சென்னை: பணி நீக்கம் செய்யப்பட்ட மேனிலைப் பள்ளி கணினி ஆசிரியர்கள் சென்னையில் இன்று உண்ணா விரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.
அரசு மேனிலைப் பள்ளிகளில் கடந்த 1999ம் ஆண்டு மாதம் ரூ.1500 தொகுப்பூதிய சம்பளத்தில் இளநிலை பட்டம் பெற்று கம்ப்யூட்டர் டிப்ளமோ அல்லது இளநிலை கம்ப்யூட்டர் அறிவியல் படித்த 1880 பேர் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு கடந்த 2008ம் ஆண்டும் சிறப்பு தேர்வுகள் நடத்திய அரசு 35 மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு பணி நியமனம் வழங்க அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து ஒரு பிரிவு கணினி ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் 50 சதவீதம் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மட்டுமே பணி நியமனம் வழங்க வேண்டும் என்று 2010ல் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் கணினி படித்த ஆசிரியர்கள் அத்துடன் பி.எட் படித்து முடித்தனர். அதன்பிறகு பி.எட் படித்த தகுதியையும் பரிசீலிக்க உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. ஆனால் புதியதாக பி.எட் படித்தவர்களை நியமிக்க அரசு முற்பட்டது. இதையடுத்து கணினி ஆசிரியர்கள் மதுரை உயர்நீதி மன்றம் கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
இதையடுத்து 4.4.2015ம் தேதி வரை மேற்கண்ட பணி நியமனத்துக்கு நீதி மன்றம் தடை உத்தரவு வழங்கியது. ஆனால் இன்று புதிதாக 652 கணினி ஆசிரியர்களை நியமிக்கப் போவதாக அரசு அறிவித்து இன்று கவுன்சலிங் நடக்க இருக்கிறது. இது நீதி மன்றத்தை அவமதிக்கும் செயல் என்று கூறி கணினி ஆசிரியர்கள் சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருக்கப் போவதா அறிவித்துள்ளனர்.