கேட் தேர்வில் எளிதில் வெற்றி பெறவேண்டும் என்று நினைக்கும் மாணவச் செல்வங்கள் அதிகம். அந்தத் தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை கல்வியாளர்களும், நிபுணர்கள் இங்கு விளக்குகின்றனர். தேர்வில் வெற்றி பெற 10 அருமையான டிப்ஸ்களை இங்கு நிபுணர்கள் வழங்குகின்றனர்.
கேட் எனப்படும் பொறியியல் பட்டதாரி தகுதித் தேர்வு (Graduate Aptitude Test in Engineering, GATE) மத்திய அரசின் மனிதவள மேம்பாடு அமைச்சகம்,கல்வித் துறையில் இயங்கும் கேட்-தேசிய ஒருங்கிணைந்த வாரியத்திற்காக ஏழு இந்திய தொழில்நுட்பக் கழகங்களும் (ஐஐடி) இந்திய அறிவியல் கழகமும் (ஐஐஎஸ்சி) இணைந்து நடத்தும் நாடாளவிய ஆண்டுத் தேர்வாகும்.
கேட் என்று அழைக்கப்படும் கிராஜுவேட் ஆப்டிட்யூட் டெஸ்ட் இன் இன்ஜினியரிங் (GATE) என்பது முதுகலை படிப்புகளில் சேருவதற்கும், BHEL, GAIL, HAL, IOCL, NTPC, NPCIL, ONGC மற்றும் PGCI போன்ற சில பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கும் அடிப்படையான தகுதி தேர்வுகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

உயர் கல்வித் துறை மற்றும் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒருங்கிணைப்பு வாரியம் (NCB)- GATE, சார்பாக, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் (IISc) மற்றும் காரக்பூர், மும்பை, டெல்லி, கவுகாத்தி, கான்பூர், சென்னை, ரூர்க்கி மற்றும் பெங்களூரு ஆகிய ஏழு இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (IITs) இணைந்து ஒவ்வொரு ஆண்டும் கேட் தேர்வை நடத்துகிறது. இது IISc மற்றும் IIT களில் முதுகலை (PG) திட்டங்களில் (M.E., M.Tech, PhD) சேர்க்கைக்கான தகுதியான நுழைவுத் தேர்வாகும்.
அனைத்து ஐஐடி கல்லூரிகள், என்ஐடி கல்லூரிகள், ஐஎஸ்எம் தன்பாத், அண்ணா பல்கலைக்கழகம், ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், ஐசிடி (இன்ஸ்டிட்யூட் ஆஃப் கெமிக்கல் டெக்னாலஜி), விஐடி-வேலூர் தொழில்நுட்ப நிறுவனம், தாபர் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் & டெக்னாலஜி மற்றும் பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ், ராஜஸ்தான் ஆகியவை, தங்கள் சேர்க்கை செயல்முறையின் போது கேட் (GATE) மதிப்பெண்ணை ஏற்றுக்கொள்ளும் கல்லூரிகள் ஆகும். கேட் மதிப்பெண் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
கேட் எழுத தகுதி என்ன...!!
ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பின் மூன்றாம் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டில் படித்து வரும் பொறியியல், தொழில்நுட்பம், கட்டிடக்கலை, அறிவியல், வணிகம் அல்லது கலைகளில் ஏதேனும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பை முடித்தவர்கள் GATE தேர்வில் பங்கேற்கத் தகுதியுடையவர்கள். கேட் தேர்வுக்கு வயது வரம்பு இல்லை. இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் நான்கு ஆண்டு பொறியியல் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது இறுதியாண்டில் படித்துக் கொண்டிருக்க வேண்டும்.
கணினி வழி...!
GATE தேர்வு 29 பாடங்களுக்கு நடைபெறும். தேர்வு முற்றிலும் கணினி அடிப்படையிலானது (CBT). GATE தேர்வில் இரண்டு முக்கிய பகுதிகள் இருக்கும், அவை ஜெனரல் ஆப்டிட்யூட் (GA) மற்றும் தேர்வர் தேர்ந்தெடுத்த பாடம். கேட் தேர்வின் மொத்த கால அளவு 3 மணி நேரம். GA வில் 10 கேள்விகள் கேட்கப்படும் மற்றும் 55 கேள்விகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடத்தில் இருந்து கேட்கப்படும், எனவே மொத்தம் 65 கேள்விகளுக்கு தேர்வு நடைபெறும்.

2 கேட் தாள்கள்..
ஒரு தேர்வர் ஒன்று அல்லது இரண்டு கேட் தாள்களை எடுத்து தேர்வெழுதலாம். இருப்பினும், உங்கள் இரண்டு தாள்களும் வரையறுக்கப்பட்ட பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். நீங்கள் இரண்டு தேர்வுகளை எழுதினாலும், நீங்கள் ஒரு விண்ணப்பப் படிவத்தை மட்டுமே நிரப்பினால் போதுமானது என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இத்தேர்வில் தகுதிபெற்றவர்கள் மனிதவள அமைச்சகத்தின் பல்வேறு பட்டமேற்படிப்பு திட்டங்களில் சேரவும் நாட்டின் பொறியியல்/தொழில்நுட்ப கல்லூரிகள்/கழகங்களில் வேறு சில அரசு கல்விநிதி/உதவிகளை பெறவும் முடியும்.
