இந்திய நாட்டின் சுதந்திரத்திற்குப் பின் நமக்கான சட்டத்தை நாமே வரையறுத்து மக்களாட்சியை மலரச் செய்ததை போற்றும் வகையில், குடியரசு தினத்தை கொண்டாடுகிறோம்.
தற்போது, இந்தியாவின் 71 வது குடியரசு தினம் நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் குடியரசு தினத்தை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துக் கொள்வோம் வாங்க.
மக்களாட்சி
குடியரசு என்பதன் நேரடி பொருள் மக்களாட்சி என்பதாகும். மக்களே தேர்தல் மூலம் ஆட்சியாளர்களைத் தேர்வு செய்யும் முறைக்கு தான் குடியரசு என பொருள். 1947 ஆகஸ்ட் 15ம் தேதியன்று சுதந்திரம் பெற்றாலும், உண்மையான சுதந்திரம் 1950, ஜனவரி 26 அன்று தான் கிடைத்தது. சுதந்திரம் பெற்ற போது, பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து தான் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
டொமினியின் அந்தஸ்து
டொமினியின் அந்தஸ்து என்பது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் மேலாதிக்கத்துக்கு உட்பட்ட சுய ஆட்சி ஆகும். அதன்படி பிரிட்டிசாரால் நியமிக்கப்பட்ட கவர்னர் ஜெனரல் நாட்டின் தலைவராக செயல்பட்டார். அப்போது, சுதந்திரத்துக்குப் பின்னும் ஆட்சியாளர்கள், தங்களது விருப்பத்துக்கு செயல்படக் கூடாது என்பதற்காக அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு 1950, ஜனவரி 26ல் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.
அம்பேத்கர் தலைமையில் அரசியலமைப்பு வரைவுக்குழு
அம்பேத்கர் தலைமையில் 1947 ஆகஸ்ட் 28ம் தேதியன்று அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டது. நாடு முழுவதும் மக்களின் கருத்துகள், பல்வேறு ஆய்வுகளுக்குப் பின் இக்குழு சமர்ப்பித்த வரைவினை அரசியல் நிர்ணய சபை 1949 நவம்பர் 26 அன்று ஏற்றுக் கொண்டது. அதன்படி 1950 ஜனவரி 26 காலை 10:18 மணிக்கு அரசியல் சாசனம் அமலுக்குக் கொண்டு வரப்பட்டது. இதைத் தயாரிப்பதற்கு 2 ஆண்டுகள் 11 மாதம் 18 நாட்கள் ஆனது. இதுதான் உலகிலேயே நீண்ட எழுதப்பட்ட ஆவணம் என்பதும் பெருமைக்குரிய ஒன்றாகும்.
அரசியல் அமைப்பு சட்டம்
1950 -ஆம் ஆண்டு ஜனவரி 26ம் தேதியன்று இந்திய அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட போது ராஜேந்திர பிரசாத் முதல் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்திய சட்ட அமைப்பு அமலுக்கு வருவதற்கு முன்பு வரையில் பிரிட்டிஷாரின் இந்திய அரசு சட்டம் 1935 பின்பற்றப்பட்டு வந்தது.
இரண்டு மொழியில் அரசியல் அமைப்பு
இந்திய அரசியல் சட்டத்தை அம்பேத்கர் தலைமையில் பல்வேறு தலைவர்களும், அறிஞர்களும் கொண்ட குழு தயாரித்தது. அப்போது இரண்டு பிரதிகள் மட்டுமே எழுதப்பட்டது. அவற்றில் ஒன்று ஆங்கிலத்திலும் மற்றொன்று இந்தியிலும் எழுதப்பட்டது. 1950ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதியன்று இந்த இரண்டு பிரதிகளிலும் 308 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டனர். இவை இரண்டுமே இன்று வரையில் நாடாளுமன்ற நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
பல நாடுகளை இணைத்த இந்திய அரசியல் சட்டம்
இந்திய அரசியல் சட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உரிமைகள் குறித்த ஷரத்துகள் கனடா நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்திலிருந்தும், குடிமகனின் கடமைகள் சோவித் யூனியனில் இருந்தும், மேலாண் கூறுகள் அயர்லாந்திலிருந்தும், குடியரசு நிர்வாகம் பிரான்ஸ் சட்ட அமைப்பிலிருந்தும், நெருக்கடி குறித்த சட்டங்கள் ஜெர்மனியின் சட்டத்திலிருந்தும் எடுக்கப்பட்டுள்ளன.
We the people
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் முன்னுரை அமெரிக்க சட்ட அமைப்பின் முன்னுரையை போல "We the people" என்று தொடங்குகிறது. முன்னதாக குடியரசு தின கொண்டாட்டங்கள் இர்வின் மைதானம், செங்கோட்டை, ராம்லீலா மைதானம், கிங்ஸ்வே -ல் நடைபெற்றன. குடியரசு தினம் கொண்டாடப்படுவதற்கு இரு தினங்களுக்கு முன்பு அதாவது 1950ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி ரவீந்திர நாத் தாகூர் எழுதிய ஜன கன மன பாடல் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சிறப்பு விருந்தினராக பாக்கிஸ்தான் கவர்னர்
ராஜ்பாத்தில் முதல் முறையாக குடியரசு தின அணிவகுப்பு 1955ம் ஆண்டு நடைபெற்றது. இந்த குடியரசு தின அணிவகுப்பில் பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரல் மாலிக் குலாம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.