இந்திய நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாள் இன்று (அக்டோபர் 15). ஐநா சபையால் இந்த நாள் உலக மாணவர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
தமிழகத்தைச் சேர்ந்த அப்துல் கலாம் தன் வாழ்நாளின் பெரும்பங்காக மாணவர்களுக்காக செயலாற்றியுள்ளார். வாழ்நாள் முழுக்க மாணவர்கள் மத்தியில் சிறந்த முன்னுதாரணமாக விளங்கிய இவரது பிறந்த நாள் ஐநா சபையால் 2010ல் உலக மாணவர்கள் தினமாக அறிவிக்கப்பட்டது.
விண்வெளித் துறையின் நாயகன்
தமிழகத்தில் ராமேஸ்வரம் மாவட்டத்தில் பிறந்தவர் ஆவுல் பக்கீர் ஜெயினுலாபுதீன் அப்துல் கலாம். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும் அவருக்கு கல்வியின் மீது அளவற்ற ஈடுபாடு இருந்தது. அதன் தொடர்ச்சியாகவே இந்திய விண்வெளித் துறையான ஐ.எஸ்.ஆர்.ஓ.வில் பணிக்குச் சேர்ந்தார்.
விண்வெளித் துறையின் மைல் கல்
ஐஎஸ்ஆர்ஓ-வில் மிகவும் சிறப்பாக பணியாற்றிய இவர் , இந்திய விண்வெளித் துறையின் மைல் கல்லாக உள்ள அக்னி-1 திட்டத்திற்கு வித்திட்டார். அதனைத்தொடர்ந்து தயாரிக்கப்பட்ட அனைத்து அக்னி ஏவுகணைகளுக்கும் இதுதான் முன்னோடியாகும். இந்தத் திட்டத்தில் இவரது செயல்பாடு இந்தியா முழுக்க அனைவராலும் பாராட்டப்பட்டது.
குடியரசுத் தலைவர்
விண்வெளி துறை ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட கலாம் இன்று வரையிலும் மறக்கமுடியாத அல்லது இந்தியாவின் மிக முக்கியமான குடியரசுத் தலைவர்களின் வரிசையில் இடம்பெற்றது அனைவரும் அறிந்த ஒன்றே.
அறிவியல் தினம்
அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்த போது ஒருமுறை ஸ்விட்சர்லாந்த் நாட்டிற்கு சுற்றுப் பயணம் சென்றார். இவர் பயணம் செய்த அந்த மே 26 ஆம் நாளை அந்த நாடு அறிவியல் தினமாக அனுசரித்துக் கொண்டாடுகிறது. கலாம் இந்திய மக்கள் மட்டுமின்றி உலக நாட்டினர் அனைவரும் ரசித்த மனிதர் என்பதற்கு இதுவும் ஓர் உதாரணமாகும்.
விருதுகளும், புத்தகங்களும்
கலாம் தனது வாழ்நாளில் பல புத்தகங்களை எழுதியுள்ளார். அதில், அக்னிச் சிறகுகள், எனது பயணம், இந்தியா 2020 ஆகியவை மிகவும் பிரபலமாகும். அதுபோலவே பத்ம பூஷன், பத்ம விபூஷன், பாரத ரத்னா என இந்தியாவின் மிக உயரிய விருதுகளைப் பெற்ற தலைவராகவும் இவர் திகழ்கிறார்.
அப்துல் கலாம் மரணம்
அறிவியல் துறையில் சிறந்து விளங்கிய அப்துல் கலாமிற்கு ஆசிரியர் பணி மிகவும் பிடித்த பணியாகும். 2015 ஜூலை 27ம் தேதியன்று ஐஐஎம் ஷில்லாங்கில் இவர் மாணவர்கள் முன் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இவரது மரணம் இந்தியா முழுக்க அனுசரிக்கப்பட்டது.
உலக மாணவர்கள் தினம்
ஆண்டு தோறும் அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளானது உலக மாணவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இன்றைய நாள் மட்டுமின்றி வருடம் முழுவதுமே கலாம் அவர்களின் பொன் மொழிகள், உரையாடல் உள்ளிட்டவை இணையத்தில் அதிகமாகத் தேடப்படும் ஒன்றாகும்.