சென்னை, மார்ச் 18: சிபிஎஸ்இ பள்ளிகளில் முதல் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கான First language பாடங்களை முடிவு செய்வதில் இழுபறி நீடிக்கிறது.
இதனால் தமிழகத்தில் சிபிஎஸ்இ பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பாடத் திட்டத்தைக் கொண்ட பள்ளிகள் 450 இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் முதல் வகுப்பில் ஆங்கிலம், இந்தி, கணக்கு, அறிவியல், கம்ப்யூட்டர், ஆகிய தலைப்புகளில் பாடங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்கள் உயர்வகுப்பு வரும்போது அவர்களுக்கு பொதுத் தேர்வில் மதிப்பெண் முறைக்கு பதிலாக கிரேடு வழங்கும் முறை நடப்பில் உள்ளது. மேலும், மத்திய அரசு வழங்கும் உயர்கல்விக்கு செல்ல இந்த வகை படிப்புகள் உதவியாக இருப்பதால் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை பெரும்பாலான பெற்றோர் விரும்புகின்றனர். அதனால் தங்கள் குழந்தைகளை அதில் சேர்க்கவும் விரும்புகின்றனர்.
சிபிஎஸ்இ பள்ளிகளைப் பொருத்தவரை முதல் வகுப்பில் சேர்க்கப்படும் குழந்தைகள் ஆங்கிலம், இந்தி, கணக்கு, அறிவியல், மற்றும் கம்ப்யூட்டர் பாடங்களை படிக்க வேண்டும். அந்தந்த பிராந்திய மொழிகளை கற்கும் வாய்ப்பும் தாய் மொழியை கற்கும் வாய்ப்பும் அதில் இல்லை.
இந்நிலையில், தமிழகத்தில் இயங்கும் அனைத்து வகை கல்வி வாரியங்களையும் கடந்த 2008ம் ஆண்டு தமிழக அரசு கலைத்துவிட்டு பொதுக் கல்வி வாரியத்தை அறிமுகம் செய்தது. அதனால் தமிழகத்தில் தற்போது சமச்சீர் கல்வி முறை அமலில் உள்ளது. எனவே அனைத்து பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளும் முதன்மை மொழியாக தமிழை படிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது மெட்ரிக் பள்ளிகள், சிறுபான்மை மொழிப் பள்ளிகளிலும் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் தமிழகத்தில் இயங்கும் சிபிஎஸ்இ பள்ளிகளில் மட்டும், தமிழ் மொழிப் பாடம் இல்லை. இதையடுத்து சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் முதல் வகுப்பு குழந்தைகளும் கட்டாயமாக தமிழை படிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், தமிழக பள்ளிகளில் வழங்கப்படும் முதல் வகுப்பு தமிழ்ப் பாட புத்தகங்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. ஆனால், சிபிஎஸ்இ சென்னை மண்டலத்துக்கான இயக்குநர் சுதர்ஷன் ராவ் இது குறித்து மத்திய அரசிடம் இருந்து உத்தரவு வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அதாவது, சிபிஎஸ்இ தலைமை அலுவலகத்தில் இருந்து உத்தரவு வராததால், சிபிஎஸ்இ தமிழக பள்ளிகளில் இந்த ஆண்டும் தமிழ் மொழி இடம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. தமிழகத்தில் இயங்கும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் தமிழக அரசின் உத்தரவுகள் பொருந்தும் என்று உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது.
அதன் பேரில் தமிழக அரசின் கட்டண கமிட்டி, சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் கட்டணம் நிர்ணயித்துள்ளது. எனவே தமிழ் மொழியையும் ஏற்றுக் கொண்டாக வேண்டும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் சிபிஎஸ்இ அதிகாரிகள் மவுனமாக உள்ளனர். தேர்வு முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும் போதுதான் இந்த பிரச்னை வெடிக்கும்.