ரஷ்யாவில் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பட்டப் படிப்புகளை மேற்கொள்ளும் இந்திய மாணவர்கள் 100 பேருக்கு 100 சதவிகிதம் கல்வி உதவித் தொகை வழங்குவதாக ரஷிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தென்னிந்திய ரஷிய கூட்டமைப்பு தூதரகத்தின் கலாச்சார துணைத் தூதர் கென்னடி ரோகலேவ் கூறியதாவது:-
ரஷ்யாவில் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அவர்களை ஊக்குவிப்பதற்காக ரஷ்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஆண்டுதோறும் கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 2019-20 ஆண்டுக்கான ரஷிய அரசின் கல்வி உதவித் தொகை திட்டம் அறிவிக்கப்படுகிறது. இந்த வருடம் விமான தொழில்நுட்பம், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட துறைகளில் பட்டப் படிப்புகளை மேற்கொள்ளவுள்ள 100 இந்திய மாணவர்களுக்கு 100 சதவிகிதம் கல்வி உதவித் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்குத் தகுதியான மாணவர்கள் https://studyinrussia.ru/ அல்லது http://russia.study.ru என்ற இணையதளத்தின் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம். தேர்வாகும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி அளிக்கப்படும்.
பொதுவாகவே ரஷிய மொழியில் கல்வி பயிலுபவர்களுக்கு மட்டுமே உதவித் தொகை வழங்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டில், மாஸ்கோ இயற்பியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும், டாம்ஸ்க் பாலிடெக்னிக் கல்லூரியும் ஆங்கில வழியில் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கும் உதவித் தொகை வழங்க முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பான கூடுதல் தகவல்களுக்கு 044 - 2499 0050 என்னும் தொலைப்பேசி எண்ணிற்குத் தொடர்பு கொள்ளலாம். அல்லது சென்னையில் உள்ள ரஷிய கலாச்சார மையத்தை அணுகலாம் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications












