ஒரு நாடு வளமிக்கதாக காட்சியளிக்கிறது என்றால், நாம் ஒன்றை நன்கு உணர்ந்தாக வேண்டும். அதாவது, அந்த நாட்டின் வனப்பகுதி வளம் மிக்கதாக இருக்கிறது என்று. நாள்தோறும் இயற்கை நமக்கு புதிய, புதிய விஷயங்களை நமக்கு காட்சிப்படுத்துவதோடு, கற்பித்தும் வருகிறது.
மனிதர்களின் பேராசை பிடியில், இயற்கை தன் வளத்தை, மெல்ல, மெல்ல இழந்து வருகிறது. இயற்கையின் மிக அழகான படைப்புகளில், பறவைகளுக்கு மிக முக்கிய இடம் உண்டு.
பறவையியல் ஆய்வாளர்களில் முன்னோடி, இந்தியாவின் 'பறவை மனிதர்' என்று அழைக்கப்படும் சலீம் அலி.
தம் வாழ்நாள் முழுவதும் பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதில் இவர் ஈடுபட்டார். இந்தியாவில் ஆயிரத்துக்கும் அதிகமான அரிய வகை பறவை இனங்கள் உள்ளன. தமிழகத்தில் கூழைக்கிடா, வண்ண நாரை, கரண்டிவாயன், புள்ளிமூக்கு வாத்து, செந்நீல நாரை, பாம்புதாரா, நீர்காகம் உள்ளிட்ட பலவகைப்பட்ட பறவை இனங்கள் வாழ்கின்றன. தமிழகத்தில் உள்ள சதுப்புநில காடுகள், மலைகள் போன்ற இயற்கை நிறைந்த இடங்களில் பல வகையான பறவைகள் கூடு கட்டி வாழ்கின்றன.

பறவைகள் தங்களின் இனப்பெருக்கத்திற்காக வலசை போகும். இப்படி வலசை போகின்ற பறவை இனங்கள் குறைந்து வருகிறது. நீர்நிலைகளில் தண்ணீர் தட்டுப்பாடு, மரங்கள் அழிக்கப்படுதல், வேட்டையாடுதல் உள்ளிட்ட காரணங்களால், அாிய வகை பறவைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருகிறது.
பறவைகள் இனம் அழிந்து வருவதை தடுக்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும், தேசிய பறவைகள் தினம் ஜனவரி 5 அன்று கொண்டாடப்படுகிறது, இது பறவைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. வாங்க... நாமும் அதுகுறித்து தெரிந்து கொள்ளலாம்.
தேசிய பறவை தின வரலாறு
தேசிய பறவை தினம் அமெரிக்காவில் தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 5 அன்று இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. 1894 ஆம் ஆண்டு, பென்சில்வேனியாவின் ஆயில் சிட்டியில் உள்ள பள்ளிகளின் கண்காணிப்பாளரான சார்லஸ் அல்மான்சோ பாப்காக், இந்த நாளை தேசிய பறவை தினமாக கொண்டாடுவதற்கான முதல் விடுமுறையை அறிவித்தார்.
வேறு சில பதிவுகளின்படி, தேசிய பறவை தினம் 2002-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் பறவைகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது.
ஜனவரி 5 ஏன்?
வரலாற்று பதிவுகளின்படி, ஜனவரி 5 குறிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டது, ஏனெனில் வருடாந்திர "கிறிஸ்துமஸ் பறவை எண்ணிக்கை" அதே நாளில் நடைபெறுகிறது. இந்த வருடாந்திர கணக்கெடுப்பு அமெரிக்காவில் நீண்ட காலமாக நடந்து வருகிறது. மேலும் அமெரிக்கா முழுவதும் உள்ள பறவைகளின் எண்ணிக்கை மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தேசிய பறவை தின முக்கியத்துவம்
பல காரணிகளால் அழிவின் விளிம்பில் இருக்கும் அனைத்து வகையான பறவைகள் இனம் அழிந்து வருவதை தடுக்கும் விதமாகவும், அவற்றின் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை இந்த நாள் நோக்கமாக கொண்டுள்ளதால் தேசிய பறவைகள் தினம் முக்கியத்துவம் வாய்ந்தது.
'மனிதன் இல்லாத உலகில், பறவைகளும், விலங்குகளும் உயிர் வாழும்; ஆனால், பறவைகளும், விலங்குகளும் இல்லாத உலகில், மனிதர்கள் உயிர் வாழ முடியாது' என்றார், தன் வாழ்நாளின் பெரும் பகுதியை, பறவைகள் தொடர்பான ஆய்வுக்காக செலவழித்த சலீம் அலி...!
எனவே, பறவைகளை பாதுகாப்போம். பறவைகளின் முக்கியத்துவம் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஒவ்வொரு கடமையாகும். பறவைகளின் உயிர்வாழ்வும் நல்வாழ்வும், இயற்கையையும் அவற்றின் வாழ்விடத்தையும் மனிதர்களாகிய நாம் எவ்வாறு பாதுகாக்கிறோம் என்பதைப் பொறுத்தது.
சுற்றுச் சூழலை சமநிலையில் வைத்துக் கொள்வதில், பறவை இனங்களின் பங்களிப்பு மிக முக்கியம். நம் கண் முன்னே இயற்கை, தன் அழகை கொஞ்சம், கொஞ்சமாக அழகிழந்து வருவதை கண்கூடாக காணுகிறோம். இதே நிலை நீடித்தால், இயற்கை எப்படி இருக்கும் என்பதை நம் எதிர்கால சந்ததியினருக்கு சித்திரத்தில் சொல்லிக்கொள்ளும் நிலை தான் மிஞ்சும்.


Click it and Unblock the Notifications












