மாணவர் ஒருவர் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே கூடுதலாக திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டுமா என்று கேட்டால் நிபுணர்கள் அதற்குத் தரும் பதில் ஆம் என்றுதான். ஒரு மாணவனோ அல்லது மாணவியோ தனது கல்லூரி படிப்புக் காலத்திலேயே (இளநிலை அல்லது முதுநிலை) தனது திறன்களை கூடுதலாக வளர்த்துக் கொள்வது அவசியமாகும் என்று கல்வியாளர்களும், நிபுணர்களும் உறுதிபடத் தெரிவிக்கின்றனர்.
1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிப் படிப்பு கா காலத்தில் நாம் படித்து படிப்புகள், படித்த விதம், பாடங்கள் வேறாக இருக்கலாம். பள்ளிப் படிப்பில், ஒரு மாணவனோ அல்லது மாணவியோ, வெற்றிகரமானவராக இருக்க வேண்டுமெனில், பொதுவாக, பாடப்புத்தகத்தை நன்றாகப் படித்தாலே போதுமானது. அவர், வெற்றிகரமாக பள்ளியைவிட்டு வெளியே வந்து, தனக்குப் பிடித்தமான உயர்கல்வி நிறுவனத்தில், கல்லூரியில் தனக்குப் பிடித்தமான படிப்பில் சேர்ந்து விடலாம்.
ஆனால் கல்லூரி காலத்தில் பாடப் புத்தகத்தை மட்டும் படித்தால் போதுமானதாக இருக்காது. கல்லூரி படிப்பு என்பது இறுதி கட்டம். அந்தப் படிப்பை முடித்தவுடன், நாம் பணிக்கு செல்ல வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது.
எனவே, நாம் எந்தளவிற்கு வேலைக்குத் தயாராக இருக்க வேண்டும் என்பதை புரிந்துகொள்வது முக்கியமானதாக உள்ளது. வெளியுலகில் வேலை பார்ப்பதற்கு தேவையான பல்வேறு திறன்களையும், நாம், கல்லூரி படிப்பின்போதே கற்றுக்கொள்ள வேண்டும் என்பது அவசியமாகும் என நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சுடர் விட்டு பிரகாசிக்கலாம்
அப்போதுதான், கல்லூரிப் படிப்பை படித்து முடித்தவுடனேயே, நல்ல நிறுவனத்தில், நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்து நல்ல பொறுப்பில் அமர முடியும். தொழில்துறைதான் என்றில்லை, எந்த துறையாக இருந்தாலும் சரி, நாம் படிக்கும்போதே தேவையான தகுதிகளையும், திறன்களையும் வளர்த்துக்கொண்டால், பணி செய்யும்போது சுடர் விட்டு பிரகாசிக்கலாம்.
கல்லூரிக்குள் நுழையும்போது, பள்ளிப் படிப்பின் பண்பாட்டைப் பற்றி மறந்துவிட்டு, உங்கள் சிந்தனையைப் பரவலாக்கி, வெளி உலகைப் பற்றிய உங்களின் பார்வையை விரிவாக்க வேண்டும்.
கல்லூரிப் படிப்பு மற்றும் அதற்குப் பிறகான வாழ்க்கைக்குத் தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போது போட்டி நிறைந்த உலகில் பிரகாசிக்க முடியும்.
கல்லூரிப் படிப்பை நிறைவுசெய்யும் ஒரு மாணவர், பணியில் சேர்த்து பயணித்தல் என்ற மிகப்பெரிய ஒரு பொறுப்பு வரம்புக்குள் செல்கிறார். அங்கே அவர் வெற்றி பெறுவதும், தோல்வியடைவதும், அவர், கல்லூரி காலத்தில் கற்றுக்கொள்ளும் திறன்களில்தான் அடங்கியுள்ளது. கல்லூரியில் கற்ற திறன்களை அவர் பயன்படுத்தும் விதத்தில்தான் அவரது எதிர்கால வெற்றி அமைந்துள்ளது என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.
புதிய வளர்ச்சி என்ன...
