உலகம் முழுவதும் பரவியுள்ள இந்துக்களால் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது விநாயகர் சதுர்த்தி. முழு முதற் கடவுளும், ஈசனின் மகனுமான விநாயகர் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி விழாவானது ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது.
அதன்படி, இந்த வருடம் செப்டம்பர் 2ம் தேதியன்று இந்த விழா தொடங்கியது. இந்தியாவைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு மாநிலத்திலும் இதன் வழிபாட்டு முறை மாறுபட்டாலும் குறைந்தது 3 நாட்கள் முதல் 10 நாட்கள் வரையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இன்றைய நாளில் மாணவர்கள் விநாயகர் சதுர்த்தி குறித்து அறிந்துகொள்வோம் வாங்க.
விநாயகர் சதுர்த்தி விழாவின் வரலாறு
மன்னர் சத்ரபதி சிவாஜியின் காலம் முதல் விநாயகர் சதுர்த்தி விழா பிரபலமாகிவிட்டதாக வரலாறு உள்ளது. இன்று நாம் பார்க்கும் விநாயகர் விழா கொண்டாட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்குப் பிள்ளையார் சுழி போட்டவர் இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் தலைவரான பாலகங்காதர திலகர். 1893-ம் ஆண்டு சர்வஜன கனேஷ் உத்சவ் என்னும் பெயரில் இவர் ஆரம்பித்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமே இன்றுவரை மக்கள் மத்தியில் மிகப்பெரிய விழாவாக வருடம் தோறும் கொண்டாடப்படுகிறது.
புராணங்களில் விநாயகர்
லிங்க புராணக் கதையின் படி அரக்கர்களின் கொடுமைகளிலிருந்து தங்களைக் காத்திட சிவபெருமானை நோக்கி தேவர்கள் தவமிருந்ததாகவும், அவர்களின் வேண்டுதலின் பயனாகத் தடைகளை தகர்த்தெறியும் ஆற்றலுடன் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியால் உருவாக்கப்பட்டவரே விக்ன கர்த்தர் எனப்படும் விநாயகர் என்றும் சொல்லப்படுகிறது.
இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி
நம் நாட்டில் மற்ற மாநிலங்களை விடவும் மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கோவா உள்ளிட்ட மாநிலங்களில் விமர்சையாக பத்து நாட்களுக்கு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. மேலும், வெளி நாடுகளில் வாழும் இந்திய மக்களாலும் இவ்விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
கொண்டாடும் முறை
விநாயகர் சதுர்த்தி கொண்டாடத்தின் ஆரம்ப காலங்களில் அரச மரத்தடி விநாயகராகவே இருந்த விழா, இன்றைய காலகட்டத்தில் விநாயகர் சதுர்த்தியின் போது பக்தர்களால் ஊரெங்கும் பந்தல்கள் அமைத்து தற்காலிகமாக விநாயகர் சிலைகள் நிறுவி பூஜைகளை மேற்கொள்கின்றனர். இங்கே நிறுவப்படும் விநாயகர் சிலைகள் அரை அடி முதல் 70, 100, 150 அடி வரை வசதிக்கேற்ப விதவிதமாக செய்யப்படுகின்றன.
நீரில் கரையும் கணேசா..!
மூன்று முதல் பத்து நாட்கள் வரையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு நிறைவு நாளன்று அந்த விநாயகர் சிலை நீர் நிலைகளில் கரைக்கப்படுகிறது. இதற்குப் புராண விளக்கமாக விநாயகரை நீரில் கரைக்கும் போது உயிர்ப்பிலிருந்து விடுபடுகிறான். பஞ்சபூதமான நீரில் கரைந்து மீண்டும் மண்ணாகவே மாறுகிறான் போன்ற விளக்கம் அளிக்கப்படுகிறது.
நீரில் கரைப்பதன் அறிவியல் காரணம்
விநாயகர் சிலையை நீரில் கரைப்பதற்கு அறிவியல் காரணங்களும் உண்டு. அதில் குறிப்பாக, ஆடிப்பெருக்கு அன்று வெள்ளம் ஏற்பட்டு ஆற்றில் உள்ள மணலை எல்லாம் வெள்ள நீர் அடித்துச் சென்றிடும். இதனால் அந்த இடத்தில் நீர் தங்காமல் நிலத்தடி நீர் குறைவு ஏற்படும். இதனைச் சீர் செய்யவே கெட்டியாகத் தங்கிடும் களிமண்ணினால் செய்த விநாயகர் சிலையைக் குறிப்பிட்ட நாட்கள் கழித்து ஆற்று நீர் உள்ளிட்ட நீர் நிலையில் கரைத்தனர்.
விநாயகர் சதுர்த்தி கட்டுரை எழுதும் முறைகள்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாணவ, மாணவியர்கள் கட்டுரை அல்லது பேச்சுப் போட்டியில் கலந்துகொள்வதாக இருந்தால் கீழே குறிப்பிட்டுள்ள சில முக்கிய குறிப்புகளை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
- கதை / விளக்கம் / தூண்டுதல் போன்ற எழுத விரும்பும் கட்டுரையின் வகையைப் பற்றி முதலில் சிந்தியுங்கள்.
- விநாயகர் தொடக்கக் கடவுளாகக் கருதப்படுகிறார். இதனை மறந்திடாமல் குறிப்பிடுங்கள்.
- விநாயகர் சதுர்த்தி விழா குறித்து சில முக்கிய குறிப்புகளைச் சேகரியுங்கள்.
- கட்டுரை எழுதும் முன்பே மேலோட்டமான தெளிவை ஏற்படுத்துங்கள்.
- வரலாற்று அல்லது புராணங்களில் பிழை இல்லாமல் இருப்பது நல்லது. அதுகுறித்தான முழு தகவல் தெரியாத பட்சத்தில் அதனை தவிர்த்து விடலாம்.