நாம் வாழ்வது பெருந்தரவுகளின் யுகத்தில்... என்றால் நம்ப முடிகிறது?
நம்பி தான் ஆக வேண்டும்.
அது என்னங்க... புதுசா ஏதோ சொல்ல வர்றீங்களே என கேட்காதீங்க...!
2000ம் ஆண்டுக்கு பின், நாட்டில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பத்துறை(ஐ.டி.,) வளர்ச்சி பெற தொடங்கியதுமே; பொறியியல், கணினி அறிவியல் படிப்பில், மாணவர்கள் சேர அதிக ஆர்வம் காட்டினர்.
அதன் பின், கலை, அறிவியல் படிப்புகளில் மாணவர்களின் பார்வை குவியத்தொடங்கியது.
லட்சக்கணக்கானோர் கல்வி ஆண்டின் இறுதியில் பொறியியல் கல்லூரிகளில் இருந்து வெளியே வந்தாலும், அவர்களில் குறிப்பிட்ட சிலரே நல்ல பணி, சம்பளத்தில் தங்களுக்கான இடத்தை பிடித்து கொள்கின்றனர்.
மற்றவர்கள், தங்களின் அன்றாட தேவைக்கு ஒத்து போகும் பிற பணியை தான் தேடி கொள்கின்றனர். தொழில்நுட்பத்தை
மையப்படுத்திய வாழ்கை முறையின் அபரிமிதமான வளர்ச்சியால், பொறியியல் படிப்புகளில் புதிய படிப்புகளை உருவாகியதால், பொறியியல் மீதான மாணவர்களின் ஆர்வத்துக்கு தீனி போடும் வகையில் அமைந்தது. சரி விஷயத்துக்கு வாங்கனு நீங்க கேட்டது காதில கேட்டுச்சு...!
இந்த ஆர்வத்தால், பொறியியல் மீதான காதல் கொண்ட மாணவர்களின் பிரதான தேர்வு 'தரவு அறிவியல் '(Data Science) உள்ளது.
வாய்ப்பு நிச்சயம்
ஆனால், திறமைகளையும், வாய்ப்புகளையும் வளர்த்துக் கொள்வதன் அடிப்படையில் தான் வேலைவாய்ப்புகள் உள்ளன. அந்த வகையில், சரியான திட்டமிடலுடன், நிறுவனங்களுக்கு என்ன வேண்டுமோ, எந்த திறமை வேண்டுமோ, அவற்றை வளர்த்துக் கொள்பவர்களுக்கு நிச்சயம் நூறு சதவீதம் வேலைவாய்ப்பு உண்டு. அதற்கு பாடத்திட்டத்தை தாண்டி படிக்க வேண்டும்.
இதற்கு பல்வேறு புதுவிதமான படிப்புகளும் உள்ளன. அவற்றில் ஒன்றை குறிப்பிட்டு சொன்னால் Data Science படிப்பு ஆகும். இன்றைய டிஜிட்டல் உலகில் நமது இயக்கம் என்பது நாம் உற்பத்தி செய்யும் தரவுகளின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது.
அது நம் யதார்த்த வாழ்விலும் எதிரொலிக்கிறது என்றே சொல்லலாம். இதன் பின்னணியில் தான் தரவு அறிவியல் என்பது மிகுந்த முக்கியத்துவம் பெறும் ஒன்றாக உருவெடுக்க தொடங்கி இருக்கிறது.
யாருக்கு எளிது தரவு அறிவியல்
எண்கள், கணக்குகளில் ஆர்வம் கொண்ட கணிதம், புள்ளியியல் மாணவர்கள் தரவு அறிவியலை எளிமையாகப் படிக்க முடியும்; கணிதம், புள்ளியியல், கணினி அறிவியல், பொறியியல் படித்தவர்கள் இந்தத் துறையைத் தேர்ந்தெடுப்பது பொருத்தமானதாக இருக்கும். மற்ற படிப்புகளில் இருந்து சற்றே மாறுபட்ட இந்தத் துறையில், கட்டற்ற எண்ணிக்கையிலான தரவுகளைக் கையாள்வதற்கு மன ஆற்றலும் அவசியமாகிறது.
அதேபோல எக்ஸெல் போன்ற நிரல்கள் குறித்த அறிவு இருப்பதும் அவசியம் ஆகும். மேற்குறிப்பிட்ட தகுதிகளேடு தரவு அறிவியலை படிப்பவர்கள் துறை சார்ந்த நிபுணர்களாக ஓளிர முடியும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
கொட்டி கிடக்கிறது?
டேட்டா சயின்ஸ் படித்தவர்களுக்கு, Data Scientist, Data Architect, Data Mining Engineer, Business Intelligence Analyst என ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.
இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் இதற்கான வேலைவாய்ப்புகள் உள்ளதால், வரும் காலங்களில், பல துறைகளில் டேட்டா சயின்ஸ் படித்தவர்கள் முக்கிய பங்கை வகிப்பர்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த படிப்பை, தேசிய அளவிலான தரவரிசை பட்டியில் முதல் இடத்தில் உள்ள சென்னை ஐ.ஐ.டி., இணைய வழியிலான முறையில் டேட்டா சயின்ஸ் படிப்பை வழங்குகிறது.
இது தவிர முன்னணி கல்வி நிறுவனங்கள் நேரடி வகுப்பு முறையுடன் இணைய வழி முறையிலும் இப்படிப்பை வழங்குகின்றன.
முக்கியமாக நோட் பண்ணிக்கோங்க...!
Analytics India Salary Study 2020 ஆய்வு அறிக்கையின்படி, டேட்டா சைன்ஸ் படித்தவர்கள் ஆண்டுக்கு 15.6 லட்சம் ரூபாய் வரை ஊதியம் பெற முடியும். நடுத்தர கம்பெனிகளில் கூட, ஆண்டுக்கு 14.7 லட்சம் ரூபாய் வரையில் டேட்டா சைன்ஸ் படித்தவர்களுக்கு ஊதியம் கொடுக்கிரார்களாம்...!
கவனமாக தேடுங்க...
Data Science என்பது மிகப்பெரிய பாடப்பிரிவு ஆகும். இதை சாதரணமான கல்லூரியில் படிப்பதை முடிந்த வரை தவிர்த்து, உயர் தரமான கல்வி நிறுவனங்கள், தொழில்நுட்ப வல்லூநர்களுடன் கை கோர்த்திருக்கும் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படித்தால், தொழில்நுட்ப நுணுக்கங்களை முழுமையாக படிப்பதோடு, துறை சார்ந்த நிபுணராக பிரகாசமான வாய்ப்பு உண்டு என்பதில் ஐயம் இல்லை.
ஆஹா...! டேட்டா சயின்ஸ் குறித்து தேட ஆரம்பிச்சுட்டீங்க போல...! நாங்க வழங்கியிருக்கும் தகவல் கொசுரு தான்.... முழு விவரங்கள் வேண்டும்னா... முன்னணி கல்வி நிறுவனங்களுக்கு நேரில் போய் தெரிந்து கொள்ளுங்கள். ஸாரி ஸாரி... இப்ப கோவிட் காலம் லா.... அப்ப நேர்ல போகாதீங்க... ஆன்லைன்ல தேடுங்க பாஸ்...