இங்கே ஒவ்வொருவருக்குமான பணிகள் பல ஆயிரம் காணப்பட்டாலும் ஆசிரியர் தொழில் என்பது அனைத்தையும் கடந்து மேலாண்மைப் பெற்றது. சொல்லப்போனால், இதனை தொழில் எனச்சுகூறுவதை விட ஆசிரியர் சேவை என்றே கூற வேண்டும். இதற்கு இணையான பணி வேறேதுமில்லை.
மக்களின் அறியாமையை நீக்குவதால்தான் ஆசிரியப் பணியே அறப்பணி, அதற்கே தன்னை அர்ப்பணி என அறிஞர்களால் சிறப்பிக்கப்படுகிறது. ஆனால், இன்றைய கல்விச் சூழ்நிலையும், ஆசிரியர் - மாணவர் இடைய நிலவும் உறவு முறையும் எந்த நிலையில் உள்ளது ? தற்போது ஆசிரியர்களின் நிலைமை என்ன?
அன்றைய காலத்தில் ஆசிரியர் நிலை
ஒரு காலகட்டத்தில் ஆசிரியர்களைக் கண்டாலே மாணவர்கள் பயம் கலந்த மரியாதையைப் பொழிந்துவிடுவர். தனது பெற்றோருக்கு அடுத்த நிலையில் இருக்கும் ஆசிரியரை தெய்வத்திற்கும் இணையாக வணங்கி அவர்களது அறிவுரைகளை பின்பற்றினர். தனக்காக வாழாமல் மாணவர்களுக்காக வாழும் தன்னலமற்ற ஆசிரியர்களின் பணி மகத்தானது.
அழியாமல் நிற்கும் ஆசிரியர்
ஆசிரியர்கள் தவறுகளை சுட்டிக்காட்டினால் தலைநிமிர்ந்து பார்க்க முடியாமல் நிற்கும் மாணவர்களைக் கண்டு மனம் நெகிழ்ந்து அவர்களை வெற்றிப் பாதையில் செலுத்தும் சிறந்த வழிகாட்டிகளாக ஆசிரியர்கள் செயல்பட்டனர். இன்றளவும் மாணவர்கள் மனதில் அழியாமல் நிற்கும் சிகரங்கள் ஆசிரியர்களே. உண்மையிலேயே தாய்க்கும், பிள்ளைக்குமான உன்னதமான நிமைமை அக்காலத்தில் நிலவியது.
இன்றைய ஆசிரியர் மாணவர் உறவுநிலை
இன்றைய காலகட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களைக் கண்டால் ஆசிரியர்கள் பயப்படும் நிலையாகிவிட்டது. மரியாதை என்பதை மாணவர்களிடம் இருந்து கேட்டு வாங்கும் நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். 100 பேர் கொண்ட வகுப்பறையில் ஓரிரு மாணவர்களிடையே ஒழுக்க நிலையை காண்பது அரிதாகியுள்ளது.
அடி, உதை
இன்றைய சூழ்நிலையில் மாணவன் தவறு செய்யும் போது, அதைச் செய்யாதே என்று ஆசிரியர் கூறினாலோ அல்லது கன்டித்தாலோ, அதை அவன் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை. அவனுக்காக ஆசிரியர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய சூழலே நிலவுகிறது. அவர்களின் தவறுகளைக் கண்டித்தால் மாணவர்களால் வெறுக்கும் நிலைக்கு ஆசிரியர்களின் பரிதாப நிலை அமைந்துள்ளது.
மாணவர்களின் வெறுப்பு
மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணாதிசயங்களைக் கொண்டவர்கள். கல்வியே அழியாச் செல்வம் என்பதை உணர்ந்த ஆசிரியர்கள் மாணவர்களிடம் கல்வியைக் கற்பது அவசியம் என்று கூறினால் ஆசிரியர்களை மாணவர்கள் வெறுக்கின்றனர். ஆசிரியர்களிடம், பாடப் பகுதியைப் பற்றி விரிவாகப் பேசுவதைவிட, மற்ற பொழுதுபோக்கு விசயங்களைப் பேசவே நினைக்கின்றனர். அமைதியாக இருக்கும் ஆசிரியர்களையே கொலை புரியும் மாணவர்கள் இருக்கும் நிலையில் மாணவர்களிடம் எங்கே கண்டிப்புடன் செயல்வடுவது.
பெற்றோர் உறவு நிலை
மாணவர்களின் இந்த மணநிலைக்கு பெற்றோர்களின் பங்கும் உள்ளது. ஒரு வீட்டில் குடும்பத் தலைவன், தலைவி என இருவரும் வேலைக்குச் சென்றால்தான் குடும்பத்தை நடத்த முடியும், பிள்ளைகளைப் படிக்க வைக்க, அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்ற கட்டாயத்தில் இன்று நாம் வாழ்ந்து வருகிறோம். அவற்றைச் சம்பாதிப்பற்கு முயற்சி செய்வது தவறு இல்லை, ஆனால், அதே நேரத்தில் தங்களின் பிள்ளைகளிடம் நேரத்தை செலவிடாமல் தவிர்ப்பது தவறு.
