'காலம் பொன் போன்றது' என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால் அதற்கும் அப்பாற்பட்டது காலம் என்றால் அது மிகையாகாது.
பொன்னும், பொருளும் போனால் தேடிக்கொள்ளலாம். ஆனால் கடந்த காலத்தைத் தேடிக் கண்டடைய இயலாது. அது போனால் போனது தான். எனவே நமக்கு கிடைத்துள்ள அற்புதமான நேரத்தை எவ்வாறு பயனுள்ள வகையில் பயன்படுத்தி வெற்றியை எட்டிப்பிடிப்பது என்பதை பார்க்கலாம்.
1. பதிவு செய்யுங்கள்:
நேரம் பொன் போன்றது என்று கேள்விப்பட்டிருப்பீர்கள் அந்த பொன்னான நேரம் எங்கு வீணாகச் செலவாகிறது என்பதைக் கண்டறிவது மிக அவசியம்.
இதை கண்டறிய குறைந்தபட்சம் ஒருவார கால நடவடிக்கைகள், எண்ணங்கள் மற்றும் உரையாடல்களைப் பதிவு செய்தே, அல்லது எழுதிவைக்க பழகுங்கள்.
2. திட்டமிடுதல்:
சரியான கால அளவைப் பின்பற்றி திட்டமிடும் எந்த விஷயமும், வெற்றிக்கு வித்திடும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
வேலைகளை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும் என்று திட்டம் போட்டுச் செயல்படுத்தினால் ஒழிய வெற்றியை நெருங்குவது மிக சிக்கலான விஷயமாகிவிடும்.
3. கவனம்:
முன்னேற்றும் தொடர்பான எண்ணங்கள், நடவடிக்கைகள், உரையாடல்களுக்கு கூடுமான நேரத்தை செலவிடுங்கள்.
இடைஇடையே, தேவையற்ற வேலைகளில் கவனம் சிதறாமல் இருத்தல் மிகவும் நல்லது.
4. பட்டியலிடுங்கள்:
கூடுமானவரை அலுவலகத்துக்கு அரை மணி நேரம் முன்னதாக வர பாருங்கள். இதோடு, அன்றைய பணிகளை முழுமையாகப் பட்டியலிட மறக்காதீர்கள்.
எந்த பணிக்கு என்ன முக்கியத்துவம் என்பதை பொறுத்து பட்டியலிடப்பட்ட வேலைகளை ஒவ்வென்றாக குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க திட்டமிடுங்கள்.
5. உடற்பயிற்சி:
வேலையையும், அன்றாட வழ்கையையும் போட்டு குழப்பிக்கொள்ளக் கூடாது. அன்றாட அலுவலக வேலைகளை அலுவலகத்திலே முடிக்கும் படியான மேற்கூறிய பயிற்சியை மேற்கொண்டால் இந்த பிரச்னை வராமல் தடுக்கலாம்.
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்ற பழமொழிக்கு ஏற்ப ஆறு முதல் ஏழு மணி நேர தூக்கமும், தினசரி உடற்பயிற்சியும் வேலையில் முழு ஈடுபாட்டோடு செயல்பட இன்றியமையாததாகும்.
6. டூ நாட் டிஸ்டப்:
மிகவும் முக்கியமான வேலைகளில் ஈடுபடும்போது, மற்றவர்கள் உங்களைத் தொந்தரவு செய்யாமல் இருக்க போன், அல்லது அறையின் வெளியே 'டூ நாட் டிஸ்டப்' போன்ற வாசகங்களை பயன்படுத்த பழகுங்கள். தொலைபேசி, கைப்பேசி அழைப்புகளுக்கும் மெயில்களுக்கும் தனியாக நேரம் ஒதுக்க கற்றுக்கொள்ளுங்கள்.
7. இடைவேளை:
குறிப்பிட்ட நேரத்திற்கு இடைஇடையே இடைவேளை எடுத்துக்கொள்வது அவசியம்.
இது உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சியை கொடுக்கும் மேலும், செய்யும் வேலையில் கவனம் சிதறாமலும், முழு ஈடுபாட்டுடன் வேலையைச் செய்து முடிக்க உறுதுணை புரியும்.
8. பங்களிப்பு:
எல்லா வேலையும் இழுத்துப்போட்டுக் கொண்டு செய்வதை விட குறிப்பிட்ட வேலைகளை செய்து முடிக்கும் திறமை வாய்ந்த நபர்களிடம் வேலைகளை ஒப்படைக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
இது நம் வேலையை சிறப்பாக செய்யவும், மற்றவர்களின் வளர்ச்சியில் பங்கெடுத்து கொள்ளவும் ஒரு வாய்ப்பாக அமையும்.
9. புதிய வேலை:
நீங்கள் பட்டியலிட்ட வேலைகளை முடிக்கும் பட்சத்தில் அதை டிக் செய்வது நலம். இது புதிய வேலைகளை நம் அட்டவணையில் புகுத்தவும். நமக்கான மீதம் இருக்கும் கால அளவினை நமக்கு காட்டவும் உறுதுணை புரியும்.
10. ஒழுங்குபடுத்துதல்:
நம் கம்யூட்டரானாலும், மேஜையானாலும் சரி, அதில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பைல்களை ஒழுங்குபடுத்தி வைப்பது அவசியம். இது வேலையை துரிதப்படுத்துவதோடு, சரியான நேரத்தில் செய்து முடிக்க உதவி புரியும்.