நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தின் சார்பில் பல்வேறு நடிவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொழில் நிறுவனங்களும் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு வீட்டில் இருந்தபடியே வேலை செய்வதற்கான சலுகையை அறிவித்துள்ளது.

அவ்வாறு வீட்டிலிருந்தபடியே வேலை செய்பவர்கள் தங்களது வேலை நேரத்தினை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள சில குறிப்புகளைப் பின்பற்ற தவறிவிடுகின்றனர். அது என்ன, எப்படி செயல்படுத்த வேண்டும் என பார்க்கலாம் வாங்க.
உங்களுக்கான கட்டுப்பாடுகள்:
நீங்கள் வீட்டிலிருந்து அலுவலக வேலை செய்து கொண்டிருக்கும் போது, வேலை செய்யும் நேரங்களில் நீங்கள் அலுவலக பணியில் இருக்கிறீர்கள் என்றும் அதனால் தொந்தரவு எதுவும் செய்ய வேண்டாம் என்றும் உங்கள் பெற்றோர், தோழர்கள், மனைவி மற்றும் குழந்தைகளுக்குத் தெரியப்படுத்த வேண்டும். உங்களது பணி இடத்தை கவனிக்கா விட்டால், உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதில் நாட்டம் வந்து பணியிலிருந்து கவனம் சிதறி வேலை பாதிக்கும்.
பணிக்கான இடத்தை தேர்வு செய்யுங்கள்:
வீட்டிலிருந்து பணியாற்றும் போது நிரந்தரமான ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். அந்த இடமோ, அரையோ அங்கு சென்றவுடன் நீங்கள் பணிபுரிவதற்கு வந்துள்ளீர்கள் என்ற மனநிலையைப் பெறுவீர்கள். அதற்கு வீட்டிலேயே ஒரு அறை அல்லது மேசையை ஒதுக்குங்கள். அங்கு லேப்டாப் அல்லது கணினி அல்லது வேலை தொடர்பான பொருள்கள் மட்டுமே இருக்கும் வகையில் கவனித்துக் கொள்ளுங்கள்.
அலட்சியமான வேலைகள்
உங்களுக்கான வேலையை எப்போது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்று தள்ளிப் போடாதீர்கள். குறிப்பிட்ட நேரத்திற்குள் உங்கள் பணிகளை முடித்து விடவும். உங்களின் பணி நேரம் முடிந்ததும் பணிக்கான மனநிலையை அதோடு 'ஆஃப்' செய்துவிடுங்கள். இதனால் மன அழுத்தம் அல்லது பதட்டத்தை விட்டுவிட முடியும். இது அடுத்த நாளின் பணிகளுக்கு உறுதியான இடைவெளியைக் கொடுக்கும், மேலும் உங்களின் பணித்திறனையும் மேம்படுத்தும்.
வீட்டிலேயே அலுவலகம்
வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும் போது, தினமும் காலையில் நீங்கள் அலுவலகத்திற்குச் செல்வதாக நினைத்து உங்களுக்கான அறைக்குச் சென்றுப் பணிபுரிவதை வழக்கமாகப் பின்பற்றுங்கள். மேலும், வேலை செய்வதற்கான நேரத்தையும் முறையாகப் பின்பற்றுங்கள்.
தேவையற்ற இணையதளங்களை முடக்குங்கள்
லேப்டாப் அல்லது கணினியில் சமூக ஊடகம் அல்லது இணையதள வணிக தளங்களை முடக்கிவிடுங்கள். அவ்வாறான இணையதளங்களால் எளிதில் நீங்கள் திசைதிருப்பப்படுவீர்கள். இதுபோன்ற இணையதளத்தில் நீங்கள் சிக்கிக் கொண்டால் உங்களது வேலை நேரம் பயனற்றதாக்கி விடும். எனவே அவற்றை நீக்குவதன் மூலம் உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.
சக ஊழியர்களுடன் தொடர்பில் இருங்கள்!
வீட்டிலிருந்தபடியே அலுவலக பணியாற்றும் போது வாட்ஸ்அப், மெயில் உள்ளிட்ட சக பணியாளர்களின் குழுவுடன் தகவல்தொடர்புகளைத் திறந்து வைக்கவில்லை என்றால், நீங்கள் அதில் ஒரு பகுதியாக இல்லாதது போல் இருக்கும். எனவே தொடர்பிலேயே இருங்கள். அழைப்புகள், மெயில்கள், அலுவலகக் கூட்டங்கள் மற்றும் சமூகக் கூட்டங்களில் என அனைத்திலும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications












