன் முதல் சுற்றில் தோல்வி அவருக்கு காத்திருந்தது.ஆனால் கலப்பு இரட்டையர் பிரிவில் மகேஷ் பூபதியோடு இணைந்து வெற்றிபெற்றார். 2013ல் வெவ்வேறு வீரர்களோடு இணைந்து, 5 டபில்யூ.டி. ஏ பட்டங்களை வென்றார் சானியா.
2014 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியன் ஓப்பனில் மகளீர் இரட்டையர் பிரிவில் காலிறுதி வரை சென்றார். யூ.எஸ் ஓப்பனில், மகளீர் இரட்டையர் பிரிவில், அரை இறுதியோடு வெளியேறினாலும், கலப்பு இரட்டையர் பிரிவில் பட்டம் வென்றார். அவரது கூட்டாளி பிரேசில் நாட்டு வீரர் புருனோ சோரஸ். சானியாவின் விளையாட்டு வாழ்வில் இது அவரது மூன்றாவது கலப்பு இரட்டையர் பட்டமாகும். அடுத்ததாக 17வது ஆசிய போட்டிகளில் தங்கம் மற்றும் வெண்கலம் பெற்றதோடு, டபிள்யூ .டி .ஏ போட்டியின் மகளீர் இரட்டையர் பிரிவில் பட்டமும் வென்றார்.
இரட்டையர் பிரிவுகளின் ராணிகள் சான்டினா:
2015ல் மிர்சா இரட்டையர் பட்டியலில் 6வது இடத்தில் இருந்தார். வேறு வேறு வீராங்கனைகளோடு விளையாடிய பின்னர் சுவிஸ் வீராங்கனை மார்ட்டினா ஹிங்கிஸ்ஸோடு இணைந்து ஆடினார். பீஎன் பீ பரிபாஸ் ஓபன், மியாமி ஓபன் , பேமிலி சர்க்கிள் கோப்பை என அடுத்து அடுத்து மூண்டு பட்டங்களை இருவரும் வென்றனர். இருவரும் இணைந்தது முதல் ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை, மேலும் டபிள்யூ.டி.ஏ பட்டியலில் உலக அளவில் முதலாம் இடத்தை பிடித்த முதல் வீராங்கனை என்ற பெருமை அவரை சேர்ந்தது.
விம்பிள்டன்!
அதன் பிறகு களிமண் தரை கைவிட்டாலும் புல்தரையில் இருவரும் ஜொலித்தனர். 2015ல் விம்பிள்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்றதன் மூலம் பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியாவிற்கு முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம் கிடைத்தது. சானியா மற்றும் ஹிங்கிஸ் இருவரின் பெயரையும் இணைத்து சான்டினா என பத்திரிக்கைகள் பாராட்டின. அவர்கள் இருவரும் ஒரு போட்டியில் கூட தோல்வியுறவில்லை. மேலும் அதே ஆண்டு, யூஎஸ் ஓபன் பட்டத்தையும் சான்டினா ஜோடி வென்றது.
வெற்றி மங்கைகள்!
2016 பிப்ரவரி மாதம் வரை சான்டினா ஜோடி 41 ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளனர். அனைத்து பட்டங்களும் அவர்களுக்கு கிடைத்து. ஆஸ்திரேலியன் ஓபன் பட்டமும் அவர்களது ஆனது. ஆனால் கத்தார் ஓபன் காலிறுதியில் அவர்கள் தோல்வியுற்று வெற்றி ஓட்டத்தை முடித்தனர். ஆனால் எதிர்பாரா விதமாக பீஎன்பீ பரிபாஸ் மற்றும் மியாமி ஓபனிலும் அவர்களால் வெல்ல இயலவில்லை. சிறிது ஓய்வு தேவை என இருவரும் முடிவெடுத்து ஓய்வு முடித்து 2016 இத்தாலியன் ஓபன் பட்டம் வென்றனர்.
"செல்வாக்கு படைத்த 100 நபர்கள்:
2006ல் பத்மஸ்ரீ, விளையாட்டில் இந்திய அரசின் உயரிய விருதான 2015ல் ராஜீவ் காந்தி கேல்ரத்னா, பெற்ற பிறகு 2016ல் விஜய் அமிர்த்தராஜ், ராமநாதன் கிருஷ்ணன், லியாண்டர் பயஸ்சிற்கு அடுத்தாக டென்னிஸில் சானியாவிற்கு பத்ம பூஷன் விருது கிடைத்தது.
நமக்கான பாடம்:
விளையாட்டு உலகில் நமது கொடியும் பறக்க வேண்டுமெனில், இளவயதில் துவங்க வேண்டும். காலம், ஆற்றல், பணம் என அதிக முதலீடுகள் வேண்டும். அவை அனைத்தும் நமது விடா முயற்சி, கடின உழைப்போடு சேரும் பொழுது கண்டிப்பாக வெற்றி தரும். நாம் விரும்புவதை நாம் செய்யும் பொழுது, நமது வெற்றி எளிதாகும், பணம் நம்மை தேடி வரும்.
மேலும் சரியான நேரங்களில் சரியான ஆசான்கள் அமைவது முக்கியம் என்பது சானியாவின் வாழ்க்கை நமக்கு கூறும் விஷயமாகும். மேலும் எது வேண்டும் எது அவசியமில்லை என்பதையும் சானியா உணர்ந்திருந்தார். தனது ஒற்றையர் ஆட்டத்தை விடுத்து இரட்டையர் ஆட்டங்களில் கவனம் செலுத்தி, உலகின் முதல் இடத்தை அவரால் பெற முடிந்தது. எனவே தோல்விகளை கண்டு துவல தேவையில்லை, அவை நமக்கான படிகளாக மாற்ற வேண்டும்.