ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த இந்திய மக்களுக்கு சுதந்திர உணர்வை ஊட்டி, விடுதலை பெற்றுத் தந்தவர் மகாத்மா காந்தியடிகள். அஹிம்சை என்னும் அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்து ஏராளமான இந்திய மக்களை ஒன்றுதிரட்டினார். தமதுது அமைதி வழிப் போராட்டத்தாலேயே சுதந்திரத்தைப் பெற்றுத் தந்து ஆங்கிலேயர்களுக்கே பாடம் நடத்தியவர் மகாத்மா காந்தியடிகள்.
அஹிம்சைக்கும், பொறுமைக்கும், அறவழிப் போராட்டத்துக்கும் இலக்கணமாகத் திகழ்ந்தவர் அண்ணல் காந்தியடிகள். வாய்மை, தூய்மை, நேர்மை, எளிமை, மடியின்மை அன்புடைமை, அருளுடைமை ஆகிய அனைத்து நற்பண்புகளின் உறைவிடமாக விளங்கினார். அதனால்தான் வங்கத்துக்கு கவியரசர் ரவீந்திரநாத் தாகூர் மகாத்மா என்ற பட்டத்தை சூட்டி மகிழ்ந்தார்.
அண்ணல் காந்தியடிகள் குஜராத் மாநிலம் போர்பந்தரில் 1869-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ஆம் நாள் காபாகாந்திக்கும் புத்திலிபாய்க்கும் மகனாய்ப் பிறந்தார்.

காந்தி பள்ளியில் படிக்கும்போது என்ன நடந்தது தெரியுமா...
குஜராத் மாநிலம் ராஜ்காட்டில் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி எனப்படும் காந்தியடிகள் தனது பள்ளிப் படிப்பை படித்தார்.. படிப்பில் அவர் சுமாரானர மாணாக்கனாகவே அவர் விளங்கினார். அதிக கூச்ச சுபாவம் நிறைந்த மாணவனாக, யாருடனும் அதிகம் பேசாமல் இருப்பார். ஒருமுறை அவர் படித்த பள்ளிக்கு மிஸ்டர் கைல்ஸ் என்பவர், பள்ளிக்கூடத்தின் பணிகளை ஆய்வு செய்யும் இன்ஸ்பெக்டராக வந்தார்.
மோகன்தாஸ் படிக்கும் வகுப்புக்கு இன்ஸ்பெக்டர் வந்து, ஜந்து வார்த்தைகளைச் சொல்லி மாணாக்கர்களை எழுதுமாறு கூறினார். அந்த வார்த்தைகளில் ஒன்று 'கெட்டில்' என்பதாகும். அதனை மோகன்தாஸ் காந்தி, தவறாக எழுதினார். அப்போது, அங்கே வந்த வகுப்பு ஆசிரியர், காந்தி தவறாக எழுதியிருப்பதைச் சுட்டிக்காட்டி, அவரது கால்களை அழுத்தினார்.
அருகில் இருக்கும் மாணவனைப் பார்த்து, சரியாக எழுதச் சொல்லுமாறு காந்தியின் கால்களைஅவர் அழுத்தினார். ஆனால் அந்த விஷயம் காந்திக்குப் புரியவில்லை.
'காபி' அடித்து எழுதுவது தவறு என்று காந்தி எண்ணினார். 'கெட்டில்' என்ற வார்த்தையை மோகன்தாஸைத் தவிர மற்ற அனைத்து மாணவர்களும் சரியாக எழுதியிருந்தார்கள். காந்தி, தமது ஆசிரியர்களிடம் பெருமதிப்பு வைத்திருந்தார். பள்ளியில் நடந்த இந்த நிகழ்ச்சியை வாழ்நாள் முழுவதும் அவர் நினைவில் வைத்திருந்தார். ஒருநாளும் காப்பி அடித்து எழுதுதல், பொய் கூறுதல் போன்றவற்றை அவர் செய்ததே இல்லை.
பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்ற காந்தியடிகள் இங்கிலாந்து சென்று சட்டக் கல்வி பயின்றார்.பின்னர், தென்னாப்பிரிக்கா சென்றார்.அங்கு இனவெறியையும். நிறவெறியையும் எதிர்த்து, கறுப்பர் இன மக்களுக்கு உரிமைகள் பெற்றுத் தந்தார். 1915-ல் இந்தியா திரும்பினார்.
அப்போது முதல் சுதந்திர போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தென்னாப்பிரிக்காவில் காந்தி தலைமையேற்று நடத்திய போராட்டங்களைப் பற்றி இந்திய நாட்டு மக்கள் அறிந்திருந்தனர். காந்திக்கு, கோபால கிருஷ்ண கோகலே, ரவீந்திரநாத் தாகூர் போன்ற தலைவர்களுடன் நட்பு ஏற்பட்டது. இதையடுத்து காந்தி இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் முழு வீச்சில் ஈடுபட்டார்.

1924ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக மகாத்மா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் இயக்கத் தலைமையேற்றவுடன் காங்கிரஸில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தி இயக்கத்திற்கு புத்துயிர் ஊட்டினார். அறப்போராட்ட வழிமுறைகளையும் சுதேசி போன்ற கொள்கைகளையும் வலியுறுத்தி காங்கிரஸ் இயக்கத்தை இந்தியாவின் மாபெரும் விடுதலை இயக்கமாக்கினார். மக்களின் சுதந்திரமே பெரிது என்று எண்ணினார்.
இதனால்தான் மக்கள் மனதில் மாபெரும் புரட்சியையும், மாற்றத்தையும் உண்டுபண்ணினார். 1920-ல் ஒத்துழையாமை இயக்கம், 1930-ல் உப்பு சத்தியாகிரகம், 1942-ல் வெள்ளையனே வெளியேறு போன்ற 3 பெரிய அளவிலான போராட்டங்களை அவர் முன்னெடுத்தார்.
பிப்ரவரி 1930-ல் ஆங்கிலேய அரசு, இந்தியாவில் இந்தியர்களால் தயாரிக்கப்படும் உப்புக்கு வரி விதித்து கொடுமை செய்தது. இந்தியாவில் இந்தியரால் தயாரிக்கப்படும் உப்பை பிரிட்டிஷ் அரசாங்கத்தை தவிர வேறு யாரும் விற்கக் கூடாது என்ற சட்டத்தையும் ஆங்கிலேயர்கள் இயற்றி இந்திய மக்களை வதைத்தனர். இதை விலக்கிக் கொள்ளுமாறு காந்தியடிகள், பிரிட்டிஷாருக்கு கோரிக்கை விடுத்தார். ஆனால் அதை ஆங்கிலேயர்கள் ஏற்கவில்லை.
சத்தியாகிரக முறையில் இதை எதிர்த்த காந்தி மார்ச் 2, 1930-ல் 78 சத்தியாகிரகிகளுடன் அகமதாபாத்திலிருந்து குஜராத் கடலோரத்தில் இருந்த தண்டி நகரை நோக்கி 240 மைல் நடைப் பயணத்தை தொடங்கினார். 23 நாட்கள் நடைப் பயணத்துக்குப் பிறகு, தனது தோழர்களுடன் தண்டி கடற்கரை வந்து சேர்ந்த காந்தி, அங்கிருந்த கடல் நீரை காய்ச்சி உப்பு தயாரித்தார். மேலும், அதை பிரிட்டிஷ் சட்டத்திற்கு எதிராக பகிரங்கமாக பொதுமக்களுக்கு விநியோகிக்கவும் செய்தார்.
இந்தியாவில் கடலோரத்தில் இருந்த அனைத்து இந்தியர்களையும் இது போல் உப்பு தயாரித்து பயன்படுத்துமாறு காந்தியடிகள் அறைகூவல் விடுத்தார். காந்தியடிகளின் கோரிக்கையை ஏற்ற மக்கள் நாட்டின் பல இடங்களில் இது போல் உப்பு காய்ச்சி விநியோகம் செய்தனர்.
இந்த விவகாரத்தால் கோபமடைந்த ஆங்கிலேய அதிகாரிகள், மகாத்மா காந்தி உட்பட பல்லாயிரக் கணக்கான இந்தியர்களை சிறையில் அடைத்தனர். இந்தப் போராட்டம் பெரிய அளவில் முன்னெடுத்ததைக் கண்ட அதிகாரிகள், காந்தியுடன் பேச்சு வார்த்தை நடத்தி இறுதியில் வரியை நீக்கிக் கொண்டனர்.
காந்தியடிகளின் அஹிம்சை வழிப் போராட்டத்தாலும், அறவழிப் போராட்டத்தாலும் 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது.
இந்திய விடுதலை கோரியும், சமூக நீதியை வலியுறுத்தியும், சமய நல்லிணக்கத்துக்கும், தீண்டாமைக்கு எதிராகவும், முழு மதுவிலக்கு கோரியும் 17 முறை, 139 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டங்களை மேற்கொண்டவர் மகாத்மா காந்தியடிகள்.
வாழ்நாளில் தான் எதிர்கொண்ட பிரச்சினைகள், போராட்டங்கள் குறித்து சத்தியசோதனை என்ற சுயசரிதையை எழுதினார். அவரது புத்தகம் ஆங்கிலம் உள்பட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
காந்தி 1948 ஆம் ஆண்டு, ஜனவரி 30-ஆம் தேதி, டெல்லி பிர்லா மாளிகை தோட்டத்தில், நாதுராம் கோட்ஸேவால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். காந்தி மறைந்த நாளான ஜனவரி 30 அன்று, இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களின் நினைவாக, தியாகிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.இன்றைய தலைமுறை மாணவர்கள் காந்தியடிகளின் கொள்கைகளைக் கடைப்பிடித்து நடந்தோம் என்றால் வாழ்வில் நிச்சயம் உயர முடியும், அஹிம்சை, தீண்டாமை, உண்மையைப் பேசுதல், நேர்மையுடன் நடத்தல் போன்றவை அவர் போதித்த கொள்கைகள். அதை பின்பற்றுவோருக்கு வாழ்வில் உயர்வு நிச்சயம் என்பது நிதர்சனம். அவரது போதனைகள் இக்காலத்துக்கு மட்டுமல்லாமல் எக்காலத்துக்கும் பொருந்தக் கூடியது.


Click it and Unblock the Notifications












