12 ஆம் வகுப்பிற்கு பின் படிப்பதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. ஒவ்வெரு படிப்புக்கும் ஒவ்வெரு வகையான வாய்ப்புகள் உண்டு. ஆனால் சமூக மதிப்பு என்பது அவற்றில் சில படிப்புகளுக்கு மட்டுமே. அந்த வகையான படிப்புகளில் ஒன்றுதான் சட்டப்படிப்பு.
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததா இந்தப்படிப்பு என்றால் ஆம், மக்களாக இருந்தாலும் சரி மக்களாட்சியாக இருந்தாலும் சரி சிறப்பாக செயல்பட சட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். அப்படி வகுக்கப்பட்ட சட்டங்களே இன்று நீதியின் பிம்பமாக பிரதிபலிக்கின்றன.
உரிமை, கடமை ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது. இதில் ஒன்று பயனற்று போனால் செல்லாகாசாகிவிடும். சட்டப்படிப்பு என்பது தொழிற்கல்வி. சட்டத்தொழிலை அதற்கு தகுந்தாற்போல் பக்குவமாக செய்ய வேண்டும்.
சட்டப்படிப்பை பொருத்தமட்டில் டிகிரி, டிப்ளமோ, என்ற வகையில் படிக்கலாம். 12 முடித்தவுடன் பிஏ., எல்எல்பி.என்ற ஒருங்கிணைந்த 5 ஆண்டு படிப்பில் சேர்ந்து படிக்கலாம். டிகிரி முடித்தவர்கள் பிஎல் போன்ற இரண்டு ஆண்டு படிப்பில் சேர்ந்தும் சட்டம் படிக்கலாம்.
பிகாம்., எல்எல்பி, பிபிஏ., எல்எல்பி ஆகிய சட்டப்படிப்புகளும் உள்ளன.
இந்திய அளவில் 19 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள், மற்றும் தனியார் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட 10 இடங்களில் அரசு சட்டக்கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
இந்தவகையான படிப்புகளை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் சட்ட ஆலோசகர், நீதிபதி, வழக்கறிஞர், போன்ற பல்வேறு பணி வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
எங்கு படிக்கலாம்?
தமிழகத்தில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட 10 இடங்களில் அரசு சட்டக்கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு என பல்வேறு வகையான படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
இது தவிர சென்னை தரமணியில் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் ஸ்கூல் ஆப் எக்ஸலேன்ஸ் இன் லா என்ற கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு நான்கு விதமான 5 ஆண்டு ஹானர்ஸ்(LLB-Hons) படிப்புகள் வழங்கப்படுகிறது.
இந்த 5 ஆண்டு படிப்பில் சேர 12 ஆம் வகுப்பில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஒவ்வெரு துறையிலும் தலா 120-180 இடங்கள் வரை உள்ளன. விண்ணப்பதாரர்கள் 21 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இதே போல் மூன்றாண்டு (LLB-Hons) படிப்பும் வழங்கப்படுகிறது. இதில் சேர ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்தப்படிப்பிற்கான அதிகபட்ச வயதுவரம்பு என்று எதுவும் இல்லை. 3 ஆண்டு படிப்பிற்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கை 120. இதற்கு நுழைவுத்தேர்வு ஏதும் கிடையாது.
அரசுச் சட்டக் கல்லூரிகள்:
தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலூர் ஆகிய இடங்களில் அரசுச் சட்டக்கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. 2017-2018 ஆம் கல்வியாண்டிலிருந்து விழுப்புரம், தருமபுரி, இராமநாதபுரம் ஆகிய இடங்களிலும் புதிதாகச் சட்டக்கல்லூரிகள் செயல்பட தொடங்கியுள்ளன.
இளநிலைச் சட்டப்படிப்புகள்:
சட்டக் கல்லூரிகளில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்புடன் கூடிய இளநிலைச் சட்டப்படிப்பு (B.A.,L.L.B) மற்றும் மூன்று ஆண்டு இளநிலைச் சட்டப்படிப்பு (L.L.B) எனும் இரண்டு வகையான இளநிலைச் சட்டப்படிப்புகள் இடம் பெற்றுள்ளன.
கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு:
ஐந்தாண்டு இளநிலைச் சட்டப்படிப்புக்கு பிளஸ் டூ எஸ்சி, எஸ்டி பிரிவினர் 40% பிற பிரிவினர் 45% மதிப்பெண்களுடனும் தேர்ச்சி அவசியம்.
மூன்றாண்டு சட்டப்படிப்பிற்கு ஏதாவதொரு பட்டப்படிப்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர் 40% மதிப்பெண்களுடன் பிற பிரிவினர் 45% மதிப்பெண்களுடனும் தேர்ச்சி தேவை.
இரண்டு சட்டப்படிப்புகளுக்கும் விண்ணப்பிக்க வயது வரம்பு ஏதுமில்லை.
முதுநிலைப்படிப்புகள்:
டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் 9 விதமான முதுநிலை படிப்புகளை வழங்குகிறது. அனைத்து முதுநிலைப்படிப்புகளும் 2 ஆண்டு கால படிப்புகள். இதில் சேர 3 அல்லது 5 ஆண்டு சட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வரி, வணிகம், அறிவுசார் சொத்துரிமை, தொழிலாளர் நலன், அரசியல் அமைப்புச் சட்டம் உள்ளிட்ட 9 பாடப்பிரிவுகள் உள்ளன. ஒவ்வெரு துறைக்கும் தலா 20 இடங்கள் என மொத்தம் 180 இடங்கள் உள்ளன.
முதுகலை மாணர்களுக்கான சேர்க்கை ஆகஸ்டு மாதம் நடைபெறும். அனைத்து படிப்புகளுக்கும் ஒற்றைச்சாளர கலந்தாய்வு நடைபெறும்.
சட்டப்படிப்பு குறித்த மேலும் தகவலுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.
மாணவர் சேர்க்கை:
ஐந்தாண்டு சட்டப்படிப்பிற்கு பிளஸ் டூ தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், மூன்றாண்டு சட்டப்படிப்புக்கு இளநிலைப் பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு விதிப்படி மாணவர் சேர்க்கை நடைபெறும்.
கூடுதல் தகவல்களுக்கு, மேற்காணும் பல்கலைக்கழக இணையதளத்தைப் பார்க்கலாம் அல்லது அருகிலுள்ள சட்டக்கல்லூரி அலுவலகங்களுக்கு நேரடியாகச் சென்று தகவல்களைப் பெறலாம்.
சட்டக்கல்லூரி தொடர்பு எண்கள்:
சென்னை 044 - 25340907, மதுரை 0452 - 2533996, திருச்சி 0431 - 2420324, கோயம்புத்தூர் 0422 - 2422454, திருநெல்வேலி 0462 - 2578382, செங்கல்பட்டு 044 - 27429798, வேலூர் 0416 - 2241744 எனும் அரசு சட்டக் கல்லூரிகளின் தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.