சென்னை, மார்ச் 19: அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் பங்கேற்கும் புதிய கல்விக் கொள்கை மீதான விவாதம் 21ம் தேதி டெல்லியில் நடக்கிறது. அதில் தமிழக கல்வி அமைச்சருக்கு பதிலாக உயர்கல்வி துறை செயலாளர், பள்ளிக் கல்வித்து துறை செயலாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

புதிய கல்விக் கொள்கை மீதான கருத்து பரிமாற்றம், கலந்துரையாடல், விவாதம் நடத்த மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை முடிவு செய்துள்ளது. இதையடுத்து அனைத்து மாநிலங்களை சேர்ந்த உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் அமைச்சர்கள், பங்கேற்கும் நிகழ்ச்சியை டெல்லியில் ஏற்பாடு செய்துள்ளது. இந்த விவாதம் 21ம் தேதி நடக்கிறது. இதையடுத்து அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுக்கும் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அழைப்பு அனுப்பியுள்ளது. மற்ற மாநிலங்களில் இருந்து கல்வி அமைச்சர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.
ஆனால் தமிழகத்தில் பள்ளிக் கல்வி அமைச்சருக்கு பதிலாக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா கலந்து கொள்ள இருப்பதாக தெரிகிறது. மேலும் உயர்கல்வித்துறை அமைச்சருக்கு பதிலாக அத்துறையின் செயலாளர்ஸ்ரீதர் பங்கேற்பார் என்றும் தெரிகிறது.
முக்கியமான பல்வேறு அம்சங்கள் இந்த நிகழ்ச்சியில் விவாதிக்ககப்பட உள்ளது. இந்த விவாத நிகழ்வில் பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வியில் தொழில் கல்வியை புகுத்துவது, தொடர் மதிப்பீடு, மற்றும் தேர்வு முறைகள் ஆகியவற்றில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பான விவாதங்கள் இடம் பெறுகின்றன. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு போல மாநில அரசுப் பாடத்திட்ட மாணவர்களுக்கும் தேர்வு முறையில் மாற்றங்களை கொண்டு வருவது தொடர்பாகவும் விவாதிக்க உள்ளனர். இதன்படி மாநில அரசின் பத்தாம் வகுப்பு தேர்வில் மதிப்பெண்ணுக்கு பதிலாக கிரேடு முறை கொண்டுவரப்படலாம் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications












