இது இமெயில் யுகம். இதனால் கடிதங்களுக்கு அதிகம் வேலை இல்லை தான். ஆனாலும், சில நிறுவனங்கள் அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க கேட்கும் போது பலரும் திணறி விடுவது வாடிக்கையாகி விட்டது.
இ-மெயிலைப் பொருத்தவரையில் ஹாய் என் ஆரம்பித்து இரண்டு மூன்று வரிகளில் விஷயத்தை சொல்லி அனுப்பி விடலாம். இலக்கணம் பற்றியோ கடித நாகரீகம் பற்றியோ அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால், வேலைக்கு விண்ணப்பிக்க முறையான கடிதம், அல்லது இ-மெயில் எப்படி தயார் செய்வது என உங்களுக்குத் தெரியுமா ?
எழுத்துக்களின் அளவு
ஒரு நிறுவனத்துக்கு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால், விண்ணப்பம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை அறிந்துகொள்வது அவசியம். இ-மெயில் மூலம் விண்ணப்பிக்கும் போது, எழுத்துகள் 10 அல்லது 12 ஃபான்ட் அளவில் இருக்க வேண்டும்.
ஃபான்ட் மற்றும் பக்கத்தின் அளவு
விண்ணப்பப் படிவத்தில் ஏரியல் அல்லது ரோமன் ஃபான்ட்டை பயன்படுத்துவது நல்லது. ஹரிசான்டல், வெர்ட்டிகல் முறைகளைத் தவிர்த்து, ஏ4 தாளை பயன்படுத்த வேண்டும். விண்ணப்பத்தில் கடைசி வரை ஃபான்ட் சைஸ் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். நடுவில் ஃபான்ட் அளவு பெரிதுபடுத்துவது, போல்டாக காண்பிப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையே 1.5 அளவு இடைவெளி இருக்க வேண்டும்.
காப்பி பேஸ்ட்
மற்றொருவரது விண்ணப்பத்தை காப்பி எடுத்து விண்ணப்பித்தீர்கள் என்றால் நிச்சயம் மாட்டிக் கொள்வீர்கள். இதுபோன்று செய்யும்போது, நேர்முகத் தேர்வில் சில கேள்விகளின் மூலமாகவே வேறொருவர் தயாரித்து அளித்த விண்ணப்பத்தின் நகல்தான் அது என்பதை எளிதாகக் கண்டறிந்து விடுவர்.
இத பண்ணிடாதீங்க..
முழுமையடைந்த விண்ணப்பப் படிவத்தினை லேசர் பிரின்ட் எடுத்தால் மிக நன்றாக இருக்கும். இரண்டு புறம் பிரின்ட் எடுப்பதை தவிர்க்க வேண்டும். அதில், ஸ்டேப்ளர் பின் செய்வதைத் தவிர்த்து, கிளிப்பை பயன்படுத்துவது நல்லது.
போட்டோ இருக்கா ?
விண்ணப்பத்தில் தேவையில்லாமல் புகைப்படம் ஒட்டக் கூடாது. அந்த நிறுவனம் கேட்டுக் கொண்டால் மட்டுமே புகைப்படத்தை இணைக்க வேண்டும். முகம் 80 சதவிகிதம் தெரியும்படியும், பேக்ரவுண்ட் வெள்ளை நிறத்தில் இருப்பதாகவும் புகைப்படம் இருக்க வேண்டும். எப்போதும் மூன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை உடன் வைத்துக்கொள்ளுங்கள்.
மறந்திடாதீங்க பாஸ்
விண்ணப்பத்தில் தேதி, கையெழுத்து இருப்பதை கட்டாயம் உறுதி செய்துக்கோங்க. 10 பேரில் 5 பேர் விண்ணப்பத்தில் தேதி அல்லது கையெழுத்திட மறந்தே வேலையையும் இழந்து விடுகின்றனர். இந்த தவறை செய்வது, கவனக்குறைவை வெளிக்காட்டும். விண்ணப்பத்தை 2 நகல் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
எழுத்துப் பிழையில் கவனம்
விண்ணப்பத்தில் தவறு உள்ளதா என்று இரண்டு, மூன்று பேரிடம் காட்டி, தவறு இருந்தால் திருத்தம் செய்து பிறகு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் தொலைபேசி எண் அல்லது செல்போன் எண், ஒரு இ-மெயில் முகவரி, நிரந்தர முகவரி ஆகியவற்றை அளிக்க வேண்டும். படிப்பைக் குறிப்பிடும்போது முழுமையாக எழுத வேண்டும்.
மண்ட மேல இருந்த கொண்டைய மறந்துட்டேன்
விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள படிப்பு, தொழில் சார்ந்த அனுபவம், விருப்பம் ஆகியவற்றை முழுமையாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான், அதுசம்பந்தமாக கேள்வி கேட்கப்படும்போது, எளிதில் பதில் அளிக்க முடியம். தெரியாத விஷயத்தை விண்ணப்பத்தில் குறிப்பிடக்கூடாது.