சென்னை: அரசுப் உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக 25 வகையான தொழில் கல்வி படிப்புகளை பள்ளிகளில் தொடங்க மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் ( Rashtriya Madhyamik Shiksha Abhiyan -RMSA) முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் உயர்நிலைப் பள்ளிகளில் 1078-79ம் ஆண்டு வரை எஸ்எஸ்எல்சி என்ற பழைய முறையிலான பள்ளி இறுதி வகுப்பு நடத்தப்பட்டது. அப்போது மேற்கண்ட வகுப்புகளில் படித்த மாணவர்களுக்கு விருப்பப் பாடம் என்ற முறையில் தொழில் கல்வி வைக்கப்பட்டு இருந்தது.

1979ம் கல்வி ஆண்டில் முதல் முறையாக தமிழகத்தில் பிளஸ் 2 முறை அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கு பிறகு எஸ்எஸ்எல்சி வகுப்பில் தொழில் கல்வி முறை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், பள்ளி இறுதி வகுப்பு முடித்து வெளியில் வரும் மாணவர்கள் பெரிய அளவில் வேலைக்குச் செல்ல முடியாமல் தினக் கூலி வேலைக்கு செல்ல வேண்டியுள்ளது. அத்துடன் பள்ளி இறுதி வகுப்புக்கு பிறகு அந்த மாணவர்கள் ஐடிஐ போன்ற தொழில் கல்வியில் சேர்ந்து படிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
அதனால் எஸ்எஸ்எல்சி வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளியிலேயே தொழில் கல்வி படிப்புகளையும் நடத்திவிட்டால், எதிர் காலத்துக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது.
இதையடுத்து அந்தந்த பகுதியில் உள்ள தொழில் சார்ந்த படிப்புகளை பள்ளிகளில் பாடமாக வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐடி எலக்ட்ரானிக்ஸ், விவசாயம், நகை தயாரிப்பு உள்ளிட்ட 25 வகையான படிப்புகளை 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடமாக வைக்கவும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக உயர்நிலைப் பள்ளிகளில் வகுப்பறை வசதி, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இருக்கிறதா என்றும் ஆய்வு செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications












