சென்னை: தமிழகத்தில் நேற்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில், இந்தியாவின் 13ஆவது குடியரசுத் தலைவர் யார் என்ற கேள்விக்கு தவறான பதில்கள் இடம் பெற்றன. இதனால் தேர்வர்கள் குழப்பம் அடைந்தனர். தமிழகம் முழுவதும் நேற்று குரூப்-2 தேர்வு நடைபெற்றது.
இந்தத் தேர்வின்போது கேள்வித்தாளில் இந்தியாவின் 13ஆவது குடியரசுத் தலைவர் என்ற ஒரு கேள்வி இடம் பெற்றுள்ளது. இதற்குப் பதில்களாக அப்துல் கலாம், பிரதிபா பாட்டீல், கே.ஆர். நாராயணன், பி.டி. ஜாட்டி ஆகிய பெயர்கள் கொடுக்கப்பட்டிருந்தன.
இந்தியாவின் 13ஆவது குடியரசுத் தலைவர் தற்போதைய குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜிதான். இந்த நிலையில் பதில்களில் அவரது பெயர் இடம்பெறவில்லை. மேலும், பதிலில் இடம்பெற்றுள்ள பி.டி. ஜாட்டி, இடைக்கால குடியரசுத் தலைவராக இருந்தவர் என்பதால், அவரது பெயர் குடியரசுத் தலைவர்கள் வரிசையில் வராது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்ல, அவரது பெயரின் உச்சரிப்பைக் கூட சரியாக எழுதவில்லை. ஜாட்டி என்பதை தமிழில் ஜட்டி என்று குறிப்பிட்டிருந்தனர்.
கேள்வித்தாளில் இவ்வாறு இடம்பெற்றிருந்த பதிலால் தேர்வர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். அவர்கள் எந்தப் பதிலைத் தேர்வு செய்வது என நீண்ட நேரம் குழப்பத்தில் இருந்தனர்.
சிலர் இந்தக் கேள்வியை விட்டுவிட்டதாகவும் தெரிவித்தனர்.