ஒவ்வொரு நிறுவனமும் தங்களுடைய தொழிலாளர்களுக்கு வருடத்திற்கு ஒரு முறை ஊதிய உயர்வு தருவது வாடிக்கையான ஒன்று. இதன் மூலம் பணியாளர்கள் உற்சாகமடைவர் என்றும், உற்பத்தி அதிகரிக்கும் என்றும் நிர்வாகம் நம்புகிறது.

இருப்பினும் தற்போது கொரோனா தொற்று காரணமாக சில நிறுவனங்களில் ஊதிய பிடித்தம் செய்தாலும், பெரும்பாலான நிறுவனங்கள் ஊதிய உயர்வு குறித்த பேச்சை தொடங்கிவிட்டது. அப்படித் தொடங்கி நிறுவனத்தில் எப்படி பேசினால் ஊதிய உயர்வு கிடைக்கும் என பார்க்கலாம் வாங்க.
எவ்வளவு சதவிகிதம் கேட்கலாம்?
ஊதிய உயர்வு குறித்த பேச்சு தொடங்கியதுமே எழும் கேள்வி எவ்வளவு சதவிகிதம் கேட்களாம்? என்பதுதான். அப்படி, எவ்வளவு ரூபாய் சம்பள உயர்வு வேண்டும் என்று உங்களது மேலதிகாரி கேட்டால் என்ன சொல்ல வேண்டும் தெரியுமா? இப்போது தான் நீங்கள் தெளிவாகப் பேச வேண்டிய நேரம். ஊதிய உயர்வு கேட்கும் முன்பு சந்தை நிலவரத்தையும் கவனத்தில்கொள்ள வேண்டும். நீங்கள் பார்க்கும் வேலைக்கும், உங்களுடைய பொறுப்பிற்கும் மற்ற நிறுவனங்களில் எவ்வளவு சம்பளம் கொடுக்கிறீர்கள் என நீங்கள் தெரிந்திருக்க வேண்டும்.
கூச்சப்படாம கேளுங்க பாஸ்
நம்மில் பெரும்பாலானோருக்கு ஊதிய உயர்வு கேட்பது ஏதோ குற்ற செயல் போலவே உள்ளது. அவ்வளவு தயக்கம். அதிலும் சிலர், நமக்கு எதற்கு வம்பு, இப்படியே இருந்து விடுவோம். நிர்வாகமே கொடுத்தால் கொடுக்கட்டும், இல்லைனா விட்டுவிடுவோம் என்ற மனநிலையில் இருப்பர். முதலில் இந்த மனநிலையிலிருந்து வெளியேறுங்கள். நீங்கள் செய்யும் வேலைக்கே ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே, ஊதிய உயர்வு வேண்டும் என்றால் தயங்கப்படாமல் முறையிடுங்கள்.
குடும்பக் கதையெல்லாம் வேண்டாம்
ஊதிய உயர்விற்கு முன்பு மேலதிகாரியிடம் குடும்பக் கதை, சொந்தக் கதையெல்லாம் சொல்லி இரக்கத்தைத் தேடாதீர்கள். உங்களது ஏழ்மை, சோக கதையெல்லாம் அவர்களுக்குப் பழகிப் போனதுதான். உங்களுடைய பணி என்ன? உங்களால் கம்பெனிக்கு எவ்வளவு லாபம் கிடைக்கிறது? இதைக் கணக்கிட்டுத்தான் ஊதிய உயர்வு வழங்கப்படும்.
எப்போ, எப்படி பேசுரது?
ஊதிய உயர்வு குறித்து பேசுரதுக்கு முன்னால அதனை கேட்க உங்களது மேலதிகாரி தயாராக உள்ளாரா என்பதை உறுதிசெய்யுங்கள். வேலை நேரத்தில், அதற்கு இடையூறு அளிக்கும் வகையில், சம்பள பேச்சை எடுக்க வேண்டாம். ஒரு வேளை சூழ்நிலையே அமையவில்லை என்றால் அப்பாயின்மென்ட் வாங்கி, அதன் பிறகு, சம்பள பேச்சு வார்த்தையை தொடங்குங்கள். இது உங்களுக்கு ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும்.
அவனுக்கு மட்டும் அவ்வளவு சம்பளமா??
இந்த குறிப்பு ரொம்ப முக்கியம் பாஸ். நான் எவ்வளவு வேலை பாக்குறேன், என்னைய விட குறைவாக பணியாற்றும் அவருக்கு அதிக சம்பளமா? இந்த நிகழ்வு அனைவருக்குமே ஏற்பட்டிருக்கும். ஆனால், இதை ஒரு புகாராக மேலதிகாரியிடம் கூறிவிடக் கூடாது. இதுபோன்ற சூழலில் நீங்கள் உங்களுடைய வேலையை மட்டும் பாருங்கள். உங்களது சம்பளத்துடன் மற்றவர்களை ஒப்பிடாதீர்கள். உங்களுக்கு சம்பள உயர்வு வேண்டுமென்றால், உங்களுடைய வேலை, திறமை ஆகியவற்றை மட்டுமே சுட்டிக்காட்டி பேசுவது நல்லது.


Click it and Unblock the Notifications












