நம்மில் பலரும் நாம் நாமாக இருக்க வேண்டும், யாருக்காகவும் நம் செயல்பாடுகளை, நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளக் கூடாது என ஒரு கொள்கையைக் கொண்டிருப்போம். இதத்தான் நம்ம சிறுவயதில் இருந்தே எல்லாரும் சொல்லிக் கொடுத்து வளர்த்திருப்பாங்க. ஆனா, இந்த விசயமெல்லாம் உங்க வீட்டிலயும், நண்பர்களோடும் இருக்கும் போது மட்டும் தான். இதயே வேலைக்கு போற இடத்திலையும் கடைபிடிக்கணும்னு நினைச்சா அவ்வளவுதான்.
இப்படி, எந்த மாதிரியான விசயங்களை பணியிடத்தில் செய்யணும், செய்யக்கூடாதுன்னு ஒரு சில ஐடியாக்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விசயங்களைக் கொஞ்சம் பார்த்து நீங்களும் தெரிஞ்சு நடந்துக்கோங்க. இல்லாட்டி உங்க வேலைக்கு நீங்களே ஆப்பு வச்சுக்குவீங்க.
சொடக்கு மேல சொடக்கு போடுது...!
இத பெரும்பாலும் நாம் செய்வதுதான். அருகில் அல்லது சற்று தொலைவில் இருக்கும் சக பணியாளரை அழைக்க விரலில் சொடக்கு போடுவது. அது அவருக்கு மட்டும் கேட்டாலும் கூட சில சமயங்களில் நீங்கள் அவர் மீது ஓர் ஆளுமையை வெளிப்படுத்துவதாகவே அமையும். இதில், சக பணியாளர்கள் மத்தியில் நீங்கள் செய்யும் போது உங்க மீதான மதிப்பையே இது குறைத்துவிடும்.
அழகு ராஜா..!
அலுவலக இருக்கையில் அமர்ந்த படியே என்னமோ கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்க போற மாதிரி தலை முடியை ஒதுக்கிக் கொள்வது, சோம்பல் முறிப்பது, அங்க அங்க சொறிவது, உதட்டைக் கடிப்பது, அலுவலக சோபாவில் பொத்தென்று விழுவது, சுவற்றில் கிறுக்குவது, தேவையில்லாத கருத்துக்களை கூறுவது, கெட்ட வார்த்தை பேசுவது, சத்தமாக சிரிப்பது போன்றவற்றை அலுவலகத்தில் செய்யாதீர்கள். இது அனைவரது மத்தியிலும் உங்களின் மீது எரிச்சலை நிச்சயம் உண்டாக்கிவிடும்.
கால் மேல் கால் போட்டு..!
உங்களுக்கு என ஒதுக்கப்பட்ட பணியிடத்தில் கால் மேல் கால் போட்டால் ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனா, அதுவே மீட்டிங்ல இருக்கும் போது கால் மேல கோல போடுறது, உங்களுக்கு எதிரே இருப்பவரின் மீது கால் படும் அளவிற்கு நீட்டிட்டு உட்காருவது மோசமான ஒன்றாகும். இதிலும், சிலர் கைகளை கட்டி அமர்வதை மரியாதை என நினைப்பர். ஆனால், இடம் பொருள் ஏவல் பார்த்து உங்கள் நடவடிக்கை இருப்பது அவசியம்.
கை வச்சுட்டு கம்முணு இருங்க..!
அலுவலக மீட்டிங்ல நீங்க கையை குறுக்காக கட்டியிருக்கும் அதே சமயம் கால் மேல் கால் போட்டும் அமர்வது முரண்பாடுகளை கொண்ட ஒரு செய்கையாகும். கையை மார்பில் இறுக்கமாக கட்டியிருந்தால் நீங்கள் பிடிவாதக்காரர் என்ற ஒரு தோற்றத்தை கொண்டுவரும். உங்கள் மேலதிகாரி ஏதாவது சொல்லும் போது, கையை கட்டியிருந்தால் அது இறுக்கமான ஒரு சூழ்நிலையை உங்களுக்குத் தெரியாமலேயே உருவாக்கிவிடும்.
