அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளிலேயே சேர்ப்பது குறித்த ஆணை பெறுவதில் சட்ட சிக்கல்கள் உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வட்டாரக் கல்வி அலுவலர் சங்கம் சார்பில், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களை வட்டாரக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்த பள்ளிக் கல்வித் துறைக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பங்கேற்றார்.
இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் கூறியதாவது :
தமிழகத்தில் 5 மற்றும் 8-ஆம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு நடத்தப்படுமா என்பது குறித்து கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்துக்களை கேட்ட பின்பு அதனை நிறைவேற்றுவது குறித்து அமைச்சரவை கூடி முடிவு செய்யும்.
அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளிலேயே சேர்ப்பது குறித்து ஆணை பெறுவதில் சட்ட சிக்கல்கள் உள்ளன. நீதிமன்றத் தீர்ப்பு விவரம் முழுமையாகக் கிடைத்த பிறகு இது குறித்து அரசு பரிசீலித்து உரிய முடிவு எடுக்கப்படும். மேலும், சிறப்பு ஆசிரியர் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் வழக்கு முடிந்த பின்னர் ஐந்து நாள்களுக்குள் அவர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.