ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக் கல்விக்கான உதவித்தொகையைப் பெற்றுக்கொள்வதற்கு மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா். தகுதியும், விருப்பமும் உள்ள மாணவிகள் இந்த உதவித்தொகையைப் பெறுவதற்கான பணிகளில் இறங்கலாம். கூடுதல் விவரங்களுக்கு https://erode.nic.in/ta/ என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.
ஈரோடு மாவட்டம் (Erode district), இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஈரோடு ஆகும். இது தமிழ்நாட்டின், மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மாவட்டம் 5,722 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது.
இதன் வடக்கில் கர்நாடக மாநிலம், தெற்கில் திருப்பூர் மாவட்டம் மற்றும் கரூர் மாவட்டங்கள், கிழக்கில் நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்கள், மேற்கில் கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்கள் அமைந்துள்ளன. காவிரி, பவானி, மற்றும் நொய்யல் ஆகிய ஆறுகள் ஈரோடு மாவட்டத்தின் வழியாகப் பாய்கின்றன. 1996-ஆம் ஆண்டுவரை, இது பெரியார் மாவட்டம் என்று அழைக்கப்பட்டது.
பெரும்பள்ளம் ஓடை மற்றும் பிச்சைக்காரன்பள்ளம் ஓடை ஆகிய இரண்டு ஓடைகளுக்கு நடுவே அமைந்துள்ளதால் இவ்வூரை ஈரோடை (இரண்டு ஓடை) என்னும் பெயரால் அழைக்கின்றனர். இங்குள்ள கடவுளுக்கு, கபாலீசுவரர் என்ற பெயர். அதனை ஒட்டி ஈர ஓடு என்னும் பெயர் ஏற்பட்டு நாளடைவில் ஈரோடு என்று மாறியதாகவும் கூறுவர்.

இந்த ஈரோடு மாவட்ட பள்ளி மாணவிகளுக்குத்தான் தற்போது கல்வி உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
வருமான உச்ச வரம்பு
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பெற்றோரின் உச்சகட்ட ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். தகுதியுள்ள மாணவியர்களுக்கு ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 9 மற்றும் 10ஆம் வகுப்பில் பயிலும் மாணவியர்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அல்லது அஞ்சல் வங்கிகளில் தமது பெயரில் வங்கிகணக்கு துவங்கி அதனை தமது ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்.
இணையதள முகவரி
மேற்படி ஆதார் எண் மற்றும் வங்கி விபரங்களை தமது வருமானச் சான்று மற்றும் சாதிச்சான்று நகல்களுடன் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களிடம் சமர்பிக்க வேண்டும். அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மாணவியர்களது விபரங்களை இஎம்ஐஎஸ் (கல்வியியல் மேலாண்மைத் தகவல் மையம்) emis.tnschools.gov.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ஆட்சியர் அலுவலகம்
இந்தத் திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், புதிய கட்டடம் 4-ம் தளத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 0424-2260155, 75986 83121 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புக்கு...
கூடுதல் விவரங்களுக்கு https://erode.nic.in/ta/ என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.


Click it and Unblock the Notifications