திறன் வளர்ப்புக்கு என்ன செய்யவேண்டும் என்ற கேள்வி கல்லூரி இளைஞர்கள் மனதில் எழுகிறது. பாடத்திட்ட படிப்பு மட்டுமல்லாமல், இடையிடையே கணினி பயிற்சி, விளையாட்டுப் பயிற்சி, திறனை மேம்படுத்துவதற்கான சிறப்புப் பயிற்சி ஆகியவற்றை அவர்கள் மேற்கொள்ளவேண்டும்.
தாங்கள் படித்த துறையில் என்ன புதிய வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன என்பதைத் தெரிந்துகொள்ளாமல் இருப்பதுதான், இன்றைய பட்டதாரி களின் மிகப் பெரிய பலவீனமான உள்ளது.
அதற்குக் காரணம் படிக்கும் காலத்தி லேயே பணி உலகத் தொடர்புகளை மாணவர்களுக்குக் கல்லூரிகள் ஏற்படுத்தித் தருவதில்லை.
பணி உலகுக்குள் கால்பதிப்பதற்குத் தேவையானவற்றை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய கல்வி நிறுவனங்கள் இன்றைய அதிவேக மாற்றங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கின்றன.
எனவே, கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ப்புக்கு ஊக்கியாக கல்லூரிகள் செயல்படவேண்டும் என நிபுணர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
திறன் வளர்ப்புக்கான புத்தகங்களைப் படிப்பதால் மாணவர்களின் அறிவுப் பெட்டகம் அதிகரிக்கலும்.
பள்ளிகளைப் போன்று, கல்லூரிகளில் இதற்கென்று தனிவகுப்புகள் இல்லாவிட்டாலும், கல்லூரி வகுப்பு நேரம் போக, மற்ற நேரத்தில் பொது நூலகங்கள் மற்றும் துறை சார்ந்த நூலகங்களில் மாணவ-மாணவிகள் நேரத்தை செலவிட வேண்டும். ஆனால் நூலகத்தில் நேரத்தை செலவிடும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை என்பது குறைந்த அளவிலேயே இருக்கிறது.

செல்போன் மோகம்
செல்போன் மோகம், அவர்களை அதில் மூழ்கடித்துவிட்டதால், நூலகங்களில் அறிவுசார்ந்த புத்தகங்களைத் தேடி படிக்கும் ஆர்வம் இல்லாமலே போய்விட்டது. இதனை மாற்ற வேண்டும். புத்தக வாசிப்பின் அவசியத்தை எடுத்துக்கூறி, மாணவர்களிடம் ஆர்வத்தை அதிகரிக்க வேண்டிய சூழல் உள்ளது. புத்தகங்கள்தான் மாணவர்களின் அறிவுக்கண் திறக்கும் அதிசயம் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
பள்ளி வளாகத்தில் மாணவர்கள் போகாத ஒரு இடமாக நூலகம் இருக்கிறது. ஆனால் தற்போது அந்த நிலை சற்று மாறி இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
புத்தக வாசிப்புத்திறன்
மாணவர்களுக்கு புத்தக வாசிப்புத்திறனை மேம்படுத்தவும், நூலகங்களில் தேவையான புத்தகங்களை வாங்கி வைக்கவும் கல்வித்துறை சார்பில் நிதி ஒதுக்கப்படுகிறது. இதனால் நூலகங்களில் புத்தகங்கள் அதிகம் இருக்கின்றன. நூலகங்களை நிர்வகிக்க நூலகர் என்ற பதவி கிடையாது. அதற்கென்று ஒரு ஆசிரியருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்படுகிறது. அவர் கற்பித்தல் பணியோடு சேர்த்து இதை மேற்கொள்கிறார். எனவே இதற்கென்று தனியாக ஒருவரை நியமித்தால் புத்தக வாசிப்பு, மாணவர்கள் மத்தியில் ஊக்கப்படுத்த முடியும் என்று நிபுணர்கள் யோசனை தெரிவிக்கின்றனர்..
புதிய கண்டுபிடிப்பு
மாணவர்கள் பாடங்களை மட்டும் படித்தால் போதாது, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் திறமையையும், மொழியாளுமைத்திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் பேசுவது மட்டும் கம்யூனிகேஷன் ஸ்கில் என நினைத்துக்கொண்டு இருக்கக் கூடாது.
கல்லூரியில் பயிலும்போதே மாணவர்களுக்கு அதிக நேரம் கிடைக்கும். அந்த நேரத்தை சினிமா, நாடகம், நண்பர்களுடன் அரட்டை அடித்தல், வெளியிடங்களுக்குச் செல்லுதல் என வீணாக்கக்கூடாது.
உங்களுக்குக் கிடைத்த பொன்னான நேரத்தை வீணாக்காமல் அதை நமது திறன் வளர்ப்பு பணிகளுக்கு மடைமாற்றவேண்டும்.
பேச்சுத்திறன்
பயனுள்ள வகையில் நேரத்தை பயன்படுத்தி பேச்சுத்திறன், எழுத்துத் திறன் போன்றவற்றை வளர்த்துக் கொள்ளலாம். மாலை நேரங்களில் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகள், கணினி வகுப்புகள், டிப்ளமோ வகுப்புகள் போன்றவற்றுக்கு நம்மைத் தயார் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆராய்ச்சி அறிவு, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் ஆர்வம், மேலாண் திறன் போன்ற கூடுதல் தகுதிகளை வளர்த்து கொண்டால், வேலைவாய்ப்புகளை தேடி ஓடும் நிலை மாறி, மாணவர்களை தேடி வேலைவாய்ப்புகள் வரும் என்பது உண்மை.

கடின உழைப்பு
கடின உழைப்பில்லாமல் வெற்றியடைய முடியாது. எந்த வேலையையும், நாளைக்கு என்று தள்ளிப்போடக் கூடாது. கல்வி நிறுவனங்களில் உள்கட்டமைப்பு வசதிகள், ஆய்வுக் கூடங்கள், நூலகங்கள் ஆகியவற்றை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பயிற்சியுடன் கூடிய படிப்பு தான் வெற்றிக்கு வழி வகுக்கும். மாணவர்களை, ஆய்வுகளின் பக்கம் கவனத்தை திருப்பும் பணியை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். இன்றைக்கும், டி.சி.எஸ்., போன்ற நிறுவனங்களுக்கு, 40 ஆயிரம் இன்ஜினியர்கள் தேவைப்படுகின்றனர். காரணம், பட்டம் பெற்றவர்கள் அனைவரும் வேறு வேலைகளுக்குச் செல்கின்றனர். எனவே, இருக்கும் வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ப நமது திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மாணவர்கள் தங்களது பலம் மற்றும் பலவீனங்களைப் பட்டியலிட்டு, அதைப் பற்றி சிந்தித்து, அதற்கேற்ப வளர்ச்சித் திட்டத்தை உருவாக்க வேண்டும்.
உங்களிடம் உள்ள திறமைகள் என்னென்ன, நீங்கள் எதை விரும்புகிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். உதாரணமாக, நீங்கள் உரையாடல்களைச் செய்யத் தயங்கினால், அங்குதான் நீங்கள் வேலை செய்ய வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். அதேபோல், சுய வெளிப்பாடு உங்கள் பலவீனம் என்றால், உங்களை அதிகம் தொடர்பு கொள்ள வைக்கும் செயல்களில் அதிகம் ஈடுபடுங்கள்.
பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்வேறு தொழில்சார் அமைப்புகளால் மாணவர்களுக்காக பெயரளவு அல்லது கட்டணமின்றி பல திறன் வளர்ப்பு பட்டறைகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. புதிய திறன்களைக் கற்றுக்கொள்வதற்கும், உங்களுக்குச் சொந்தமான திறன்களைக் கூர்மைப்படுத்துவதற்கும் இதுபோன்ற செயல்களில் அதிகம் பங்கேற்க முயற்சிக்க வேண்டும். கலந்துரையாடும் அமர்வுகள் ஒருவரைச் சிறந்த கேட்பவராகவும், பிரச்சனைகளைத் தீர்ப்பவராகவும், பல கருத்துக்களைச் சகிப்புத்தன்மை உடையவராகவும் மாற்றும்.