கேட் தேர்வில் தேர்ச்சி பெற்று இளநிலை பொறியியல்/தொழில்நுட்பம்/கட்டிடக்கலை/மருந்துகளியல் அல்லது முதுநிலை அறிவியல்/கணிதம்/புள்ளியியல்/கணினி செயல்பாடுகள் பட்டம் பெற்றவர்கள் தங்கள் மேற்படிப்பை பொறியியல்/தொழில்நுட்பம்/கட்டிடக்கலை/மருந்துகளியல் முதுநிலை/முனைவர் பட்டங்களுக்கும் அல்லது தொடர்புள்ள அறிவியல் முனைவர் திட்டங்களுக்கும் சேர தகுதி பெறுகின்றனர்.
கல்வி நிதியுதவி பெற அக்கல்வி நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பட்டமேற்படிப்பில் சேர்ந்திருக்க வேண்டும். பொறியியல்/தொழில்நுட்பம்/கட்டிடக்கலை/மருந்துவியல் பாடதிட்டங்களில் முதுநிலை பட்டம் பெற்றவர்களுக்கு கல்வியுதவி பெற கேட் தகுதி தேவையில்லை.
சில கல்வி நிறுவனங்கள் பட்டமேற்படிப்பில் சேர்க்க கேட் தகுதியை கட்டாய விதியாக வைத்துள்ளனர். மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு (CSIR) நிறுவனத்தின் இளநிலை ஆய்வாளர்கள் உதவிக்கும் அவர்கள் அரவணைக்கும் திட்டங்களின் ஆய்வாளர்களுக்கும் இத்தகுதி தேவைப்படுகிறது. சில அரசு நிறுவனங்கள் அறிஞர்/பொறியாளர் வேலையிடங்களுக்கு கேட் தகுதியை வேண்டுகின்றனர்.
அண்மைக் காலங்களில் பல கல்வி நிபுணர்கள் கேட் தேர்வினை, இவ்வகைப் போட்டித்தேர்வுகளில் மிகக் கடினமான ஒன்று என சொல்கின்றனர். மேலும் இந்திய தொழில்நுட்ப கழகங்களில் (ஐஐடி) பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு போன்றே மிக கடினமான வகையில் உள்ளது. சிங்கப்பூரிலுள்ள பல பல்கலைக்கழகங்களும் ஜெர்மனியிலுள்ள சில தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களும் தத்தம் கல்லூரிகளில் மேற்படிப்புகளில் சேர கேட் தேர்வு மதிப்பெண்களையும் ஓர் அளவுகோலாக கொண்டுள்ளன.
பொறியியல் படிக்கும் மாணவர்கள் அதிகரித்ததன் விளைவாக முதுநிலை பொறியியலுக்கான மாணவர் சேர்க்கையில் கடும் போட்டி நிலவுகிறது. முதுநிலை பொறியியல் படிப்பதற்கும் வேலை வாய்ப்பிற்கும் முக்கியமானதாக கேட் தேர்வு அமைந்து உள்ளது.
கேட் தேர்வில் சிறப்பான மதிப்பெண்கள் எடுப்பதன் மூலம் சிறந்த கல்லூரிகளில் எம்.இ. / எம்.டெக். படிப்புகளில் சேர்வதற்கான வாய்ப்புகள் உள்ளதோடு அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறுவதற்கும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியன் ஆயில் நிறுவனம், பாபா அணு ஆராய்ச்சி நிலையம், என்.டி.பி.சி., பெல் நிறுவனம் போன்ற பல பொதுத்துறை நிறுவனங்கள் கேட் மதிப்பெண்களின் அடிப்படையில் ஆட்களை தங்கள் நிறுவனப் பணிக்கு சேர்க்கின்றனர்.
ஆண்டுதோறும் கேட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2008-ல் 1 லட்சத்து 66 ஆயிரம் பேர் எழுதிய நிலையில், 2011-ல் 5 இலட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கேட் தேர்வில் ஒரு முறை எழுதி பெறப்படும் மதிப்பெண் அடுத்து வரும் 3 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.

கேட் தேர்வை ஏன் தேர்வு செய்யவேண்டும்...
கேட் தேர்வு என்பது தொழில்நுட்ப வேலைகளில் பிரகாசமான வாழ்க்கையை ஒருவர் பெறுவதற்கு பல்வேறு தொழில் வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறக்கிறது. கேட் தேர்வு மூலம், பல்வேறு துறைகளில் பொறியாளர் பயிற்சி, மேலாண்மை பயிற்சி, உதவி மேலாளர் மற்றும் பிற வேலை நிலைகளை வழங்கும் ஏராளமான நிறுவனங்கள் உள்ளன. கேட் (GATE) மதிப்பெண் 3 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் என்பது முக்கியம். மேலும் இது பல்வேறு கல்வி நிறுவனங்களில் சேர்க்கை மற்றும் பல்வேறு நிறுவனங்களில் முக்கிய வேலைக்கு ஆட்சேர்ப்பு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.
பொறியியல் பட்டதாரிகள் வெற்றிகரமான வாழ்க்கையை ஆராய GATE தேர்வை எடுக்க வேண்டும். கேட் (GATE) தேர்வுக்கு ஒரு பிரத்யேக ஆய்வுத் திட்டம் மற்றும் தேர்வில் அதிக மதிப்பெண்ணுடன் வெற்றிபெற சரியான அணுகுமுறை தேவை என்பது முக்கியமாகும்.
கேட் தேர்வுற்கு சிறப்பாக தயாராக சில ஆலோசனைகளை இங்கே நிபுணர்கள் தருகின்றனர்.
அந்த முக்கிய 10 அம்சங்கள் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.
1. கேட் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் கடந்த ஆண்டின் கேள்வித்தாள்களை பெற்று அதில் உள்ள பாடங்களை நன்றாகக் கூர்ந்து படிக்கவேண்டும்.
2. கேட் தேர்வுக்கான புத்தகங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அடிப்படை பாடங்களை முக்கியமாகக் கொண்ட புத்தகங்கள், கருத்துருக்களை அடிப்படையாக்கக்கொண்ட புத்தகங்கள் என அவை 2 வகைப்படும். கேட் தேர்வுகளுக்கென வெளிவரும் சிறந்த புத்தகங்களை வாங்கி தேர்வுக்கு நல்ல முறையில் தயாராகாலாம்.
3. ஒரே புத்தகத்தை வாங்கி தயாராவதை விட ஒரே பாடத்தை மையமாகக் கொன்டுள்ள வேறு வேறு புத்தகங்களை வாங்கி படிக்கும்பொழுது கூடுதலான தகவல்கள் கிடைக்கும். தேர்வையும் நாம் எளிதில் அணுக முடியும்.
4. கேட் தேர்வுக்காக ஒரே தலைப்பின் (டாப்பிக்) கீழ் அதிகமான கேள்விகளுக்கு, உங்களை தயார்படுத்திக் கொள்ளவேண்டும். இதன் மூலம் உங்கள் மனம் உறுதிப்படும். தேர்வும் எளிதாகும்.
5. எந்த பாடப் பகுதிகளில் எல்லாம் நீங்கள் சிறப்பாக தயாராகவில்லையோ அந்த பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படியுங்கள். முக்கியமான "ஃபார்முலா"க்களை நினைவில் நிலை நிறுத்துவதற்கான எளிய வழிமுறைகளை கண்டுகொள்ளுங்கள். அந்த பார்முலாக்களை மனப்பாடம் செய்து கொள்வது சிறந்தது.
6. கேட் பாடத்திட்டத்தில் இல்லாத பாடங்களை படித்து நேரத்தை வீணாக்க வேண்டாம். அவை நமக்குத் தேவையும் இல்லை. தேர்வுக்கும் உதவாது.
7. தேர்வுக்கு 20 நாட்களுக்கு முன்னதாக படிப்பதை நிறுத்திவிட்டு தொடர்ந்து மாதிரி வினா-விடைக் கேள்விகளுக்கு விடையளித்து உங்களை சோதித்து பார்க்கவேண்டும்.
8. உங்களால் தனியாக தேர்வுக்கு தயாராக முடியாது என நினைத்தீர்கள் என்றால், கேட் தேர்விற்கான பயிற்சி மையத்தை அணுகுவது புத்திசாலித்தனமான முயற்சியாக இருக்கும் அல்லது கேட் தேர்விற்கு தயாராகும் மற்ற நண்பர்களோடு குழுவாக இணைந்து தயாராவதும் பயனளிக்கும்.
9. கேட் தேர்வுக்காக பல பயிற்சி மையங்களை நாடெங்கும் அமைந்துள்ளன. அவற்றில் இணைந்து தினந்தோறும் பயிற்சி பெறுவது சாலச்சிறந்தது. பயிற்சி மையங்களில் ஆசிரியர் வழிகாட்டுதலுடன் படிக்கும்போது தேர்வில் வெற்றி பெறுவது நமக்கு எளிதாகும்.
10. ரிவைஸ் எனப்படும் மீண்டும் மீண்டும் படித்தல் என்பது மாணவர்களுக்கு ஓர் அருமையான வழிமுறையாகும். ரிவைஸ் செய்து பார்ப்பது தேர்வுகளில் மாணவர்கள் சிறப்புகளை அடைய வழிவகுக்கும் என்று கல்வியாளர்களும்,நிபுணர்களும் தெரிவிக்கின்றனர்.
இந்த 10 முக்கிய அம்சங்களையும் மாணவ, மாணவிகள் பின்பற்றி நடக்கும்போது கேட் தேர்வில் வெற்றி பெறுவதற்கு வழிவகை ஏற்படும்.
கேட் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மாணவச் செல்வங்களே...!!


Click it and Unblock the Notifications