என்று தான் மாறுமோ !
அலுவலகத்தில் அடுத்தவரின் வாழ்க்கை உயர்வுக்குப் பாடுபடும் பெற்றோர்கள், தங்களின் குடும்பத்தை காக்கவிருக்கும் பிள்ளைகளைப் பற்றி ஏன் அக்கறை கொள்வதில்லை. தொலைக்காட்சியில் நாடகங்களைப் பார்க்க நேரத்தை செலவிடும் அவர்கள் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்ற துளி அக்கறையும் இன்றி தானே உள்ளார்கள். கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை பிள்ளைகள் மீது இஷ்டம் இல்லாத காரணத்தால் டியூஷன் என்ற பெயரில் நடத்தப்படும் வகுப்புகளுக்கு செலவிட நினைக்கின்றனர். பின் எங்கிருந்து தங்களது குழந்தைகளின் மனநிலையை பெற்றோர் அறிய முடியும்.
மாணவர்களின் மனக்குமுறல்களில் ஆசிரியர் பங்கு
மாணவர்களைப் போலவே கல்வி முறையிலும், அதைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களிடமும், சில குறைகள் உண்டு. ஆசிரியர்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்ற பெயரில் மாணவர்களை எந்நேரமும் படிக்கும்படி கட்டாயப்படுத்துகின்றனர். அதுவும் தவறுதான். மாணவர்கள் வாழ்க்கைக்கு கல்வி எவ்வளவு அவசியம் என்பதை அவர்களே உணரும்படியான சூழலை அவர்களுக்கு முதலில் உருவாக்கித் தர வேண்டும். அவர்களும் மனிதர்களே என்பதை உணர வேண்டும்.
விளையாட்டுக்குத் தடை
பள்ளி நிர்வாகமும், நிர்வாகத்திற்கு இணங்கி நடக்கும் ஆசிரியர்களும் பிள்ளைகளை விளையாட அனுமதிப்பது இல்லை. இன்றைய சூழலில் பள்ளியில் விளையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. காரணம் படிப்பு, தேர்வு, மதிப்பெண் என பல காரணங்கள். குறிப்பாக அரசுப் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் நிலை இன்னும் பரிதாபதிற்கு உரியது.
அதைவிடக் கொடுமையானது அடுத்த வருடம் பொதுத் தேர்வு எழுதுவதற்கு இந்த வருடமே முன்னதாக பாடங்களை எடுப்பது, மாணவர்களை மிகுந்த மனக்குழப்ப நிலைக்கு தள்ளுகிறது. மாணவர்களுக்கு படிப்பின் மீது சலிப்பு ஏற்படுகிறது. அந்தப் பாடங்களையும் அவர்களால் சரியாகப் படிக்க முடிவதில்லை.
மாணவர்களுக்கு ஆசிரியர்களே எதிரி!
ஒரு வகுப்பறையில் கடைசி இருக்கையில் அமர்ந்திருக்கும் மாணவர்களிடம் கேட்டால் தெரியும் ஆசிரியர் மீதான வெறுப்பும், ஆசிரியர் காட்டும் பாரபட்டமும். பள்ளிகளில் ஆசிரியர்கள் சிலர், மாணவர்களிடம் பாரபட்சம் காட்டுவது வழக்கம். இதுவும் மாணவன் சீரழிவுக்கு முக்கிய காரணம். அதிக மதிப்பெண்கள் எடுத்துத் தேர்ச்சி அடையாத மாணவன், திருந்திப் படித்து தேர்ச்சி அடைவதற்கு முயன்றால் அதை சில ஆசிரியர்கள் ஏற்க மறுக்கின்றனர்.
ஒருமுறை மாணவன் செய்யும் தவற்றை மனத்தில் கொண்டு அவன் கடைசிவரை இப்படித்தான் என்ற முடிவுக்கு வருகின்றனர். அந்த குறிப்பிட்ட மாணவன் பின்னாளில் தவறே செய்யாவிட்டாலும் கூட இந்த ஆசிரியர், அம்மாணவனை ஒதுக்கும் சூழல் உருவாகி வருகிறது. மாணவன், தன்னிடம் ஆசிரியர் கண்ட குறைகளைத் திருத்திக் கொண்டாலும் காரணமே இல்லாமல் அவனை வார்த்தைகளால் திட்டித் தீர்த்துவரும் நிலையிலே சில ஆசிரியர்கள் உள்ளனர்.
வாய்ப்பளியுங்கள்
ஆசிரியர்கள் சிலர் மாணவர்களைச் சபிப்பது சக மாணவர்களாக இருந்த உங்களுக்குத் தெரியும். தங்களின் பிள்ளைகளைப் போல நினைக்க வேண்டிய மாணவர்களை வாழ்த்தவில்லை என்றாலும் சபித்துக் கொட்டுவதை நிறுத்திவிடுங்கள். ஏனென்றால் நாம் சபித்த மாணவன் நாளை உயர் பதவி வகிக்கும் சூழலில் இவ்வாசிரியர் அம்மாணவனை நேரில் சந்திக்கும் சூழலில் கோபத்தால் திட்டிய நம்நிலை என்ன? என்பதனை ஆசிரியர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மாணவர்கள் தங்களது தவறை திருத்திக் கொள்ள வாய்ப்பினை அளிக்க வேண்டும்.
அடிக்காம விடமாட்டேன்...
அந்த கணக்கு வாத்தியார் மட்டும் கையில கிடைச்சாரு... விடவே மாட்டேன்... இந்த வார்த்தைய உங்கள வாழ்க்கையில ஒரு முறையாச்சும் நினைச்சு பார்திருப்பீங்க. இப்படித்தான் இன்றைய ஆசிரியர்கள், மாணவர்களால் அதிகமாக வெறுக்கக் கூடிய நிலைக்கும், கேலிப் பேச்சுக்கும் ஆளாகின்றனர். அந்த ஆசிரியர்கள் மாணவர்களிடம் மன அழுத்தத்தை ஏற்படுத்தி அவர்களின் எதிரிகளாகவே மாறுகின்றனர். அதனால் ஏற்படுவதுதான் ஆசிரியர் கொலை, வெற்றிப்பாதைக்கு அனுப்பவில்லை என்றாலும் பரவாயில்லை மாணவர்களைப் பாதாளத்தில் தள்ள வேண்டாம்.
மாணவர்களின் சீரழிவுக்கு பெற்றோரின் பங்கு
இன்றைய பெற்றோர் தன் பிள்ளைகள் சந்தோசமாகவும் கௌரவமாகவும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாணவர்களுக்கு குடும்பச் சிரமங்கள் தெரியாமல்
வளர்க்கின்றனர். அவர்கள் கேட்கும் போதெல்லாம் பணத்தைக் கொடுத்துக் கெடுக்கின்றனர். தங்களின் பிள்ளைகள் சமுதாயத்தின் முன்பாக அனைத்தும் தெரிந்தவனாக விளங்கவேண்டும் என்பதற்காக கணிப்பொறி, கைப்பேசி, போன்றவற்றை இயக்க கற்றுக் கொடுப்பதொடு, அதிக விலைக்கு வாங்கியும் தருகின்றனர். இந்நிலையானது மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறது.
கைப்பேசி இல்லாத மாணவர்கள் உண்டோ ?
இன்று கைப்பேசி இல்லாத மாணவர்களே இல்லை. தவறான பாதையில் பிள்ளைகளை அழைத்துச் சென்றுவிட்டு பின் வருந்தும் பெற்றோர்களே இங்கு அதிகம். மாணவன் எங்கு செல்கிறான், யாருடன் பழகுகிறான் என்பதை கவனிக்க மறக்கின்றனர். பிறகு மதிப்பெண் குறைந்தால் ஆசிரியர்களிடம் வந்து புலம்பித் தவிக்கின்றனர். என் பிள்ளை சொன்ன பேச்சை கேட்க மறுக்கிறான் நீங்களாவது அவனைத் திருத்துங்கள் என்றுகூறி தங்களது பொறுப்பை தட்டிக்கழிக்கின்றனர்.
ஆசிரியர்கள் சில வேளைகளில் கண்டித்தால் அதே பெற்றோர் ஆசிரியர்கள் மீதே குற்றம் சுமத்துகின்றனர். இதனால் ஆசிரியர்களும் மனஉளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது. சில பெற்றோர் மாணவர்களின் முன்பாகவே ஆசிரியர்களை திட்டும் அவல அடையும் நிலையும் காணப்படுகிறது. இக்காரணத்தால் மாணவன் ஆசிரியரை ஏளனமாக பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறான். ஆசிரியர்களுக்கு அவமானமே மிஞ்சுகிறது.
என்னதான் தீர்வு ?
மாணவர்கள், ஆசிரியர்களிடையே மரியாதையோடு கலந்த அன்புறவு நிலவ வேண்டும். வெறும் வார்த்தையாக மட்டும் இல்லாமல் மாணவர்களை தன் பிள்ளைபோல ஆசிரியரும், மாணவர்கள் ஆசிரியர்களை தன் தாயைப் போலவும் கருதுதல் வேண்டும். தன் பிள்ளைக்கு ஒரு அவமானம் என்றால் துடிக்கும் பெற்றோரைப் போல ஆசிரியர்கள் மாற வேண்டும்.
மாணவர்களும், நம்முடைய வளர்ச்சிக்குதான் ஆசிரியர்கள் பாடுபடுகின்றனர் என்பதை மனதளவில் உணர வேண்டும். மாணவர்களின் தேவைகள் இன்னது என்பதை அறிந்து ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.