சென்னை: கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட இளைஞர், தற்போது புதுச்சேரி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பதற்கான அட்மிஷனைப் பெற்றுள்ளார்.
நோய் வந்தால் உடல், மனது இரண்டும் தளர்ந்து போகும் என்பார்கள். ஆனால் இந்த இளைஞர்களை நோயை வென்று தற்போது எம்பிபிஎஸ் படிப்பிலும் சேர்ந்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளார்.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கந்தசாமியின் மகன் சஞ்சய்(18). இவர் கடந்த 1997-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி பிறந்தார். பிறந்தபோதே இவருக்குப் பல பிரச்னைகள் ஏற்பட்டன. முதலில் இவருக்கு மஞ்சள் காமாலை நோய் வந்தது. சிகிச்சை அளித்தும் அவருக்கு நோய் விடவில்லை.
இதைத் தொடர்ந்து பல்வேறு மருத்துவ சோதனைகளுக்குப் பிறகு சஞ்சய்க்கு கல்லீரல் சுருக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதைத் தவிர அவரைக் காப்பாற்ற வேறு வழியில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சஞ்சய்க்கு தில்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அந்த மருத்துவமனையில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மருத்துவர் ராஜசேகர், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைப் பிரிவை தொடங்கினார். இதற்காக சஞ்சய்யின் தந்தை கந்தசாமியிடம் இருந்து 25 சதவீதம் அளவுக்கு கல்லீரல் தானம் பெறப்பட்டு, கடந்த 1998-ஆம் ஆண்டு நவம்பர் 15-ஆம் நாள் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
சுமார் 9 மணி நேரத்துக்கு பிறகு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. அப்போது சஞ்சய் 18 மாதக் குழந்தையாக இருந்தார். மேலும் தெற்கு ஆசியாவிலேயே முதன் முறையாக இந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை இவருக்குத்தான் முதன்முதலாக வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இன்று அந்த அந்த இளைஞருக்கு 18 வயதாகிறது. 12-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்ற சஞ்சய்க்கு புதுவையில் தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.
அங்கு மகிழ்ச்சியில் தனது எம்பிபிஎஸ் படிப்பைப் படிக்க விழைந்துள்ளார் சஞ்சய். இந்த நிலையில் இந்த மாணவர் சஞ்சய்க்கு நேற்று இந்திய மருத்துவர் சங்கம், இந்திய குழந்தைகள் நல மருத்துவர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
ஏராளமான மருத்துவர்கள் கலந்துகொண்டு அவருக்குப் பாராட்டுத் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக இந்திய குழந்தைகள் நல மருத்துவர் சங்கத் தலைவர் யோகானந்தம் கூறியதாவது:
சஞ்சய்க்கு வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்ட இந்த அறுவைச் சிகிச்சை இந்தியாவுக்கு கௌரவத்தைத் தேடித் தந்தது. தெற்கு ஆசியாவிலேயே இதுதான் முதல் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை என்பது எங்களுக்கெல்லாம் பெருமை என்றார் அவர்.