அத மட்டும் தொட்ராதீங்க..!
பணியிடத்தில் தவிர்க்க முடியாத நேரத்தில் மட்டும் செல்போனை பயன்படுத்துங்கள். உங்கள் சொந்தக் கதைகளை பேசிக் கொண்டிருக்க நிறுவனம் உங்களுக்கு சம்பளம் தரவில்லை. அலுவலக நேரத்தில் செல்பி எடுப்பது, ஃபேஸ்புக்கில் எழுதுவது, வாட்ஸப்பில் பேசுவது போன்றவற்றை முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள். அதுவும் ஏதாவது மீட்டிங் நடக்கும் சமயம் உங்கள் செல்போன் மணி அடித்தால் அது உங்கள் வேலைக்கான ஆப்பு மணி தான். அதத் தொடாம தள்ளி வச்சுட்டு கம்முனு இருங்க.
தள்ளி நில்லுங்க பாஸ்..!
சக பணியாளரிடம், குறிப்பாக பெண் பணியாளரிடம் பேசும் போதும் பழகும் போதும் கொஞ்சம் தள்ளியே நில்லுங்கள். அது உங்களுக்கும் அவர்களுக்கும் நல்லது. நெருக்கத்துக்குப் போனால் கண்டிப்பா உங்க வேலைக்கும் நெருக்கடி தான். உங்கள் அலுவலக நண்பரின் தோளில் கை போட்டுச் செல்வது, அரட்டை அடிப்பது போன்றவை எல்லாம் அலுவலக இடங்களில் மதிக்கப்படுவதில்லை.
கம்பீரமாக கை குலுக்குங்கள்..!
அலுவலங்களில் உங்களுக்கு யாரேனும் கை கொடுக்க முற்பட்டால் ஏனோ தானோவென்று கையை கொடுக்காதீர்கள். கம்பீரமாக, உறுதியாக கை குலுக்குங்கள். அதே சமயம் எதிரில் இருப்பவர்களின் கண்களை நேராக பாருங்கள். அது உங்கள் தன்னம்பிக்கை சார்ந்த விஷயம். எங்கோ பார்ப்பதும், கை கொடுப்பதற்கு தயங்குவதும் உங்கள் ஆளுமை குறைபாடாக அமையும்.
எக்ஸ்க்யூஸ் மீ..!
உங்கள் உயர் அதிகாரி அல்லது சக ஊழியரின் அறைக்குச் செல்லும் போது கதவை தட்டி அனுமதி வாங்கிட்டு செல்லவும். மீட்டிங் நடக்கும் போது சற்று தாமதமாக உள்ளே நுழையும் போது கட்டாயம் எக்ஸ்க்யூஸ் கேளுங்கள்.
அடிக்கடி பார்க்காதீர்கள்..!
இது எல்லாருமே செய்யக் கூடிய ஒன்று தான். காலை அலுவலகத்திற்குள் நுழைந்தவுடன் எப்படா மாலை 6 மணி ஆகும் என நிமிடத்திற்கு ஒரு முறை கடிகாரத்தையே பார்ப்பது. இன்னும் சிலர் தங்களுடைய சீட்டில் மிகச் சாய்வாக தளர்ந்து உட்கார்ந்து எப்போது கிளம்புவோம் என்று காத்திருப்பார்கள். இன்னும் சிலர் வெட்டியாக கம்யூட்டரில் எதையாவது பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆறு மணி அடித்த அடுத்த நொடியே இவர்கள் சட்டென மறைந்து விடுவர்.
இதை யார் கவனிக்கிறார்கள் என நீங்கள் சாதாரணமாக விட்டாலும் உங்களை கவனிப்பதற்காகவே நியமிக்கப்பட்ட ஒருவர் உங்களது மேலதிகாரியிடம் மூட்டி விடுவார் என்பதை என்றும் நினைவில் கொள்ளுங்கள்.