சென்னை: மாநில அளவில் நடைபெற்ற கணிதமேதை ராமானுஜர் விருதுக்கான கணிதத் திறன் போட்டியில், சென்னையை அடுத்த சேலையூர் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவர் பி.விக்னேஷ் பாண்டியன் இளம் ராமானுஜர் விருதைப் பெற்றார்.
இந்தப்போட்டியில் அவர் முதல் இடத்தைப் பெற்றதோடு இளம் ராமானுஜர் விருதையு தட்டிச் சென்றார். மேலும் அவருக்கு ரொக்கப் பரிசாக ரூ.50 ஆயிரமும் கிடைத்தது.
தாம்பரத்தை அடுத்த படப்பை தானிஷ் அகமது பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கணிதத் திறன் போட்டி அண்மையில் நடைபெற்றது.
மாநில அளவில் 190 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். சேலையூர் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் பி.விக்னேஷ் பாண்டியன் முதல் இடத்தைப் பெற்று ராமானுஜர் விருதையும், ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசையும் பெற்றார்.
அதே பள்ளியைச் சேர்ந்த மாணவர் பி.எஸ்.ரோகித் குமார் இரண்டாவது இடத்தையும், மாணவர் கே.எம்.சகாரியார் மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.
தானிஷ் அகமது பொறியியல் கல்லூரித் தலைவர் அல்ஹாஜ் கே.மூசா, மாணவர்களுக்கு விருதுடன் ரொக்கப்பரிசுகளை வழங்கினார். ஓ.என்.ஜி.சி. நிறுவன செயல் இயக்குனர் பி.ராஜா, ராமாபுரம் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக முதல்வர் வி.சுப்பையா பாரதி, தானிஷ் அகமது பொறியியல் கல்லூரி முதல்வர் வி.ஸ்ரீனிவாச ராகவன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.