சென்னை: நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுகாதாரதுறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் அடங்கிய தமிழக அதிகாரிகள் குழு பிரதமரின் செயலாளரைச் சந்தித்து இன்று பேசியுள்ளனர்.
நீட் தேர்விலிருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்படாவிட்டாலும் குறைந்தது 2 அல்லது 3 வருடங்களாவது விலக்கு அளிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
விலக்கு அளிக்கப்படும் காலகட்டத்தில் தமிழக அரசின் பாடத்திட்டங்களை மாற்றியமைத்து தமிழக மாணவ மாணவியர்களை நீட் தேர்விற்கு தயார்படுத்தி விடுகிறோம் எனக் கூறி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு முடிந்து விட்டது. நுழைவுச்சீட்டு இன்றிலிருந்து (15.03.2017) வழங்கப்படுகிறது
பிளஸ்டூ மதிப்பெண் அடிப்படையில்
தமிழகத்தில் 2007ம் ஆண்டில் இருந்து மாணவர்கள் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் அவர்களது 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாக வைத்தே சேர்க்கப்பட்டனர்.
சுப்ரீம் கோர்ட் உத்தரவு
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் படி தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வு மூலம்தான் மாணவர்கள் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் சேர்க்கப்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சிபிஎஸ்இ பாடத் திட்டம்
நீட் தேர்வு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டது. தமிழக மாணவர்கள் மாநில அரசு பாடத்திட்டத்தின் கீழ் பயின்று வருகிறார்கள். அதனால் அவர்களுக்கு நீட் தேர்வு கடினமான ஒன்றாகத்தான் கட்டாயம் இருக்கும்.
கிராமப்புற மாணவர்களுக்கு சிரமம்
இதனால் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் மாநில அரசு பாடத்திட்டத்தின் கீழ் பயின்று வரும் மாணவ மாணவியர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மசோதா
தமிழக சட்டமன்றத்தில் சட்ட மசோதா நீட் தேர்வில் இருந்து மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும் என்பதற்காக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஒப்புதல் அளிக்காத ஜனாதிபதி
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமரைச் சந்தித்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். மேலும் தமிழக அமைச்சர்களும் மத்திய மந்திரிகளைச் சந்தித்து வலியுறுத்தினர். இருப்பினும் இன்னும் ஜனாதிபதியின் ஒப்புதல் நீட் மசோதாவுக்குக் கிடைக்கவில்லை.