சில திறன்களைப் பெறுவதற்கான சிறந்த வழி, பயிற்சியின் மூலம் நீங்கள் எளிதாகப் பெறக்கூடிய அனுபவத்தின் மூலமே ஆகும் என்பதை மறக்கக்கூடாது. சிக்கலைத் தீர்ப்பது, நேர மேலாண்மை மற்றும் குழுப்பணி போன்ற தொழிலாளர் திறன்களைப் பயிற்சி செய்ய ஒரு பகுதி அல்லது முழு நேரப் பயிற்சியைத் தேட வேண்டும்.
நம்மால் முடியாதது எதுவுமில்லை. உங்களைப் பயிற்றுவிக்கவும், உங்களுக்காகக் கிடைக்கும் ஏராளமான வளங்களைப் பயன்படுத்தவும் இணையம், நூலகங்கள் அல்லது சுய உதவித் திட்டங்களைப் பயன்படுத்தலாம். நீங்கள் விரும்பும் பாடத்திட்டத்திற்கு இலவச ஆன்லைன் வகுப்புகளிலும் சேரலாம்.
இந்த திறன்களை உங்கள் வகுப்பறையிலும், சக நண்பர்களிடமும் பயன்படுத்த முயற்சிக்கலாம்.
உலகெங்கிலும் உள்ள முதலாளிகள் நல்ல தகவல்தொடர்பு மற்றும் மக்கள் திறன் உள்ள நபர்களை மதித்து அவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகின்றநர்.
ஏனெனில் இவை நீங்கள் குழுக்களிலும் நிறுவனங்களிலும் எளிதாக செழிப்படையவும், மேன்மை அடையவும் உதவுகின்றன. இதேபோன்ற கல்லூரி முடித்த பின்னர் வெளிநாட்டுக்குச் சென்று உயர்கல்வி படிப்பது மற்றும் வேலை செய்வது பற்றிய கூடுதல் தகவல்களை அதற்குரிய இணையதளங்களில் இருந்து பெறலாம்.
நமது நாட்டில் வேகமாக அதிகரித்து வருகிறது மக்கள்தொகை. இதனால் முதியோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
எனவே, நாட்டில் மலிவு விலையில் சுகாதார பராமரிப்பு தேவை மற்றும் மருத்துவர்கள், உளவியலாளர்கள், சமூக சேவையாளர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள், நன்கு பயிற்சி பெற்ற பணியாளர்களின் தேவையும் அதிகரித்து வருவது கண்கூடு.
முதியோருக்கு கவனிப்பு கொடுப்பது மகத்தான வாய்ப்புகளுடன் வளர்ந்து வரும் துறையாக நாட்டில் பார்க்கப்படுகிறது. மாறி வரும் குடும்ப அமைப்புகள், வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சமநிலைப்படுத்தும் பரபரப்பான வேலை மற்றும் நவீனமயமாக்கல் ஆகியவற்றால் வீட்டில் உள்ள பெரியவர்களை பராமரிப்பது என்பது ஒரு சவாலான பணியாக மாற்றியுள்ளது. இது இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையையும் சேவைகளையும் மற்றவர்களுக்காக அர்ப்பணிக்கலாம். முதியோர் பராமரிப்புத் திறனும் தற்போது மதிக்கத்தக்க ஒரு பணியாக மாறியுள்ளது. முதியோர் பராமரிப்புத் தொழிலைத் தேர்வுசெய்வது நல்லது என்கிறார்கள் நிபுணர்கள்.
இதுபோன்று மாறி வரும் உலகில் பல்வேறு திறன் வளர்ப்புப் பயிற்சிகள் பெருகி வருகின்றன. கல்லூரி காலத்தில் திறன் வளர்ப்புபயிற்சிக்கு முக்கியத்துவம் தரும் நபர்கள் எதிர்காலத்தில் சிறப்பான இடத்துக்கு வர முடியும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications












