ஆட்டோமோட்டிவ் இன்ஜினியரிங் என்பது உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஒன்றாகும். ஆட்டோ, கனரக ஆட்டோ, சிறிய பேருந்துகள், பேருந்துகள், கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் முதல் மாபெரும் லாரிகள் வரை ஆட்டோமொபைல் துறைக்குள் அடங்குகின்றன. ஆட்டோமொபைல்கள் நவீன பொருளாதாரத்தின் இயக்கிகளாக அறியப்படுகின்றன.
நாள்தோறும் உலக நாடுகள் முழுவதும் ஆட்டோமொபைல் துறை அபரிமிதமான வளர்ச்சியை பெற்று வருகிறது. குறிப்பாக இந்திய ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சி மிகவும் அதிகமாக உள்ளது. அடுத்த ஆண்டில் இந்திய ஆட்டோமொபைல் துறை ஆரோக்கியமான வளர்ச்சி விகிதம் 4% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் மகாராஷ்டிரா, குஜராத், மேற்கு வங்கம், கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் ஆட்டோமொபைல் துறையில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. இந்திய உற்பத்தி துறையில் முக்கிய இடத்தை தக்க வைத்திருக்கும் தமிழ்நாடு ஆட்டோமொபைல் உற்பத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்து வேகமாக முன்னேறி வருகிறது.

மத்திய அரசின் சுயசார்பு 'இந்தியா' திட்டத்தின் கீழ், ரூ. 415 லட்சம் கோடியில் பொருளாதார நாடாக இந்தியாவை உருவாக்கும் அரசின் கனவுக்கு, இந்திய ஆட்டோமொபைல் துறை முதுகெலும்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, உலகளவில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து மூன்றாவது பெரிய கார் உற்பத்தியாளராக இந்தியா மாறியுள்ளது. எதிர்காலத்தில், இந்திய ஆட்டோமொபைல் துறை அமெரிக்கா, சீனாவை விட 15 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் துறையாக வளர்ச்சி அடையும் என்று ஆட்டோமொபைல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்..
உலகளவில் வாகன தொழில்துறையில் முன்னணி வகிக்கும் என்றும் விலை மற்றும் தரத்தின் அடிப்படையில் இந்திய தயாரிப்புகளை மக்கள் விரும்புவர் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்திய ஆட்டோமொபைல் துறை குறித்து மத்திய சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறும்போது, "இந்திய கார்களை உலக தரத்துடன், உயர் பாதுகாப்பு தரங்களுடன் உலக சந்தையில் போட்டியிட வைக்கவும், இந்தியாவில் உள்ள கார் உற்பத்தியாளர்களின் ஏற்றுமதித் திறனை அதிகரிக்கவும் பாரத் என்.சி.ஏ.பி., எனப்படும் புதிய கார் மதிப்பீடு திட்டத்தின் கீழ் விபத்து சோதனைத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், இந்தியாவில் பாதுகாப்பு - உணர்திறன் கொண்ட கார் சந்தையை உருவாக்கும் என நம்பப்படுகிறது" என்கிறார்.

ஆட்டோமொபல் எவ்வாறு வளர்ச்சி பெற்று வருகிறதோ அதைப் போலவே ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் தொழில் வாய்ப்புகளும் வேகமாக வளர்ச்சி பெற்று வருகின்றன.
சரியான திறன்கள் மற்றும் கல்வியுடன் கூடிய மாணவர்கள் விரைவில் ஆட்டோமொபைல் துறையில் சிறந்த மற்றும் நம்பிக்கைக்குரிய வாழ்க்கையை உருவாக்க முடியும். ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் படிப்புகள், டிப்ளமோ படிப்புகள் பயிலும் மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.
ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் எனப்படும் வாகனப் பொறியியல் என்பது இயந்திரப் பொறியியலின் துணைக் களமாக அமைந்துள்ளது. மோட்டார் சைக்கிள்கள், கார்கள், டிரக்குகள், பேருந்துகள், வாகன உதிரிபாகங்கள் போன்றவற்றின் வடிவமைப்பு, உற்பத்தி, பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுக்கான இயந்திரவியல், மின்சாரம், மென்பொருள், மின்னணு, பாதுகாப்பு மற்றும் பொருள் அறிவியல் பொறியியல் கூறுகளை ஆட்டோமொபைல் அல்லது வாகனப் பொறியியல் ஒருங்கிணைக்கிறது.
ஆட்டோமொபைல்கள் மற்றும் கார் பாகங்களை வடிவமைக்கவும், உருவாக்கவும், உற்பத்தி செய்யவும், சோதனை செய்யவும் மற்றும் கருத்துகளை முன்மாதிரிகளாகவும் இறுதி தயாரிப்புகளாகவும் மாற்றுவதற்கு மாணவர்களுக்கு பயிற்சி பெறும்போது அவர்களது எதிர்கால வேலைவாய்ப்பு இன்றே நம் கண்களில் தெரிகிறது.
நமது நாடு முழுவதும் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் ஏராளமாக உருவாகிவிட்டன. இதனால் அந்தத் தொழிற்சாலைகளில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு, டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கு வேலை அங்குக் கொட்டிக் கிடக்கிறது. அதைப் போலவே ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளில் சூப்பர்வைசர் வேலைகளும் அதிகமாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்தத் துறையில் சூப்பர்வைசர்களின் பணி முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளில் சூப்பர்வைசர் பணிக்காக பல்வேறு படிப்புகள் நாடு முழுவதும் உள்ள இன்ஸ்டிடியூட்டுகளால் அளிக்கப்படுகின்றன.
ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளில் சூப்பர்வைசராக பணிபுரிய 18 மாதங்கள் அடங்கிய படிப்பை பல்வேறு இன்ஸ்டிடியூட்டுகள் அளிக்கின்றன. இதில் 9 மாதம் வகுப்புகளும், 9 மாதம் தொழிற்சாலையில் பயிற்சியும் அளிக்கப்படும்.

பயிற்சியின் நோக்கம்
வாகனப் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்பார்வையிடும் திறன்களை வளர்த்து, வாகனத் துறையில் வாழ்நாள் முழுவதும் கற்கும் நபராக மாணவரை உருவாக்க ஆளுமைப் பண்புகளுடன் அவரை தயார் செய்தலே இந்த படிப்பின் நோக்கமாகும்.
இந்தப் படிப்பு பயிலும் மாணவர்கள் 75 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால் சிறப்பிடம் என்றும், 60 முதல் 74 சதவீதம் வரை எடுத்தால் முதல் வகுப்பு என்றும், 50 முதல் 59 சதவீதம் வரை மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி என்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
50 சதவீதத்துக்கும் குறைவாக மதிப்பெண் பெற்றால் அவர்கள் தேர்ச்சி பெறாதவர்கள் என்று அறிவிக்கப்படுவர்.
தேர்ச்சி பெறாதவர்கள் அடுத்து நடைபெறும் தேர்வில் எழுதலாம். படிப்பு தொடங்கிய 2 ஆண்டுகளுக்குள் தேர்ச்சி பெற வேண்டும். அப்படி தேர்ச்சி பெறாதவர்கள் பெயர் பதிவு பட்டியலில் இருந்து ரத்து செய்யப்படும். பின்னர் மீண்டும் புதிதாக சேர்க்கை பெற்று படிப்பை தொடங்க வேண்டும்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள ரஸ்தோம்ஜி அகாடமி ஃபார் குளோபல் கேரியர்ஸ் இந்த படிப்பை வழங்குகிறது. மேலும் விவரங்களுக்கு இந்த முகவரியை தொடர்பு கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












