சென்னை : சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெய் கோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு விலை இல்லா புத்தகங்கள் நோட்டுகள் மற்றும் சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை தாங்கி மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து மற்ற பள்ளிகளிலும் நோட்டு புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டன.
கல்வி நிறுவனங்களின் தேவைகள் இந்த வருடத்தின் இறுதிக்குள் நிறைவேற்றி தரப்படும். மாணவர்களுக்கு யோகா பயிற்சி மற்றும் சாலை விதிகளை மதிக்கும் வகையில் பயிற்சிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
பிளஸ் 1 பொதுத் தேர்வு
பிளஸ்1 வகுப்பிற்கும் பொதுத் தேர்வு என்பதால் மாணவ மாணவியர்களுக்கு வினாத்தாள் எப்படி வரும் என்பதை ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும். அதற்கான பணிகள் இன்னும் ஒரு வாரத்திற்குள் முடிவடையும். பிளஸ்1 வகுப்பிற்கும் பொதுத் தேர்வு என்பதால் மாணவர்கள் பயப்படத் தேவையில்லை. சிறந்த ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நல்ல கல்வியை கற்றுத் தருவார்கள். மாணவ மாணவியர்கள் சிறந்த கல்வியாளர்களாக உருவாக வேண்டும். இந்தியாவுக்கே வழிகாட்டியாக திகழ வேண்டும் என்று செங்கோட்டையன் கூறினார்.
பிளஸ் 1 மாதிரி வினாத்தாள்
பிளஸ் 1 வகுப்பிற்கு முதன் முறையாக பொதுத் தேர்வு நடைபெற உள்ளதால் மாணவர்களுக்கு வினாத்தாள் எப்படியிருக்கும் என்ற அச்சம் வேண்டாம். மாதிரி வினா - விடைத்தாள் மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும். அப்படி வழங்கப்படும் மாதிரி வினாத்தாள்களை வைத்து ஆசிரியர்கள் கற்றுக் கொடுப்பார்கள். இன்னும் ஒரு வாரத்தில் மாதிரி வினா விடைத்தாள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பயிற்சி வகுப்புகள்
மத்திய அரசால் நடத்தப்படும் நீட், ஜெஇஇ போன்ற போட்டித் தேர்வுகளை எதிர் கொள்ளும் வகையில் மாணவ மாணவியர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் சனிக்கிழமை 3 மணி நேரம் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் மத்தியில் இருக்கும் பள்ளிகளில் வைத்து நடத்தப்படும்.
அரசு பள்ளியில் 1 லட்சம் மாணவர்கள் கூடுதல் சேர்க்கை
கல்வித்துறை சார்பாக 42 அறிவிப்புகள் விரைவில் அறிவிக்கப்படும். வருகிற 15ந் தேதி பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை வருகிறது. அதில் இந்த அறிவிப்புகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் நீட் தேர்வு வேண்டாம் என்று தொடர்ந்து வலியுறுத்திதான் வருகிறோம் என தெரிவித்தார். மேலும் அரசு பள்ளியில் மாணவ மாணவியர்கள் கடந்த வருடத்தை விட 1 லட்சம் பேர் அதிகமாக சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். அரசு பள்ளியில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்பதையும் கூறிவருகிறோம். சீருடைகள் குழந்தைகளுக்கு இனி வரும் வருடங்களில் அளவு எடுத்து தைக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications












